under review

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

From Tamil Wiki
நன்றி: தினமலர்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சைவ அடியார்களான 63 நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்களின் மனக்குறிப்பு அறிந்து தொண்டு செய்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் துணிவெளுக்கும் வண்ணார் குலத்தில் பிறந்தவர். சிவபக்தர். சிவனடியார்களின் ஆடைகளைத் தூய்மை செய்து தொண்டு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

திருக்குறிப்புத் தொண்டரின் தொண்டுள்ளத்தை உலகறியச் செய்ய சிவன் ஓர் ஆடல் புரிந்தார். வயதான சிவனடியாராக , இடுப்பில் அழுக்கேறிய கச்சையுடன் வெண்ணீறு அணிந்து திருக்குறிப்புத் தொண்டரின் முன் வந்தார். திருக்குறிப்புத் தொண்டர் அடியாரின் அழுக்கேறிய கச்சையைக் கண்டதும் “ஐயா, தங்களுடைய கச்சை மிகவும் அழுக்காக உள்ளது. நான் இதனை உங்களுக்கு நன்கு சலவை செய்து தருகிறேன்" என்று சொன்னார்.

சிவனடியார் “. இந்த குளிர்காலத்தில் என்னுடைய உடலைப் போர்த்திக் கொள்ள இது பயன்படும். இதனைக் கொடுத்துவிட்டால் நான் இரவில் குளிரில் நடுங்க நேரிடும்.” என்றார். திருக்குறிப்புத் தொண்டர் இரவுக்குள் அதை துவைத்து, உலர்த்தி தருவதாக உறுதியளித்து வாங்கிக் கொண்டார். துவைத்து முடித்ததும் அதை உலர்த்த முடியாமல் மழை வந்தது. மழை நின்றதும் உலர்த்துவதற்காகக் காத்திருந்தார். ஆனால் மழை நிற்கவில்லை.

சிவனடியாருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால் திருக்குறிப்புத் தொண்டர் உயிரை விடுவதற்காக பாறையில் தன் தலையை மோதினார். அப்போது ஏகாம்பர‌நாதர் தன்னுடைய திருக்கையால் திருக்குறிப்புத் தொண்டர் தலை பாறையில் மோதாமல் தடுத்தார். பாறை, இறைவனின் திருக்கரம் எழுந்தருளிய ஆலயமாக மாறியது. சிவன் உமையம்மையுடன் இடபவாகனத்தில் காட்சி தந்து “உலகம் முழுவதும் உன்னுடைய திருத்தொண்டின் பெருமையை அறிவித்தோம். நீ எம்முடன் இருந்து இன்புறுவாயாக” என்றுஅருளினார்.

திருக்குறிப்புத் தொண்டர் வீடுபேறு பெற்றார்.

திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்‘-திருத்தொண்டத் தொகை

பாடல்கள்

திருக்குறிப்புத் தொண்டர் அழுக்குக் கச்சையுடன் சிவனடியாரைக் காணல்

திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக்
கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்து அருளி
வரும்மேனி அருந் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு
உருமேவும் மயிர்ப் புளகம் உள ஆகப் பணிந்து எழுந்தார்.

வாக்குப் பொய்த்ததால் பாறையில் தலையை மோதி உயிர்விடத் துணிதல்

கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவன் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தன் தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை.

சிவன் திருக்குறிப்புத் தொண்டருக்கு அருளுதல்

முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்.

குருபூஜை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சிவாலயங்களில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page