திறை கொண்டு பெயர்தல்
திறை கொண்டு பெயர்தல் உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. பகை மன்னன் செலுத்தும் கப்பத்தை ஏற்றுக் கொண்டு மதில் உள்ளே தங்கியிருந்த உழிஞை மன்னன் தன் நாட்டுக்கு மீள்வதைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நொச்சி மன்னன் பணிந்து செலுத்திய கப்பத்தை ஏற்றுக் கொண்டு, அவனது நகரினின்றும் உழிஞை வேந்தன் தன் நகர்க்கு மீண்டது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அடுதிறல் அரணத்து அரசு வழி மொழியப்
படுதிரை கொண்டு பதிப் பெயர்ந்தன்று(கொளு 6.30)
வெண்பா
கோடும் அயிரும் இசைப்பக் குழும் இளை
ஓடுஎரி வேய உடன்று வாய்ப் - பாடி
உயர்ந்து ஓங்கு அரணத்து ஒன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையினான் (124)
பொருள்: உழிஞை வேந்தன், சங்கும் கொம்பும் முழங்கக் காவல் காட்டினை நெருப்புத் தழுவும்படியாக வெகுண்டு உலாவினான். பிறகு, அரணுக்கு உள்ளே இருந்த பகைவர் பணிந்து வாழ்த்த , தனது பாடி வீட்டினின்றும் நீங்கித் தன்னகர்க்குப் புறப்பட்டான்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 09:57:06 IST