under review

துப்பறியும் சாம்பு

From Tamil Wiki
துப்பறியும் சாம்பு முதல் ஓவியம். ஆனந்தவிகடன் 1942, ஓவியர் ராஜு. (நன்றி: பசுபதி பக்கங்கள்)
கோபுலு படக்கதை. 1958 ஆனந்தவிகடன்
சாம்பு, உமாபதி சித்தரிப்பு. ரத்னபாலா இதழ். (நன்றி: பசு பதிவுகள்)
துப்பறியும் சாம்பு முதல் கதை 1942 ஆனந்தவிகடன்
துப்பறியும் சாம்பு நாடகம்

துப்பறியும் சாம்பு (1942) எழுத்தாளர் தேவன் எழுதிய துப்பறியும் நகைச்சுவைக் கதாபாத்திரம். ஆனந்தவிகடனில் தொடராகவும் பின்னர் நாவலாகவும், படக்கதைகளாகவும் வெளிவந்தது. நாடகமாகவும் நடிக்கப்பட்டது.

தொடக்கம்

எழுத்தாளர் தேவன் அவர் துணை ஆசிரியராக பணியாற்றிய ஆனந்த விகடன் இதழில் துப்பறியும் சாம்பு என்னும் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து தனிக்கதைகளாக ஆகஸ்ட் 30, 1942 முதல் எழுத ஆரம்பித்தார். இக்கதைக்கு ராஜூ ஓவியம் வரைந்தார். சாம்புவின் தோற்றம் ராஜூவால் உருவாக்கப்பட்டது. ஐம்பது கதைகள் வெளிவந்தபின் அது அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியீடாக நாவலாக வெளிவந்தது. பின்னர் நாவலாகவும் எழுதினார். தேவனின் மறைவுக்குப் பின் உமாபதியின் ஓவியத்துடன் மீண்டும் ஆனந்தவிகடனில் இக்கதைகள் வெளியாயின. பின்னர் கோபுலு வரைந்தார்.

கதைமாந்தர்

சாம்பு

கதைநாயகனாகிய சாம்பு ஒரு நடுவயதான பிராமணர். இவர் நீண்ட மூக்கும், முன்வழுக்கையுமாக சித்தரிக்கப்படுகிறார். இவர் மிக மந்தமாக யோசிப்பவர், முன்பின் தொடர்பின்றி பேசுபவர். வங்கியில் வேலை செய்யும் இவர் அங்கே ஒரு திருட்டு சம்பந்தமான செய்திகளை தற்செயலாக ஊகித்து, அவற்றை திருடியவரிடமே சொல்லி அவர்களை தப்பிக்க வழியமைத்தமையால் வேலையை இழக்கிறார். ஆனால் அதன் பின் திருடன் பிடிபடும்போது துப்பறியும் திறமை கொண்டவராக புகழப்படுகிறார். அதன்பின் வெவ்வேறு குற்றங்களைத் துப்பறிய அவரை அழைத்துச் செல்கிறார்கள். அவர் முன்பின் தொடர்பின்றி வேறு எதையாவது எண்ணி சொல்ல அவை தற்செயலாக குற்றத்தை புலனாய்வு செய்வதற்கு உதவுகின்றன. ஆகவே அவர் துப்பறியும் மேதையாகக் கருதப்படுகிறார்.

இன்ஸ்பெக்டர் கோபாலன்

துப்பறியும் சாம்புவை துப்பறியும் மேதை என நம்பும் போலீஸ் அதிகாரி. சாம்பு முன்னுக்குப் பின் தொடர்பின்றி பேசும் சொற்களை தன் போக்கில் ஊகித்து உண்மையில் குற்றவாளிகளை பிடிப்பவர் இவரே. ஆனால் இவர் சாம்பு தான் குற்றங்களை துப்பறிந்து குற்றவாளிகளை பற்றிய குறிப்புகளை அளிப்பதாக நம்புகிறார்.

சுந்து

சாம்புவின் மகன். இரண்டு வயதான குழந்தை. பல கதைகளில் திருப்பங்களுக்குக் காரணமாகிறவன்.

வேம்பு

துப்பறியும் சாம்புவின் மனைவி. சாம்பு ஓர் அசடு என தெரிந்தவள்.

படக்கதை வடிவங்கள்

தேவன் மறைவுக்குப் பின் ஏப்ரல் 1958ல் துப்பறியும் சாம்பு கதையை கோபுலு ஓவியத்துடன் ஆனந்தவிகடன் படக்கதையாக வெளியிட்டது. அதன்பின் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டு துப்பறியும் சாம்பு கதைகள் படக்கதைகளாக வெளிவந்துள்ளன.

மூலம்

துப்பறியும் சாம்பு தாபாத்திரத்திற்கு முன்னுதாரணமான பல கதாபாத்திரங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. பி.ஜி.வோடவுஸ் (P. G. Wodehouse) உருவாக்கிய பெர்ஸி ஃப்ரொபிஷர் பில்பீம் (Percy Frobisher Pilbeam) என்ற கதாபாத்திரத்தின் தழுவல்தான் சாம்பு. குணச்சித்திரம், கதையோட்டம் மட்டுமல்லாது தோற்றமும் மூலத்திற்கு அணுக்கமானதாகவே அமைக்கப்பட்டது.

நாடகம்

என்.எஸ். நடராஜன் தேவனின் பல படைப்புகளை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் சார்பில் நாடகமாக அரங்கேற்றினார். அவற்றில் துப்பறியும் சாம்பு நாடகம் புகழ்பெற்றது. அதில் நடராஜனே சாம்புவாக நடித்தார். சாம்பு நடராஜன் என அவர் அழைக்கப்பட்டார்.

திரைவடிவம்

  • 1980ல் தூர்தர்ஷனில் வெளியான தொலைக்காட்சி தொடரில் காத்தாடி ராமமூர்த்தி துப்பறியும் சாம்புவாக நடித்தார்.
  • 1990ல் ஒய்.ஜி. மகேந்திரன் சாம்புவாகவும், ஏ.ஆர்.எஸ். கோபாலனாகவும் நடித்திருந்த தொலைக்காட்சி தொடர் வெளிவந்தது.

மதிப்பீடு

தமிழில் புனைகதைகள் எழுதப்பட்ட தொடக்க காலத்திலேயே துப்பறியும் கதாபாத்திரங்கள் உருவாகிவிட்டன. திகம்பர சாமியார் (வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்), அமரசிங்கர் (ஜெ.ஆர். ரங்கராஜு ), ஆனந்த சிங், கிருஷ்ணா சிங் (ஆரணி குப்புசாமி முதலியார்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவற்றை நையாண்டி செய்யும் கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. அன்றைய ஆனந்தவிகடனின் மேலோட்டமான கேலி என்னும் இயல்புக்கு உகந்த கதையும் கதாபாத்திரமும் என்பதனாலும், இதில் கேலிசெய்யப்படும் துப்பறியும் கதைகளும் அனைவரும் அறிந்தவை என்பதனாலும் இது மிகவும் புகழ்பெற்றது. ஒரே கதை, ஒரே கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட கதைத்தொடர்களின் முன்னோடி வடிவம் இது. துப்பறியும் சாம்புவை தமிழின் தொடக்ககால காமிக் கதாபாத்திரம் என வகுக்கலாம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2026, 21:44:52 IST