under review

பத்மா சோமகாந்தன்

From Tamil Wiki
பத்மா சோமகாந்தன்

பத்மா சோமகாந்தன் (மே 3, 1934 - ஜூலை 15, 2020) ஈழத்து எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஆசிரியர், பேச்சாளர், விமர்சகர். பெண்ணிய ஆய்வுகள், கட்டுரைகள் எழுதினார். இலக்கிய களச் செயற்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

பத்மா சோமகாந்தன்

பத்மா சோமகாந்தன் இலங்கை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஏரம்ப பஞ்சநதீஸ்வரக் குருக்கள், அமிர்தம்மா இணையருக்கு மே 3, 1934 ல் நான்காவதாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை. இயற்பெயர் பத்மா. பாடசாலையில் பத்மாம்பாள் என்று அழைக்கப்பட்டார். பத்மாவின் தாயாரின் மூத்த சகோதரர் சபாரத்தின ஐயரும் ஒரு எழுத்தாளர், காரை நகரிலிருந்து ‘கலிகால தீபம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர்.

பத்மா சோமகாந்தன் ஆரம்பக் கல்வியை யாழ். இந்துத் தமிழ் வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். இந்து மகளிர் கல்லூரியில் தனது சகோதரிகளுடன் இணைந்து அடுத்த கட்ட கல்வியைத் தொடர்ந்தார். உயர் கல்வி கற்பதற்கு உறவினர்கள் மத்தியலிருந்து பெரும் எதிர்ப்பு வந்தபோது தாயாருடைய ஒத்துழைப்பின் பேரில் படித்தார்.

பத்மா சோமகாந்தன் கணவருடன்

தனிவாழ்க்கை

பத்மா எழுத்தாளர் நாகேந்திரக் குருக்கள் சோமகாந்தனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். கணவர் இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் பணியாற்றினார். 2006-ல் கணவர் இறந்தார்.

உதவி ஆசிரியராகப் பதவியேற்று பகுதித் தலைவராகவும் பின் முதலாம் தர அதிபராகவும் ஓய்வு பெறும்வரை கல்விப்பணியில் ஈடுபட்டார். உதவிக் கல்விப்பணிப்பாளராக பதவி உயர்வு கிடைத்தும் கணவரின் சுகவீனம் கருதி ஓய்வு பெற்றார்.

ஆசிரியப்பணி

படிப்பு முடிந்து ஆசிரியராக பணியமர்ந்தார். பணிநிலை உயர்வு பெற்று நல்லூர் சாதனா கல்லூரியிலும், யாழ். மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் அதிபராகப் பணியாற்றினார். யாழ் கல்வி திணைக்களத்தில் யாழ்ப்பாணத்தின் உதவி கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். கணவரின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்று கொழும்பில் குடியேறினார்.

அமைப்புப் பணிகள்

  • ஊடகத்துறை சார்ந்த பெண்களின் ஆளுமையை வலுப்படுத்தவும் அவர்களின் நன்மைகளைக் கவனிப்பதற்கும் இயங்கிய 'ஊடறு' அமைப்புக்குத் தலைமைதாங்கினார்.
  • முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கணவர் சோமகாந்தனுடன் இணைந்து பணியாற்றினார்.
  • பத்மா சோமகாந்தன் கொழும்பு இந்து மாமன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், நூலகச் செயலாளராகவும், கொழும்பு சாரதா சமிதியின் அகில இலங்கை கட்டுரைப்போட்டிப் பொறுப்பாளராகவும், கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் உபதலைவியாகவும், செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
  • கொழும்புத் தமிழ்சங்கத்தின் கல்விச் செயலாளராகவும், உறுப்புரிமைச் செயலாளராகவும் , உபதலைவியாகவும் பதவி வகித்தார்.
  • ஆறுமுக நாவலர் சபை மற்றும் நாவலர் நற்பணிமன்றம் ஆகியவற்றின் உதவிச் செயலாளராக பணிபுரிந்தார்.
  • 'விழுது' மனித மேம்பாட்டுக்கான மையத்தின் ஊடகத் துறையில் பெண்கள் அமைப்பின் தலைவியாகவும், ஒளவை இலக்கிய வட்டத்தின் தலைவியாகவும் பணிபுரிந்தார்.
  • அகில இலங்கை அரச எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவியாகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவியாகவும் பணிசெய்தார்.
  • அகில உலக சிற்றிதழ் சங்கக் கொழும்புக் கிளையின் தலைவியாகவும், இலங்கை சின்மயா மிஷன் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டார்.
  • கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் அரைநாள் மகளிருக்கான மங்களம்மாள் அரங்கை ஒழுங்கு செய்து முழுப்பொறுப்பினையும் ஏற்று சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல ஆய்வு முயற்சிகளுக்குத் தலைமையேற்றுச் செயற்பட்டார்.

இதழியல்

பத்மா சோமகாந்தன் பெண்ணின் குரல் என்ற இதழின் ஆசிரியராகப் பதினொரு ஆண்டுகள் பணியாற்றினார். 'சொல்' என்ற இதழின் ஆசிரியராவும் பணியாற்றினார்.

ஆய்வுகள்

  • கொழும்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் தேவைக்காக ‘தமிழ்நிலை சிந்தனையில் ராஜம் கிருஷ்ணன் நாவல்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.
  • 1996-ல் வடகிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் சார்பில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
  • 2001-ல் கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக்கிய மாநாட்டில் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறுகதை இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

பத்மா சோமகாந்தன் 1951-ல் சுதந்திரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் 'புதுமைப்பிரியை' என்ற புனைபெயரில் 'இரத்தபாசம்' என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசு பெற்றார். இவரோடு இதே போட்டியில் பங்குபற்றியிருந்த எழுத்தாளர் டானியல், எழுத்தாளர் டோமினிக் ஜீவா ஆகியோர் இரண்டாம் மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர். தொடர்ந்து கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கியக் கட்டுரைகள், பெண்ணிய ஆய்வுகளை எழுதினார். மேடைப்பேச்சுக்களில் பேசினார். 'Garland of Fifty Flowers' அகில உலக சின்மயாமிஷன் தலைவர் சுவாமி தேஜோ மாயானந்தரின் கேள்வியும் பதில்களும் கொண்ட தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல்.

தினக்குரல் பத்திரிகையில் சாதனைப் பெண் பகுதியில் எழுதினார். வீரகேசரியில் 2002 முதல் 2005 வரை எழுதிவந்தவை 'நெஞ்சுக்கு நிம்மதி' என்னும் கேள்வி-பதில் நூலாக வெளிவந்தது. வீரகேசரி - கலைக்கேசரி சஞ்சிகையில் "நினைவுத் திரை" என்னும் தலைப்பில் இசை ஆளுமைகள் குறித்துத் தொடர்ந்து எழுதினார். தமிழ் சிறுவர்களுக்காக 'Stories from Hindu Mythology' என்ற ஆங்கில நூலை எழுதினார். தினகரன் வாரமஞ்சரியில் ‘வண்ணமலர்’ என்ற தலைப்பில் புதுமையான தொடர்கதையை அன்று பிரபலம் பெற்றிருந்த கே. டானியல் பத்மா சோமகாந்தன், காவலூர் இராசதுரை, உதயணன், ஈழத்து சோமு, ஓ.ரகுநாதன் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொருவராக எழுதினர்.

பத்மா சோமகாந்தனின் கதைகளும் கட்டுரைகளும் சுதந்திரன், கலைச்செல்வி, தாமரை, பெண்ணின் குரல், வீரகேசரி, தமிழன், கல்கி, சொல், ஈழகேசரி, சமூகத்தொண்டன், ஞானம், சங்கத்தமிழ், தினகரன், உதயன், மல்லிகை, ஓலை, புதுமை இலக்கியம், காலைக்கதிர், அகவிழி, தினபதி, ரமணி அஞ்சலி, இலங்கை விகடன் வரதர் ’80’, தினக்குரல், கலாஜோதி, நிவேதினி, மங்கை, செங்கதிர், Voice of Chinmaya போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.

பத்மா சோமகாந்தனின் ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ நூல் பல்துறைகளிலும் முன்னணி வகித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை மகளிர் பற்றிய கட்டுரைகள் நிரம்பிய நூல். ‘ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்’ நூலானது மறைந்த முக்கிய பெண் ஆளுமைகள் பதினைந்து பேரைப் பற்றியது. இவரது ‘அனுமான் கதை’ என்ற படைப்பு சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. முதன்முதலாக தமிழ்மொழியில் எழுதப்பெற்ற ‘சுவாமி சின்மயானந்தர்’ நூல் அவரது வாழ்க்கை பற்றிய வரலாற்று நூல். ‘நெஞ்சுக்கு நிம்மதி -பதில் தருகிறார் பத்மா’ என்ற நூல் இளைஞர்களின் ஐயங்களுக்கும் கேள்விகளுக்குமான பதில்களைக் கொண்ட நூல். 'பாராமுகங்கள் சில பார்வைகள்' என்ற உளவியல் நூலும் அதே போல் கேள்வி பதில் பாணியில் எழுதப்பட்டது.

விருதுகள்

  • கடவுளின் பூக்கள் சிறுகதைத்தொகுதி லில்லி தேவசிகாமணி பரிசு பெற்றது.
  • ‘வேள்வி மலர்கள்’ சிறுகதைத் தொகுப்பு சென்னை ‘இந்து’ நாளிதழ் பாராட்டைப் பெற்றது.
  • ‘புதிய வார்ப்புகள்’, ‘கரும்பலகைக் காப்பியங்கள்’ சிறுகதைத் தொகுதிகள் சார்க் மகளிர் சங்கப் பரிசு பெற்றன.
  • வடகிழக்கு மாகாணம் பண்பாட்டமைச்சின் பரிசு பெற்ற ‘இற்றைத் திங்கள்’ சிறுகதைத் தொகுப்பு யாழ் இலக்கிய வட்டத்தின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
  • ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது.
  • சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்திய ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசாக தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் பத்மா சோமகாந்தனுக்கு வழங்கப்பட்டது.
பட்டங்கள்
  • இலக்கியக் கலாவித்தகி பட்டம்
  • செஞ்சொற்செல்வி பட்டம்

மறைவு

பத்மா சோமகாந்தன் ஜூலை 15, 2020-ல் தனது எண்பத்தி ஆறாவது வயதில் கொழும்பில் காலமானார்.

நூல்கள்

  • ஈழத்து மாண்புறு மகளிர்
  • ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்
  • நெஞ்சுக்கு நிம்மதி
  • பக்த அனுமன் கதை
  • புதிய வார்ப்புகள்
  • கடவுளின் பூக்கள்
  • வேள்வி மலர்கள்
  • இற்றைத் திங்கள்
  • பாரா முகங்கள் சில பார்வைகள்
ஆங்கிலம்
  • Stories from Hindu Mythology

உசாத்துணை


✅Finalised Page