under review

நாடி ஜோதிடம்

From Tamil Wiki
நாடி ஜோதிட ஓலைச்சுவடி-1
நாடி ஜோதிட ஓலைச்சுவடி-2

மக்களின் நடைமுறை வாழ்வில் கைரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல், சோழி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படும் ஜோதிடம் நாடி ஜோதிடம்.

நாடி ஜோதிடம் பெயர் விளக்கம்

‘நாடி' என்பதற்கு அணுகுதல், தேடுதல், விரும்புதல் எனப் பல பொருள்களுண்டு. ‘நாடி ஜோதிடம்' என்பதற்கு ‘நாடி வந்து பார்க்கக் கூடிய ஜோதிடம்' என்று பொருள் கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதனின் பிறப்பு, வளர்ப்புமுதல் ஆயுள்வரையிலான பலன்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது நாடி ஜோதிடத்தின் தனித் தன்மை.

உலக அளவில் ஜோதிடம்

பல நாடுகளிலும் பலவேறு வகையான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. சில நாடுகளில் "கப்பாலா" (kabbalah) என்னும் ஓர் இரகசிய, பழமையான ஆருட முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. "டேரட்" எனப்படும் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுப் பலன் கூறும் முறை சீனாவில் மிகப் பிரபலமானது.

திபெத்தில் வழங்கிவரும் Akashik Records என்பதும் கூட நாடிஜோதிடத்தின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டதே! சீன நாட்டிலும் இதே போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பெயர் "யீசிங்." (I ching) "யீ" என்றால் 'மாறுதல்' என்பது பொருள். 'சிங்' என்றால் 'புத்தகம்' என்பது பொருள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழக் கூடிய கடந்த, நிகழ்கால, எதிர்கால சம்பவங்களைப் பற்றி விவரிப்பதே இதன் தனித் தன்மையாகும்.

நாடிகளும் முனிவர்களும்

தென்னாட்டில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கெளசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி போன்ற பலவகை நாடிகள் காணப்படுகின்றன. இவை அந்தந்தப் பெயர்கள் கொண்ட முனிவர்களால் எழுதப்பட்டதாகக் நம்பப்படுகின்றன. ஆனால் வடநாட்டில் இத்தகைய முனிவர்களின் பெயர்களினால் ஆன நாடிகளை விட சூர்ய நாடி, சந்திர நாடி, சுக்ல யஜூர் நாடி, சுக்ர நாடி, கெளமார நாடி, புத நாடி, பிரம்ம நாடி, துருவ நாடி, மார்கண்டேய நாடி, பிருகு நாடி, நாரத நாடி, கர்கர் நாடி, பராசரர் நாடி போன்றவை அதிகம் காணப்படுகின்றன.

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, சம்ஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளிலும் நாடி ஜோதிடச் சுவடிகள் உள்ளன.

காண்டங்கள்

நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு காண்டங்கள் உதவியாக இருக்கின்றன. காண்டங்கள் என்றால் உட்பிரிவுகள் என்பது பொருள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எதிர்காலப் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும். பொதுக்காண்டத்தில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும். அதாவது ஒருவரது பெயர், தொழில், மற்றும் குடும்ப விவரங்கள் அதில் இருக்கும். விரிவான பலன்களை அறிய அதற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மொத்தம் 12 காண்டங்கள் உள்ளன. அவை தவிர்த்து மேலும் சில நாடி காண்டங்களும் உள்ளன.

பன்னிரு காண்டங்கள்

பொதுக்காண்டம் (முதல் காண்டம்)

ஒரு மனிதனின் பிறப்பு முதல் ஆயுள் வரையிலான பொதுவான பலன்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மற்ற காண்டங்களைப் பார்ப்பதற்கு முதலில் இதனைப் பார்த்தே ஆக வேண்டும். இதில் பார்ப்பவருடைய பெயர், பெற்றோர் பெயர், சகோதரர்கள் விபரம், திருமணம் ஆகி இருந்தால் மனைவி, குழந்தைகள் பற்றிய விவரங்கள், ஜாதகரின் தொழில், வேலை, நோய், கடன், பயணங்கள், சொத்து சேர்க்கை, எதிரிகள் தொல்லை போன்ற பொதுவான தகவல்கள் காணப்படும்.

இரண்டாவது காண்டம்

கல்வி, பணவரவு, குடும்ப அமைப்பு, ஒற்றுமை, வீடு, கண் அமைப்பு, வெற்றி வாய்ப்புகள் பற்றிக் கூறுவது இரண்டாவது காண்டம்.

மூன்றாவது காண்டம்

சகோதரர் நலம், தைரியம், வீரம், சகோதரர்களால் ஏற்படும் நன்மை தீமைகள், அவர்களுக்கு ஏற்படும் ஆதாயங்கள் பற்றிக் கூறுவது மூன்றாவது காண்டம்.

நான்காவது காண்டம்

தாயார், மனிதனின் உடல் மற்றும் உள்ள நலம், மனை நிலங்கள், வாகன வசதி, வாழ்க்கையில் அடையும் சுகங்கள், வெற்றி வாய்ப்புக்கள் பற்றி விரிவாகக் கூறுவது நான்காவது காண்டம்.

ஐந்தாவதுகாண்டம்

குழந்தைகள் பிறப்பு, வளர்ப்பு, அவர்களால் ஏற்படும் நன்மை, தீமை, அக்குழந்தைகளின் எதிர்காலம், ஜாதகரின் பூர்வ புண்ணிய பலம், தலைமை வாழ்க்கை போன்றவை பற்றி விரிவாகக் கூறுவது ஐந்தாவது காண்டம்.

ஆறாவது காண்டம்

வாழ்க்கையில் ஏற்படும் பகைகள், கடன், எதிரி, வியாதி, தொல்லை, அவமானங்கள், அதனால் ஏற்படும் மன வருத்தங்கள் மற்றும் அவற்றை நீக்கும் வழிமுறைகள் என அனைத்தையும் விரிவாகக் கூறுவது ஆறாவது காண்டம்.

ஏழாவது காண்டம்

திருமணம், அதற்கான வயது, காலம், எப்படிப்பட்ட வரன், எந்தத் திசையில் இருந்து அமையும், வரப்போகும் கணவன்/மனைவி பற்றிய விவரங்கள், அவர்களது ஜாதகக் குறிப்புகள், திருமணத்தால் ஏற்படும் நன்மை, தீமைகள், வாழ்க்கை வளங்கள், உயர்வுகள், திருமணம் காலம் கடந்தமைக்கான காரணம் போன்றவை பற்றிக் கூறுவது ஏழாவது காண்டம்.

எட்டாவதுகாண்டம்

ஆயுள், இடையில் ஏற்படும் கண்டங்கள், விபத்துகள், நோய் மற்றும் கடல் கடந்த பயணம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது எட்டாவது காண்டம்.

ஒன்பதாவது காண்டம்

தந்தை நலம், செல்வம், யோகம், ஆலய தரிசனம், குரு உபதேசம், இறைப்பணி, தருமச்செயல்கள், சமூகத் தலைமை, அரசியல் ஆதாயம் போன்றவை பற்றிக் கூறுவது ஒன்பதாவது காண்டம்.

பத்தாவது காண்டம்

தொழில், வேலைவாய்ப்பு, வெற்றி, தோல்வி, கலை, பொதுப்பணி, கர்மச் செயல்கள், ஆதாயங்கள், ஆளடிமை அதிகாரங்கள், தொழில்/வேலையால் கிடைக்கும் மேன்மை, செல்வாக்கு அல்லது இழப்பு போன்றவை பற்றிக் கூறுவது பத்தாவது காண்டம்.

பதினோராவது காண்டம்

லாபம், அது எவ்வகையில் ஏற்படும் என்ற விவரங்கள், இரண்டாவது திருமணம், அவற்றினால் அடையும் நன்மை, தீமைகள், பிற தொடர்புகள், ரகசிய உறவுகள், வாழ்க்கை வெற்றி மற்றும் மேன்மை, சிறப்புகள் பற்றிக் கூறுவது பதினோராவது காண்டம்.

பன்னிரண்டாவது காண்டம்

செலவுகள், அவை ஏற்படுவதற்கான காரணங்கள், மறுபிறவி, வாழும் தன்மை, வெளிநாட்டு யோகம், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள், அரசாங்கத் தொடர்புகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது பன்னிரண்டாவது காண்டம்.

பிற காண்டங்கள்

இவை தவிர கீழ்காணும் காண்டங்களும் உள்ளன.

சாந்தி காண்டம்

முற்பிறவி, அப்பிறவியில் செய்த நன்மை, தீமைகள், அதனால் ஏற்பட்ட பாவங்கள் பற்றிய விவரங்கள், அவை நீங்குவதற்கான வழிமுறைகள், அதற்கான பரிகாரங்கள், வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாகக் கூறுவது சாந்தி காண்டம்.

தீட்சை காண்டம்

வாழ்க்கை மேம்பட மந்திரங்களையும், எந்த மந்திரங்களை உச்சரிப்பது, யாரிடம் தீட்சை பெற்று ரக்ஷையாக அணிவது என்பது பற்றியும், தெய்வ வழிபாடு, வழிபாட்டின் பலன், அதனால் விளையும் மேன்மைகள் பற்றியும் விரிவாகக் கூறுவது தீட்சை காண்டம்.

ஔஷத காண்டம்

மருந்துகளைப் பற்றியும், எதனை, எந்த நோய்க்கு, எப்படிச் சாப்பிடுவது என்பது பற்றியும், அது கிடைக்குமிடம் பற்றியும், பத்திய முறைகள் பற்றியும் கூறுவது ஔஷத காண்டம்.

திசாபுக்தி காண்டம்

வாழ்க்கையில் நடக்கும் திசாபுக்திகள், அதனால் ஏற்படும் பலன்கள், மற்றும் செய்ய வேண்டிய பரிகார முறைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது திசாபுதிக் காண்டம் என அழைக்கபடுகின்றது.

ஞான காண்டம்

ஞானம், அடையும் வழி, வகை, அட்டமாசித்திகள், முக்திப் பேறு, மகான்களின் ஆசி, தெய்வ அருள், அவற்றைப் பெறும் விதம், அதற்கான கால நேரங்கள் போன்றவை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது ஞான காண்டம்.

பிரசன்ன காண்டம்

நடப்புப் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்கள் தீர்வுகள் மற்றும் வழி முறைகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறுவது பிரசன்ன காண்டம்.

துல்லிய காண்டம்

எப்பொழுது, எந்தச் சமயத்தில், என்ன நடக்கும் என வாழ்க்கையின் மிகத் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள உதவுவது துல்லிய காண்டம்.

அரசியல் காண்டம்

அரசியல் பிரச்சனைகளையும், அவற்றில் வெற்றி பெறும் முறைகளையும், அவற்றிற்கான தீர்வு, வழி முறைகள் பற்றியும் விரிவாகக் கூறுவது அரசியல் காண்டம்.

எல்லைக் காண்டம்

ஒரு நாட்டின் எல்லைகள், அது பற்றிய விவரங்கள், மறைந்துள்ள புதை பொருட்கள், புதையல்கள், அவற்றை வெளிக்கொணரும் காலம், நேரம், அதற்கான விதி முறைகள் பற்றி விரிவாக விளக்கிக் கூறுவது எல்லைக் காண்டம்.

நாடி ஜோதிடம் பார்க்கும் முறைகள்

நாடிஜோதிடர்கள், தங்கள் நிலையத்தினை நாடி வரும் நபர்களுடைய கைப் பெருவிரல் ரேகையினை (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல் ரேகை; பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல் ரேகை), முதலில் ஒரு தாளில் பதிந்து கொள்கிறார்கள். பின்னர் அதற்கான ஓலையைத் தேடி எடுக்க முற்படுகின்றனர். அதற்கான நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. சிலருக்கு ஓலை உடனே கிடைத்து விடும். சிலருக்கு ஓரிரு நாள் கூட ஆகலாம். மற்றும் சிலருக்கு ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு நிலையத்திலிருந்து தான் தேடி எடுக்க வேண்டும் என்பதால் தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது.

ஓலைச்சுவடி கிடைத்ததும் நாடி வாசிப்பவர் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவரை அழைப்பார். அது அந்நபருக்குரிய ஓலை தானா என்பதனை அறியப் பல கேள்விகளைக் கேட்பார். நாடி பார்க்க வந்திருப்பவர் எந்த விபரங்களையும் (பெயர் உட்பட) முன்னதாகக் கூற வேண்டியதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு 'ஆம்', அல்லது 'இல்லை'- என்று மட்டும் பதில் கூறினால் போதும்.

பொதுவாகக் கீழ்காணும் கேள்விகளைப் போன்ற பொதுவான கேள்விகளையே நாடிஜோதிடர்கள் கேட்பர். சரியான ஓலை தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு கேட்பதாகக் கூறுகின்றனர். ஜோதிடம் பார்க்க வந்தவர் அதற்கான சரியான பதில்களைக் கூறுவதன் மூலம் அவருக்கான ஓலையினைக் கண்டறிந்து பலன் கூற முற்படுகின்றனர். ஓலைச்சுவடியில் உள்ள பாடல்களைப் படித்து விளக்கம் கூறுகின்றனர். அவற்றை ஏட்டில் எழுதியும், ஒலிப்பதிவு நாடா/குறுந்தக்கட்டில் பதிவு செய்தும் தருகின்றனர்.

பொதுவான கேள்விகள் சில.. (இவை பொதுவான கேள்விகள் மட்டுமே. ஆளுக்கு ஆள், சுவடிக்குச் சுவடி இவ்வகைக் கேள்விகள் மாறுபடும்)

  • தங்களுடைய தகப்பனார் அரசாங்கப் பணியாளரா?
  • தங்கள் தாயாரின் பெயர் அம்பாளின் பெயரைக் குறிப்பதாக இருக்குமா?
  • தங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வருக்கு மேலா?
  • தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?
  • நீங்கள் சட்டம் அல்லது மருத்துவம் பயில்பவரா?
  • முதல் குழந்தை பெண்ணா?
  • தகப்பனாரின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா?
  • உங்களுடைய பெயர் முருகக்கடவுளோடு தொடர்புடையதா?
  • உங்கள் பெயர் வல்லினத்தில் தான் ஆரம்பிக்குமா?
  • நீங்கள் வளர்பிறையில் பிறந்தவரா?

இது போன்ற கேள்விகளுக்கு நாடி பார்க்க வந்தவர் கூற வேண்டிய பதில் 'ஆம்' அல்லது 'இல்லை' என்பது மட்டுமே. இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான, சரியான பலன்களைத் தாங்கள் கூறுவதாகச் நாடிஜோதிடர்கள் சொல்கின்றனர். ஆனால், இக்கேள்விகள் மூலம் ஒருவரைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை ரகசியமாகக் குறித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பாடலில் வந்ததுபோல் படித்துக் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் உள்ளது.

நாடி ஜோதிட ஓலைச்சுவடி - 3
நாடி ஜோதிடச் சுவடி - 4

ஒலைச்சுவடி பற்றிய விவரங்கள்

நாடி பற்றிக் கூறும் ஓலைச்சுவடியானது சுமார் பத்து முதல் பதினொன்று அங்குல நீளத்திலும், ஒன்று முதல் ஒன்றரை அங்குல அகலத்திலும் காணப்படுகின்றது. அந்த ஓலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, நன்றாகக் கட்டிவைக்கப்பட்டுளன. ஒவ்வொரு ஓலைக்கட்டிலும் சுமார் ஐம்பது ஓலைகள்வரை காணப்படுகின்றன. சிலவற்றில் அதைவிடக் குறைவாகவும் ஓலைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் பின்புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் காணப்படுவதில்லை. அவற்றில் உள்ள எழுத்துக்கள் கூட்டெழுத்துக்கள் என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.

"இவை பரிபாஷையில் எழுதப்பட்டவை. சுருக்கெழுத்து போன்றவை. அவற்றை எங்களைப் போன்ற சிறப்புப்பயிற்சி பெற்றவர்களேயன்றி மற்றவர்களால் வாசிக்க இயலாது" என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் எழுத்துக்கள் சுருக்க முறையில் குறியீடாக அதில் எழுதப்பட்டு இருக்கும் என்றும், அதனைப் பயிற்சி பெற்றுப் பல்லாண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் தங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்தவரே அன்றி மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இக்கூற்றை சுவடியியல் வல்லுநர்கள் மறுக்கின்றனர். “இத்தகைய எழுத்துக்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் வெறும் கிறுக்கல்கள். ஏமாற்றுவேலை. இவை போலிச் சுவடிகள்” என்பதே அவர்களில் பலரது கருத்தாக உள்ளது.

நாடி ஜோதிடம் - சில விளக்கங்கள்

  • சிறு குழந்தைகளுக்கும், இறந்த நபர்களுக்கும் நாடி ஜோதிடம் பார்க்கப்படுவதில்லை.
  • ஜாதகமே இல்லாதவர்களுக்கும் நாடி மூலம் ஜாதகம் கணித்துப் பலன்கள் கூற முடியும்.
  • சாதாரண ஜோதிடத்தை விட நாடி ஜோதிடம் பார்க்க அதிகம் பொருள் செலவாகும். அதிகக் கால விரயமும் ஏற்படும்.
  • பரிகாரம் செய்தால் தான் முழுப் பலன் என்று நாடி ஜோதிடம் கூறுவதால், அதுபற்றி ஒரு தெளிவான பார்வையுடன் செல்வது நலம்.

நாடி ஜோதிடர்கள்

  • பொதுவாக, நாடி ஜோதிடம் பார்க்கும் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
  • அவர்களில் பெரும்பாலானோர் ஒருவருக்கு ஒருவர் உறவினராக உள்ளனர்.
  • தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர்.
  • தங்களுக்குள்ளே நாடிஜோதிட ஓலைச்சுவடிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.
  • இவர்களின் தலைமையகமாக வைத்தீஸ்வரன் கோயில் விளங்குகிறது.

போலி நாடி ஜோதிடர்கள்

நாடி ஜோதிடர்களில் பல போலி நாடிஜோதிடர்களும் உள்ளனர். எனவே நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

நாடி ஜோதிடப் பாடல்களின் அமைப்பு

நாடியில் வரும் பாடலானது 'அந்தாதி' என்னும் இலக்கிய அமைப்பில் உள்ளது. 'அந்தாதி' என்பது 'அந்தம் + ஆதி' என விரியும். அதாவது முன் நின்ற பாடலின் ஈற்றசையோ, எழுத்தோ, சீரோ, அடியோ, தளையோ, தொடையோ வரும் பாடலின் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதே அந்தாதியாகும். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக 'அந்தாதி' விளங்குகிறது.

அகத்தியர் போன்றவர்களால் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்பது நாடி ஜோதிடர்கள் கருத்து. ஆனால் அதில் பயின்று வரும் பாடல் வகையான ‘அந்தாதி’ வகை ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது. தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலாக, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி கருதப்படுகிறது. இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இவ்வகைப் பாடல்கள் ‘அந்தாதி’ அமைப்பில் இருந்தாலும் இவை அகத்தியர் போன்ற முனிவர்களாலோ, சித்தர்களாலோ இயற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதும், சங்ககாலத்தில் ‘ஆசிரியப்பா’வே ஏற்றம் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் தோன்றிய ‘வெண்பா’ யாப்பில் இம்முனிவர்கள் பாடியிருக்க வாய்ப்பே இல்லை என்பதும் தமிழார்வலர்களின் கருத்தாக உள்ளது. மேலும் அவர்கள், “நாடி ஜோதிடப் பாடல்கள் எல்லாம் வெண்பா யாப்பில் அந்தாதி முறையில் அமைந்துள்ளன என்றாலும், முழுக்க முழுக்கத் தப்பும் தவறுமாக அவை உள்ளன. வரிதோறும் தளை தட்டுகிறது. முனிவர்களால், அதுவும் தொல்காப்பியருக்கே இலக்கணம் சொல்லிக் கொடுத்த அகத்தியர் போன்ற முனிவர்களால் எழுதப்பட்டிருந்தால் இதற்குச் சாத்தியமே இல்லை” என்கின்றனர். மேலும் அவர்கள், “இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர்.

இதற்கு விளக்கம் கூறும் நாடி ஜோதிடர்கள், “முனிவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும். எந்தப் பாடல் வடிவிலும் அவர்களால் எழுதியிருக்க முடியும்” என்கின்றனர். மேலும் அவர்கள், “அந்தக் காலத்து ஓலைச்சுவடிகளை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. அவற்றை பிரதியெடுத்தும், படி ஓலை தயாரித்துமே பயன்படுத்துகிறோம். அப்படி பிரதியெடுக்கும் போது பிழை நேர்ந்திருக்கலாம்” என்கின்றனர்.

நாடி ஜோதிடத்தின் உண்மைத் தன்மை

நாடி ஜோதிடம் பற்றிய பல செய்திகளை, பலன் கூறும் முறைகளை, சுவடிகளைக் கண்டறியும் முறைகளை நாடி ஜோதிடர்கள் தங்களுக்குள் ரகசியமாகவே வைத்துள்ளனர். அவர்கள் குழுவைச் சேர்ந்தவர்களன்றி மற்றவர்களால் அவ்வளவு எளிதில் உண்மைகளை அறிய முடிவதில்லை.

நாடி ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு ஆய்வு முறைகள் தேவையாக இருக்கின்றன. ஒரே நபருக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு ஆண்டுகால இடைவெளியில், பல்வேறு முறை நாடி ஜோதிடம் பார்த்தால் தான் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் விஷயமுமாக உள்ளது. “நாடி ஜோதிடத்தில் ‘யக்ஷிணி’ போன்ற சில தேவதைகளின் பயன்பாடு உண்டு” என்ற கருத்தும் உள்ளது.

நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளின் தொன்மை, எழுத்துக்களின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் மட்டுமே முழு உண்மையை அறிய இயலும்.

உசாத்துணை

  • நாடிஜோதிடம் உண்மையா?, அரவிந்த் சுவாமிநாதன், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு


✅Finalised Page