தாலிபர்த்தி பிச்சஹரி
தாலிபர்த்தி பிச்சஹரி (1905 - ஜூன் 24, 1965) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
இன்றைய ஆந்திர மாநில தாலிபர்த்தியில் ராமையா என்பவரின் மகனாக 1905-ம் ஆண்டில் பிச்சஹரி பிறந்தார். தந்தையிடமே நாதஸ்வரம் கற்கத்தொடங்கினார். அதே நேரத்தில் பாருபல்லி ராமகிருஷ்ணைய பந்துலு என்பவரிடம் வாய்பாட்டு கற்றார். பின்னர் சென்னைக்கு வந்த கொண்டித் தோப்பு நடேசன் என்பவரிடம் சில காலம் பயின்றார். 'தஞ்சைபாணி’யைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கும்பகோணத்துக்கு அருகே உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலில் கௌரி ஸ்வாமி பிள்ளை என்பவரிடம் நான்கு ஆண்டுகள் தங்கி மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
தாலிபர்த்தி பிச்சஹரி, அனஸூயா அம்மாள் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லை, பெண் குழந்தைகள் மட்டுமே.
இசைப்பணி
கும்பகோணத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குத் திரும்பிய பிச்சஹரி, மிகச் சிறந்த நாதஸ்வரக் கலைஞராக விளங்கி, 'நாகஸ்வர ஸார்வபௌம’, ' நாகஸ்வர சக்கரவர்த்தி’ போன்ற பல பட்டங்களும் விருதுகளும் பெற்றார்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
தாலிபர்த்தி பிச்சஹரியுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- அன்னவரபு பஸவய்யா
- அன்னவரபு கோபாலம்
- திருப்பதி முனிராமய்யா
- ஈமனி ராகவையா
மாணவர்கள்
தாலிபர்த்தி பிச்சஹரியின் முக்கியமான மாணவர்களில் ஒருவர் தோமடசிட்டி அப்பாயி என்பவர்.
மறைவு
தாலிபர்த்தி பிச்சஹரி ஜூன் 24, 1965 அன்று ஒரு திருமண ஊர்வலம் ஒன்றில் வாசித்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Jun-2023, 09:40:27 IST