பயந்தோர் பழிச்சல்
பயந்தோர் பழிச்சல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. மானுடப் பெண் எனத் தெளிந்த ஆண்மகன் தலைவி மீது கொண்ட காதலால் அடையும் துன்ப உணர்வுகள் கூறப்படுகின்றன.தலைவன் தான் கண்டு காதலுற்ற பெண்ணின் பெற்றோரை வாழ்த்துவதைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் இவளைப் பெற்றவர்கள் நீடுவாழ்வாராக எனப் பெற்றவர்களை வாழ்த்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
இவள் பயந்து எடுத்தோர் வாழியர் நெடிதென
அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று
(கொளு 14.5)
வெண்பா
கல்அருவி ஆடிக் கரும்களிறு கார் அதிரும்
மல்லலம் சாரல் மயில் அன்ன - சில்வளைப்
பல ஒலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடு வாழியரோ (289)
பொருள்: வளையல் சூடியும் பெருங்கூந்தலைக் கொண்டும் மயிலைப்போலவும் இருக்கும் இவ்வழகிய பெண், யானைகள் முழங்கும் மலைப்பகுதியில் நீராடி மகிழ்கிறாள்; இவளைப் பெற்றவர்கள் மண்ணுலகில் நீண்ட காலம் வாழ்வாராக.
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2025, 20:20:57 IST