நெல்லை ஆ. கணபதி
நெல்லை ஆ. கணபதி (டிசம்பர் 3, 1934 - மே 27, 2019) புலவர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, கலைமாமணி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
நெல்லை ஆ. கணபதி, டிசம்பர் 3, 1934 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரந்தாநேரி என்ற கிராமத்தில், ஆண்டபெருமாள் பிள்ளை - கோமதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். நெல்லையில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார்.
தனி வாழ்க்கை
நெல்லை ஆ. கணபதி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். மனைவி: சுப்புலட்சுமி. இரண்டு மகள்கள், ஒரு மகன். மகள் ஆண்டாள் பிரியதர்ஷினி கவிஞர், எழுத்தாளர்.
இலக்கிய வாழ்க்கை
நெல்லை ஆ. கணபதி, இளம் வயதிலேயே கவிதைகள் எழுதினார். 'கவிராயர்', 'தெய்வநாயகம்' போன்ற புனை பெயர்களில் பல மரபுக்கவிதைகளை வெளியிட்டார். ‘தமிழகம்’ எனும் திங்களிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். பல நூல்களுக்கு உரை எழுதினார். நாடகம், சிறுகதைகள், சிறார் பாடல்கள் எனப் பல நூல்களை எழுதினார். 20-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களையும், 30-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களையும் எழுதினார்.முதன்மையாகச் சிறார் எழுத்தாளராக அறியப்படுகிறார்
இதழியல்
நெல்லை ஆ. கணபதி, தமிழக அரசின் கல்வித்துறை வெளியிட்ட ‘தமிழகக் கல்வி’ என்ற கல்வி மடலின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
திரை வாழ்க்கை
நெல்லை ஆ. கணபதி, தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றுக்குப் பாடல்களை எழுதினார்.
அமைப்புப் பணிகள்
நெல்லை ஆ. கணபதி, ‘பி.லிட்.’ தமிழ் இளங்கலை பட்டப் படிப்பின் முதல் பாடத்திட்டத்தினை உருவாக்கினார்.
விருதுகள்
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது.
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- ஏ.வி.எம். அறக்கட்டளை வழங்கிய சிறந்த சிறார் நூலுக்கான தங்கப்பதக்கம்
மறைவு
நெல்லை ஆ. கணபதி, மே 27, 2019 அன்று, தமது 85-ம் வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இலக்கிய இடம்
நெல்லை ஆ. கணபதி, முதன்மையாகச் சிறார் எழுத்தாளர். சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்த கவிஞர் மற்றும் எழுத்தாளராக அறியப்படுகிறார். தமிழ் நவீனச் சூழலில் மரபுக்கவிதைகளை எழுதியவர்களில் ஒருவர்.
நூல்கள்
- சென்னைத் தமிழ்
- திட்டினாலும் தித்திக்கும்
- விவேக சிந்தாமணி உரை
- கம்பர் விருந்து
- ஓளவையார் விருந்து
- இன்பத்தமிழில் இனிய கவிதைகள்
- நன்னெறி உரை
- வெற்றி வேற்கை
- அம்மா கையில் மந்திரக்கோல்
- சிறுவர்களுக்கான பல்சுவைக் கதைகள்
- திருக்குறள் கதைகள் பாகம் 1
- திருக்குறள் கதைகள் பாகம் 2
- யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்
- நம்பிக்கை வேண்டும்
- டாக்டர் இராதாகிருஷ்ணன் ஒரு கதையின் கதை
- பாடு பாடு பண்பாடு பாடு
- அம்மா அப்பா செல்லப்பிள்ளை
- குழந்தைகளின் கோமகன் நேருமாமா
மற்றும் பல
உசாத்துணை
✅Finalised Page