நாண் முல்லை(பொதுவியல் திணை)
பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. தலைவன் போருக்குச் சென்றிருந்த போது தன் நாணே வேலியாகத் தலைவி தன்னைக் காத்து நிற்றல் நாண் முல்லை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தன்னைப் பிரிந்து தலைவன் போர்க்களத்தில் இருக்க, தலைவி இல்லத்திலே தன் நாணமே துணையாக இருத்தலைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
செறுநர் நாணச் சேயிழை அரிவை
வறுமனை வைகித் தற்காத்தன்று (கொளு 13.4)
வெண்பா
கொயதார் மார்பின் கொழுநன் தணந்த பின்
பெயவளையாட்குப் பிறிதில்லை - வெய்ய
வளி மறையும் இன்றி வழக்கு ஒழியா வாயில்
நளிமனைக்கு நல்துணை நாண் (278)
பொருள்: மாலையணிந்த மார்பினனான கணவன் பிரிந்துசென்றபின்பு,வளைகளை உடைய அவன் தலைவிக்கு வேறொரு காவலும் இல்லை; வெய்ய காற்றினை மறைக்கும் கதவு இல்லாதே, மக்கள் நடமாட்டம் ஒழியாதே இருக்கும் வாயிலையுடைய பெரிய மனைக்கு, அவளுடைய நாணே நல்லதொரு துணையாகயும் காவலாகவும் அமைந்தது.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jul-2025, 10:08:43 IST