under review

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

From Tamil Wiki

திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் மற்றும் இலக்கண நூலாசிரியர். நம்மாழ்வார் பிறந்த ஊரான ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர். நம்மாழ்வாரைச் சிறப்பித்து திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறனலங்காரம், மாறன் அகப்பொருள், மாறன் பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்றினார். தமிழின் உரைதருநூல்களில் ஒன்று மாறனலங்காரம்.

பிறப்பு

திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16-ம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தார். இயற்பெயர் சடையன். இவரது முன்னோர் கோயில் புலவர்களாக இருந்ததால் குழந்தைகளுக்கு இயற்பெயருக்கு பதிலாக திருக்குருகைப்பெருமாள் கவிராயர் என்ற பெயரே வழங்கப்பட்டது.

பெருநிலம் புகழ்திருக்குருகைப் பெருமானருள்
குருகூர் வருமனகன் செழுந்தேன்
மருக்கமழ் சீரகத்தார்வணிகன் புகழ்க்
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
அருட்குணத்துடன் வளர் சடையன்
பொருட்டொடர் நவம்புணர் புலமை யோனே

என்ற மாறனலங்காரப் பாயிரப்பாடலால் இச்செய்தி புலனாகிறது

வேளாண் மரபினர். இலக்கண இலக்கியங்களில் மிகச் சிறந்த அறிவு வாய்ந்தவர்.

இலக்கிய/இலக்கணப் பணி

நம்மாழ்வார்பால் மிகுந்த அன்பும், பக்தியும் உடையவர். நம்மாழ்வாருடைய மற்றொரு பெயரான மாறன் பெயரில்

  1. மாறனலங்காரம் (அணி இலக்கணம்)
  2. மாறன் அகப்பொருள் (அகப்பொருள் இலக்கணம் )
  3. மாறன் பாப்பாவினம் (யாப்பிலக்கணம்)

என மூன்று இலக்கண நூல்களை இயற்றினார்.

மாறனலங்காரம் ஓர் உரைதருநூல். மாறன் அகப்பொருள் ஓர் பாட்டிலக்கியநூல். இந்நூலை பொ. யு. 1552-ம் ஆண்டில் சீனிவாசாசாரியார் என்பவர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ததாக இந்நூலின் பாயிரம் குறிப்பிடுகிறது. மாறன் பாப்பாவினம் ஓர் பாக்களையும், பாவினங்களையும் பற்றிக் கூறும் பாட்டியல் இலக்கண நூல். இலக்கண நூல்களிலுன் சமயக் கருத்துகள் இடம்பெறும் என்பத்ற்கு இந்நூல் சான்றாகும். ஆதிபட்டநாதரின் வேண்டுகோளுக்கிணங்க வடமொழியில் இருந்த 'குருகூர் மான்மியம்' என்ற நூலை 1548-ம் ஆண்டு 'திருக்குருகூர் மான்மியம்' என்ற பெயரில் தமிழில் இயற்றினார். 'திருவரங்கத்து அந்தாதி' நூலுக்கு உரை எழுதினார்.

படைப்புகள்

  • நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை,
  • நம்பெருமாள் மும்மணிக்கோவை,
  • மாறன் கிழவி மணிமாலை
  • திருக்குருகூர் மான்மியம்
  • மாறனலங்காரம்
  • மாறன் அகப்பொருள்
  • மாறன் பாப்பாவினம்


✅Finalised Page