under review

பத்து ஆராங்

From Tamil Wiki
பத்து ஆராங்

பத்து ஆராங் மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். பிரிட்டனின் தொழிற்புரட்சியின் காரணத்தினால் மலாயாவில் 20--ம் நூற்றாண்டில் நிலக்கரியின் செல்வாக்கு மேலோங்கியது. மலாயாவில் நிலக்கரி கண்டறியப்பட்ட முதல் இடமாக பத்து ஆராங் நகரம் விளங்குகின்றது.

பின்னணி

1908-ல் ஹஜி அப்துல் ஹடி பத்து ஆராங்கில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கரியின் மாதிரி கோலா குபு பாருவில் உள்ள சுரங்கத்துறையின் மேற்பார்வையாளருக்கு அனுப்பப்பட்டது. சுரங்கத்துறையின் மேற்பார்வையாளர் வழி 1909-ல் ஒருங்கிணைந்த மலாய் மாநிலத்தின் நிலவியல் துறைக்கு நிலக்கரியின் மாதிரி அனுப்பப்பட்டுச் சோதிக்கப்பட்டது. பத்து ஆராங்கில் கண்டுபிடிக்கப்பட்டது நிலக்கரிதான் என்பது நிலவியல்துறை ஆய்வின்வழி உறுதிசெய்யப்பட்டது. 1910-ல் ஒருங்கிணைந்த மலாய் மாநிலத்தின் சுரங்கத்துறை அதிகாரிகள் பத்து ஆராங்கிற்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மே 5, 1910-ல் மலாயா அரசின் உயர திகாரி (High Commissioner) பத்து ஆராங்கிற்கு வருகை புரிந்தார். அதன் பின்னர், பத்து ஆராங்கில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களைக் குத்தகைக்கு விடும் பணிகள் மலாய் மாநில கூட்டரசின் அரசால் தொடங்கப்பட்டன. ஜூன் 1910-ல் லண்டன் மற்றும் மலாய் முதலாளி வர்க்கத்தினர் பிரிட்டிஷ் ஆலோசகருக்கு நிலக்கரி சுரங்கக் குத்தகை குறித்த ஒப்பந்த விண்ணப்பங்களை அனுப்பினர். இறுதியில் டிசம்பர் 1910-ல் Rawang Federated Malay States Coal Syndicate Ltd நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்டது.

பத்து ஆராங் 2.jpg

Rawang Federated Malay States Coal Syndicate Ltd நிறுவனம் வைர துரப்பணத்தையும் கை துளையிடும் கருவிகளையும் கொண்டு பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் உள்ள நிலக்கரியைத் தோண்டியது. 1912-ல் சுரங்கத்தொழிலுக்கு வணிக மதிப்பு -ல்லாததை உணர்ந்து, Rawang Federated Malay States Coal Syndicate Ltd நிறுவனம் பத்து ஆராங்கைவிட்டு வெளியேறியது.

Federated Malay States Coal Syndicate Ltd நிறுவனம் பத்து ஆராங்கைவிட்டு வெளியேறிய பிறகு 1913-ல் ஜோன் ஹர்ஷிபாஃல்ட் ரூஸ்செல் என்பவருக்குப் பத்து ஆராங் நிலக்கரிக்கான குத்தகை வழங்கப்பட்டது. ஜோன் ஹர்ஷிபாஃல்ட் ரூஸ்செல் மலாயாவில் செயலாற்றிய முக்கிய வர்த்தகர்களில் ஒருவராவார். 1904-ல் J.A. Russell and Co நிறுவனத்தை உருவாக்கி ஈயச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1913-ல் நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்டார்.

J.A. Russell

ஜூன் 20, 1913-ல் ஜோன் ஹர்ஷிபாஃல்ட் ரூஸ்செல் Malayan Colleries Limited எனும் நிறுவனத்தை தொடங்கி பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்த தொடங்கினார். Malayan Colleries Limited நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக ரூஸ்செல் செயலாற்றினார். அவரோடு ஏடி அல்லன், லோக் யியூ, எஎ ஹேங்கலேர், ஃஹூ சோ சூன், ஆர்.பி.பிரேஷ் ஆகியோரும் பங்குதாரர்களாகத் திகழ்ந்தனர்.

பத்து ஆராங்கில் Malayan Colleries Limited நிறுவனத்தின் வளர்ச்சி

பத்து ஆராங்கின் குத்தகையைப் பெற்ற பிறகு, 1915--ம் ஆண்டு Malayan Colleries Limited நிறுவனம் குவாங் தொடங்கி பத்து ஆராங் வரை இரயில் பாதை அமைக்கும் அனுமதியை மலாயா இரயில் நிறுவனத்திடமிருந்து பெற்றது. இரயில் பாதைகள் உருவாக்கத்தின் வழி பத்து ஆராங்கில் நிலக்கரி சுரங்கத்தின் வளர்ச்சியையும் அதனைச் சார்ந்த பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது . Malayan Colleries Limited நிறுவனம். நாட்டின் முதன்மை நிலக்கரி உற்பத்தியாளராகத் திகழ்ந்தது. இந்நிறுவனம் மலாயா இரயில் நிறுவனத்திற்கு மட்டுமின்றி மின்சார உற்பத்தி நிறுவனங்களான Bangsar Power Station மற்றும் Perak River Hydro Electric Co போன்ற நிறுவனத்திற்கும் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்தது.

நிலக்கரி தவிர்த்து பத்து ஆராங்கில் உள்ள மற்ற வளங்களான மணல், கற்கள், காட்டுமரம் போன்றவற்றின் மூலமும் லாபத்தை Malayan Colleries Limited நிறுவனம் ஈட்டியது. நிலக்கரி சுரங்கத்தைத் தோண்டுவதிலிருந்து தொடங்கிய பணி பின்னர் இரயில் பாதை அமைத்தல், நிலக்கரி ஏற்றுமதி , வெட்டுமரம் , மண், கற்கள், செங்கல் உற்பத்தி என Malayan Colleries Limited நிறுவனம் விரிவடையத் தொடங்கியது.

பத்து ஆராங் 4.jpg

அதோடு சிறு கிராமமாக இருந்த பத்து ஆராங்கில் மருந்தகம், மருத்துவமனை, வீடுகள், சீன மற்றும் தமிழ் ஆரம்பப்பள்ளிகள் என வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வளர்ச்சியடையும் நகராக உருமாற்றம் பெற்றது.

பத்து ஆராங்கில் இந்தியத் தொழிலாளர்களின் வருகை

பத்து ஆராங் 5.jpg

பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்ய சீனத்தொழிலாளர்கள் முதன்மைத் தேர்வாக இருந்தனர். நிலக்கரி சுரங்கத்தில் மோசமான நிலையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் வேலை செய்வதை உணர்ந்த சீனத்தொழிலாளர்கள் அடிமைகளாக -ல்லாமல் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் ஈடுபட்டனர். வேலைக்குச் செல்லாமலிருந்து தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டினர். தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிலைநாட்ட Malayan Colleries Limited நிறுவனம் 1920-ல் இரயில் பாதைகளை இணைக்கும் வேலைக்காக இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு வந்தது.

Malayan Colleries Limited நிறுவனத்தின் கீழ் இரயில் பாதை அமைக்கும் வேலைக்காகக் கொண்டு வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களே பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யத் தொடங்கினர். 1936-ல் சுமார் 100 இந்தியத் தொழிலாளர்கள் நிலத்தடி சுரங்கத்தில் வேலை செய்தனர். 1949-ல் Malayan Colleries Limited நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களில் 40% தொழிலாளர்கள் இந்தியத் தொழிலாளர்களாவர். 1954--ம் ஆண்டு சீன, மலாய் மற்றும் பிற இனங்களைக் காட்டிலும் இந்தியத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்தனர்.

பத்து ஆராங்கில் இந்தியத் தொழிலாளர்களின் நிலை

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள்

பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் தொடக்கத்தில் பெரும்பான்மையோராகச் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததால், ஊதியம் அதிகம் கிடைக்கும் வேலைகளான சுரங்கம் வெட்டுதல், நிலக்கரியை அனுப்புதல் போன்ற வேலைகளைச் சீனத் தொழிலாளர்கள் செய்தனர். பின்னர் பத்து ஆராங்கில் திரு. பெர்ஃக் என்பவரால் உருவாக்கப்பட்ட மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தில் இந்தியத் தொழிலாளர்கள் முழுமையாக நிலக்கரி சுரங்க வேலையில் ஈடுபடத் தொடங்கினர்.

பத்து ஆராங்கில் சீனத்தொழிலாளர்களைக் காட்டிலும் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்பட்டது. சீனத் தொழிலாளர்களும் இந்தியத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்துவிடக்கூடாது என்பதற்காக ஊதியத்தை யுக்தியாகக் கையாண்டு சீன, இந்தியத் தொழிலாளர்களுக்கு இடையில் பாகுபாடு உருவாக்கப்பட்டது.

மலாயா கம்யூனிஸ் கட்சியும் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களும்

1936-ல் நிலக்கரி தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பத்து ஆராங்கின் தொழிலாளர்களின் நிலையைக் குறித்து மலாயா கம்யூனிசக் கட்சி அறிந்துகொள்ள 1936-ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் துணையாக அமைந்தது. இதன்வழியே மலாயா கம்யூனிசக் கட்சிக்கும் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கும் உறவு மேம்பட ஆரம்பித்தது.

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள்

1936-ல் மலாயா கம்யூனிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான சான் ஹன் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தின் தொழிலாளர்களிடம் உரையாடத் தொடங்கினார். 50% ஊதிய உயர்வு, சம்பளத்தில் பிடித்தம் -ல்லாமை, 8 மணி நேர வேலை, சாலை நிறுவனம்தான் சாலையைச் சுத்தம் செய்ய வேண்டும், தொழிலாளர்களை எதிர்க்கும் வகையிலான வேலை நிறுத்தம் இருக்கக்கூடாது, தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தி தரவேண்டும் போன்ற கோரிக்கைகளைப் பத்து ஆராங் தொழிலாளர்கள் முதலாளிகளிடம் முன் வைக்க வேண்டும் என்பதனைச் சான் ஹன் அத்தொழிலாளர்களுக்கு வரையறுத்துத் தந்தார்.

1936-ல் மலாயா கம்யூனிசக் கட்சியின் துணையோடு பத்து ஆராங்கில் Coal Workers Union என்ற பெயரில் தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பத்து ஆராங் தொழிலாளர்கள் Coal Workers Union தொழிற்சங்கத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அதோடு, சோவியத் எனும் அமைப்பை உருவாக்கி அதன் கீழ் தங்களின் போராட்டங்களையும் நடத்தினர். மலாயா கம்யூனிசக் கட்சியில் செயல்படும் சூய் தோங் என்பவரின் வழி அத்தொழிலாளர்கள் தங்களைச் சோவியத் முறையிலான போராட்டத்திற்குத் தயார்படுத்திக் கொண்டனர். சூய் தோங் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளும் குழு, தொழிலாளர்களில் துரோகிகளை அடையாளங் கண்டு கண்காணிக்கும் குழு போன்ற குழுக்களை உருவாக்கினார். வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளும் குழு தொழிலாளர்களின் மத்தியில் கட்டொழுங்கை விதைத்ததோடு ஒட்டுமொத்தமான பாதுகாப்புகளையும் உறுதிச் செய்தது.

ஓ சீ மின்

தொழிலாளர்களுக்குக் கம்யூனிச சிந்தனை வகுப்புகளும் நடத்தப்பட்டன. பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் முதலாளிகளின் துணையின்றியும் உணவு, சுகாதாரம் என எந்தவொரு எதிர்பார்ப்பின்றியும் சுயமாக இயங்க ஆரம்பித்தனர். இதன் மூலம் தொழிலாளர்களால் 1937-ல் வேலை நிறுத்தத்தை நடத்த முடிந்தது.

பத்து ஆராங்கில் நிகழ்ந்த வேலை நிறுத்தம்

1824--ம் ஆண்டு தொடங்கி மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்த பொழுது முதலாளித்துவத்தினால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் வகையில் 1933--ம் ஆண்டு முதல் 1936--ம் ஆண்டுகளுக்கிடையில் பல வேலை நிறுத்தப் போராட்டங்கள் மலாயாவில் நடந்தன. கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சியிலும் பத்து ஆராங் நகரில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலும் இந்தியத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவ்வகையில் பத்து ஆராங் நகரில் நிகழ்ந்த வேலை நிறுத்தங்கள்;

1936
பத்து ஆராங் 8.jpg

பத்து ஆராங்கில் நவம்பர், 1936-ம் ஆண்டில் வேலை நிறுத்தம் நிகழந்தது. வடக்கு சுரங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். பின்னர், OPENCAST MINE தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். முதன்மை நிர்வாகத்தின் அலுவலகத்தை நோக்கி பேரணியாய் தொழிலாளர்கள் நடந்தனர். மின்சாரத்தை நிறுத்துவதற்காக மின்சார என்ஜின் பகுதியை நோக்கி நடக்கும்பொழுது காவல் அதிகாரிகளின் தாக்குதலுக்குத் தொழிலாளர்கள் ஆளாயினர். நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரவாங்கிலிருந்து கூடுதல் காவல் அதிகாரிகள் கொண்டு வரப்பட்டனர். இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது 50% ஊதிய உயர்வு உட்பட தொழிலாளர்கள் 14 கோரிக்கையினை முன்வைத்தனர். தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைக்குச் செல்லமாட்டோம் என உறுதியாக இருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குச் சீன நாட்டுத் தூதர் உதவியாக இருந்தார். இறுதியாக 6 முதன்மை கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.அவை:

  • தொழிலாளர்களின் ஊதியத்தை 50% உயர்த்துவது.
  • திறந்தவெளி (OPENCAST MINE) சுரங்கத்தில் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.9 மணி நேர வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
  • தொழிலாளர்களுக்கு எதிராக விதிக்கப்படும் கூடுதலான அபராதங்களுக்கு எதிர்ப்பு.
  • நிலத்தடி வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான பாதையை நிர்வாகம் அமைக்க வேண்டும்.
  • வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, எந்தவொரு தொழிலாளியையும் நாடுகடத்துதல் கூடாது.
  • போலீஸ் கைது செய்த அனைத்துத் தொழிலாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும், போலீஸ் சுட்டதில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 10% ஊதிய உயர்வோடு முடிவுக்கு வந்தது. இத்தீர்விற்குப் பின்னர் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். உடன்படாத தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

1937

1936-ல் வேலை நிறுத்தத்தின் விளைவாக வழங்கப்பட்ட 10% ஊதிய உயர்வு, பொருட்களின் விலை ஏற்றத்தினால் சுரங்கத் தொழிலாளர்களுக்கு அவ்வூதியம் போதவில்லை. இந்நிலையைக் குறித்து தொழிலாளர்கள் குரல் எழுப்பியதால் அவர்களின் ஊதியம் இன்னும் 5% உயர்த்தப்பட்டது. ஆனால், பங்குதாரர்களுக்கு 12 1/2 விழுக்காடு லாபம் வழங்கப்படுவது தொழிலாளர்களின் மத்தியில் மனநிறைவை அளிக்கவில்லை. ஆக, மார்ச் 24, 1937 அன்று Coal Workers Union வேலை நிறுத்தத்தை மேற்கொண்டது.

மார்ச் 24, 1937 அன்று வேலை செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பைப் பெற்றவுடன், தொழிலாளர்கள் வேலை செய்வதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 5000 தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தனர். நிலைமையை அறிந்துகொண்ட நிர்வாகி தொழிலாளர் தரப்பின் தலைவர்களோடு சந்திப்பை நடத்தினார். அச்சந்திப்பில் தொழிலாளர்களின் 23 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

பத்து ஆராங் 9.jpg

தங்களின் கோரிக்கைக்குப் பதில் கிடைக்காத நிலையில், தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வெள்ளைத் துணியில் எழுதி, பத்து ஆராங் சுரங்கப் பாதையைச் சுற்றி ஊர்வலம் சென்றனர். வேலை நிறுத்தம் தொடர்ந்து அடுத்த நாளும் நீடித்தது. 10% ஊதிய உயர்வு வழங்குவதாக முதலாளிகள் கூறியும் அதற்கு அடிபணியாமல் தொடர்ந்து தங்களின் போராட்டத்தைத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.

தனித்து இயங்கும் அத்தொழிலாளர்களின் மனவுறுதியைக் கண்டு அரசாங்கமும் Malayan Colleries நிறுவனமும் பதற்றமடைந்தது. முதலாளித்துவத்திற்குச் சவால்விடும் அளவிற்கு இப்போராட்டம் அமைந்தது. இப்போராட்டம் மலாயாவில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அரசாங்கம் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை வீழ்த்துவதற்காகப் போர்டிக்சனிலிருந்து 200 ரெஜிமன் மலாயுவைச் சேர்ந்த இராணுவமும் 6 ஐரோப்பா இராணுவ அதிகாரிகளும் 4 வாரண்ட் அதிகாரிகளும் கொண்டு வரப்பட்டனர். இருப்பினும், அத்தொழிலாளர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.

தொழிலாளர்கள் முன்வைத்த 23 கோரிக்கைகளில் 50% ஊதிய உயர்வும் செராஸ் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்கும் கோரிக்கையும் முதலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, அரசாங்கம் சோவியத் குழுவைத் தாக்க முடிவுசெய்தது. அதற்காக 280 பஞ்சாபி இராணுவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மார்ச் 27, 1937 அன்று தொழிலாளர்களின் கூட்டு இடம் 200 காவல் அதிகாரிகளால் தாக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கட்டைகளையும் இரும்புகளையும் பயன்படுத்தினர். ஆனால், அவை துப்பாக்கிக்கு ஈடாக அமையாததால் ஒருவர் கொல்லப்பட்டார், அறுவர் காயமடைந்தனர். 116 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நிலைமை மோசமாவதை அறிந்த தொழிலாளர்கள் அருகில் சோவியத் குழுவின் முதன்மையானவர்கள் இருக்கும் காடுகளுக்குத் தப்பித்துச் சென்றனர். முதலாளிகள் சுரங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். தொழிற்சாலை மார்ச் 28, 1937 வழக்கம் போல் இயங்க ஆரம்பித்தது. மார்ச் 29, 1937 ரெஜிமன் மலாயு இராணுவம் தொழிற்சாலை பகுதியிலிருந்து வெளியேறியது.

பிரிட்டிஷ் அரசாங்கம் பத்து ஆராங் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடித்திருந்தாலும் Malayan Colleries Limited நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தது. மலாயாவில் இயங்கிய ஒரே நிலக்கரி சுரங்க நிறுவனம் Malayan Colleries Limited நிறுவனம்தான். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் மூலப்பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இந்நிறுவனங்கள் இருந்ததால் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கும் சூழல் உண்டாகியிருந்தது. 1937-ல் நிகழ்ந்த போராட்டத்தின் விளைவாக 10% ஊதிய உயர்வு வழங்கப்பட்டதோடு துணை குத்தகை நிறுவனமும் நீக்கப்பட்டது. துணை ஒப்பந்த குத்தகையாளர்கள் -ல்லாமல் நேரடியாகத் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்வதற்காக Malayan Colleries Limited நிறுவனம் தொழிலாளர் இலாகா ஒன்றையும் நிறுவியது.

1937-ல் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட போராட்டம் மலாயா முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மலாயாவிலுள்ள மற்ற தொழிலாளர்களும் இவ்வாறு போராடக் கூடாது என்பதற்காக Malayan Colleries Limited நிறுவனம் மலாயாவின் தொழிலாளர்களின் ஊதியத்தை வரையறுக்கவும் சிறப்புத் தொழிலாளர் ஆணையத்தை உருவாக்கும்படியும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது. ஆகவே, தொழிலாளர் போராட்டங்களினால் துணை குத்தகை நிறுவனங்கள் அகற்றப்பட்டன, வார ஊதியம் என்ற அடிப்படையில் மாதம் 3 முறை ஊதியமும் வழங்கப்பட்டது.

1939

1939-ம் ஆண்டு மீண்டும் பத்து ஆராங்கில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. உலகச்சந்தையில் நிலக்கரி தேவை குறைந்தவுடன், 1937-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியத்தை வழங்குவது நிறுவனத்திற்கு நஷ்டத்தை இழைக்கும் என்பதனால், தொழிலாளர்களின் ஊதியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. உலகச் சந்தையில் நிலக்கரியின் விலையைப் பொறுத்து ஊதியம் தீர்மானிக்கப்படும் என்ற தீர்ப்பு தொழிலாளிகளின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஊதியக் குறைவு என்பது வாழ்க்கை சூழலுக்கு ஏற்ற தீர்வாக அமையாததால் தொழிலாளர்கள் 1939-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர், 1939-ல் தொழிலாளர்கள் 4 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். 50% ஊதிய உயர்வை உட்படுத்தி இன்னும் 18 கோரிக்கைகளோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதலாளிகள் மாற்று யோசனையாக அலவான்ஸ் வழங்குவதாகக் கூறினர். இறுதியில் தொழிலாளர்களின் ஊதியத்தை உலகச்சந்தை விலை அடிப்படையில் வழங்கும் முறை அகற்றப்பட்டது.

1941

ஏப்ரல் 7, 1941-ல் பத்து ஆராங்கில் மீண்டும் அதிகமான ஊதிய கோரிக்கையை முன் வைத்து 5000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வேலை நிறுத்தத்தை இந்தியத் தொழிலாளர் ஆர்வாளர் ஆர். எச். நாதன் முன்னெடுத்தார். நிலத்தடியின் வெளியே வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நிர்வாகம் முன் வைக்கும் 15% ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டாலும் நிலத்தடியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 20% ஊதிய உயர்வை எதிர்பார்த்தனர். இறுதியில் 12% ஊதிய உயர்வுக்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனைச் சில தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். சில இந்தியத் தொழிலாளர்களால் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவாக 500 தொழிலாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டதோடு பத்து ஆராங்கைவிட்டு வெளியேறவும் கட்டளையிடப்பட்டது. இச்சம்பவம் மற்ற தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியதால், அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பினர்.

இரண்டாம் உலகப்போர் மற்றும் ஜப்பான் ஆட்சிக் காலத்தில் பத்து ஆராங்

1939--ம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டாம் உலகப்போரின் இடையிலே ஐரோப்பிய முதலாளிகள் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தைவிட்டு 1942-ல் வெளியேறினர். சுரங்கத் தொழிலைச் சார்ந்த அனைத்தையும் கோலாலம்பூருக்கு இடம் மாற்றினர். பின்னர், சிங்கப்பூருக்கு இடம் மாறியது. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில், மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி 1941--ம் ஆண்டு தொடங்கியது. ஜப்பான் ஆட்சிக்காலத்தின் பொழுது பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தையும் அதன் தொழிற்சாலையையும் ஜப்பான் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

கைவிடப்பட்ட பத்து ஆராங்கின் நிலக்கரி சுரங்கப் பாதை

1941--ம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே பத்து ஆராங்கில் மலாயா கம்யூனிசக் கட்சி செயல்பட்டது. மலாயா கம்யூனிசக் கட்சி ஜப்பானியர் எதிர்ப்பு இராணுவத்தின்(Malayan People Anti Japanese Army,MPAJA) மூலம் பத்து ஆராங்கில் ஜப்பானியர்களை எதிர்த்தனர். ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்ற பிறகு, மீண்டும் பத்து ஆராங் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குக் கீழ் செயல்படத்தொடங்கியது. Malayan Colleries Limited நிர்வாகத்தை British Military Adminstration 1945-ல் தன்வசப்படுத்தியது. ஜப்பான் ஆட்சிக்காலத்தின் பொழுது, ஜப்பானியர்களின் அலட்சியத்தால் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் சேதாரங்கள் ஏற்பட்டன. அதனைச் சீரமைக்க அதிக செலவு உண்டாகும் என்பதனால் British Military Adminstration வேலையிலிருந்து தொழிலாளர்களை நீக்க முடிவெடுத்தது.

அங்குள்ள தொழிலாளர்களுக்குப் பதிலாக ஜப்பான் கைது செய்திருந்த கைதிகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தினர். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து ஆராங்கில் குறைந்து கொண்டே வந்தது. இதனை எதிர்த்து அங்குள்ள தொழிலாளர்களும் போராடிக் கொண்டேதான் இருந்தனர்.

பத்து ஆராங்கில் தி.மு.காவும் தமிழர் திருநாளும்

கைவிடப்பட்ட பத்து ஆராங்கின் நிலக்கரி சுரங்கம்

பத்து ஆராங்கில் இந்திய அமைப்புகளில் தி.மு.க மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. அதோடு, பத்து ஆராங்கில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளும் தமிழர்களால் கொண்டாடப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தங்கிய வீடு

காமராஜர் வருகை

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கு. காமராஜர் 1954--ம் ஆண்டுக்கு முன்னர் பத்து ஆராங்கிற்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தார். காமராஜர் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் காமராஜர் பேசியபோது தி.மு.க வைச் சேர்ந்த பிரமுகர் பிச்சை தொடுத்த கேள்விகளால் கோபமடைந்த காமராஜர் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் காமராஜர் ரவாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். ரவாங்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பத்து ஆராங் மக்கள், மண்டபத்திற்குள் விடாமல் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காந்தியின் இறப்பை அறிந்த பத்து ஆராங் இந்தியத் தொழிலாளர்கள்

ஜனவரி 30,1948-ல் காந்தி இறந்த செய்தியை அறிந்த பத்து ஆராங் இந்தியர்கள் அடுத்த 16 நாட்களுக்குத் துக்கம் அனுசரித்தனர். இந்த 16 நாட்களும் பத்து ஆராங்கில் காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாரும் மதுவருந்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

பத்து ஆராங்கில் மலாயா கணபதி

மலாயா கணபதி தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர்களில் ஒருவர். கைத் துப்பாக்கியும் 6 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக மலாயா கணபதி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் பத்து ஆராங்கின் அருகிலுள்ள வாட்டர்போல் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பத்து ஆராங் நிலக்கரி சுரங்கம் செயல்பாட்டை இழத்தல்

டீசல் பயன்பாட்டினால் நிலக்கரியின் தேவையும் உற்பத்தியும் 1945-ல் வீழ்ச்சியடைந்தது. இதனால் பத்து ஆராங் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சரிந்தது. இதனை எதிர்த்துப் போராடியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. பத்து ஆராங்கில் வழங்கப்பட்டிருந்த வசதிகளும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியாக, 1961-ல் பத்து ஆராங் சுரங்கத் தொழிற்சாலை மூடப்பட்டது. பத்து ஆராங் நிலக்கரி தொழிற்சாலையோடு அங்கு இயங்கி வந்த தொழிற்சங்கமும் இலாகா பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்டது. பத்து ஆராங்கில் வேலை செய்த தொழிலாளர்களும் பத்து ஆராங்கைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அருகில் உள்ள ரப்பர் தோட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். சிலர் பத்து ஆராங்கில் தங்களின் வீட்டுக்கு அருகில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்யவும் தொடங்கினர்.

பத்து ஆராங்கின் தற்போதைய நிலை

நிலக்கரி எடுத்த பின்னர் மணலைக் கொண்டு சுரங்கத்தை மூடாமல் இருந்ததால், அங்கிருந்த சில கடைகளுக்கு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. அதனால் அக்கடைகள் அப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டது. இன்னும் பத்து ஆராங்கில் கைவிடப்பட்ட செங்கல் தொழிற்சாலை, சுரங்கப்பாதை, இரயில் தண்டவாளம், தொழிலாளர்களின் குடியிருப்பு, தபால் நிலையம் என வரலாற்று தடயங்கள் உள்ளன. மக்கள் இன்னும் பத்து ஆராங்கில் வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர். 2011-ல் பத்து ஆராங் நகர் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடியது.

உசாத்துணை


✅Finalised Page