தமயந்தி
தமயந்தி (பிறப்பு: ஏப்ரல் 14, 1975) எழுத்தாளர், பத்திரிகையாளர், பண்பலைத் தொகுப்பாளர், ஆவணப்பட இயக்குநர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர்.
பிறப்பு,கல்வி
தமயந்தி ஏப்ரல் 14, 1975 அன்று தாமஸ், ஷோபா இணையருக்கு திருநெல்வேலியில் பிறந்தார். தந்தை கல்லூரிப் பேராசிரியர், தாய் பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் மற்றும் இக்னேஷியஸ் கான்வென்டில் முடித்தார். மேல்நிலைப்பள்ளியில் சிறப்புப்பாடமாக ஆங்கில இலக்கியம் படித்தார். பாளையங்கோட்டை சாரா டக்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும். செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறு வயதிலிருந்து தாயின் ஊக்கத்தால் வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தமயந்தி எழாம் வகுப்பில் இருக்கும்போது சிறு கவிதைகள் எழுதத் துவங்கினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். முதலில் வெளிவந்த சிறுகதை 'பொழுது விடியுமென்று' (ஆனந்த விகடன்). 'நிழல்' தாய் இதழில் வெளிவந்தது. 'குளத்தங்கரைப் படிக்கட்டு', 'பொழுது விடியுமென்று' இரு சிறுகதைகளும் விகடன் ஜாக்பாட் பரிசைப் பெற்றன. தமயந்தி கல்லூரியில் படிக்கும் போது அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'தமயந்தியின் சிறுகதைகள்' எழுத்தாளர் பிரபஞ்சனால் வெளியிடப்பட்டது. 2002-ல் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'அக்கக்கா குருவிகள்' வெளியாகிப் பரவலாகப் பேசப்பட்டது. இதுவரை மொத்தம் 12-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. '
தமயந்தியின் முதல் நாவல் 'நிழலிரவு' ,' சிறகுகள்'என்ற இதழில் வெளிவந்தது. இந்நாவலின் காலம் நெருக்கடி நிலை பிரகடனகாலம். கிறிஸ்துவர்கள், அவர்களுள் நாடார்கள் ஆதிக்கம், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், ஆங்கிலேயர்களின் வாரிசானவர்கள், இவர்களின் முரண்பாடுகளாய் விரிகிறது.
சரிகா ஷா, அருணா ஷான்பாக் போன்ற பல பெண்கள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'.
தமயந்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் 'என பாதங்களில் படரும் நிழல்' என்ற தொகுப்பாக வெளிவந்தன.
மொழியாக்கம்
தமயந்தி சில்வியா பிளாத்தின் கவிதைகளை 'அதனினும் சிறப்பான உயிர்த்தெழுதல்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
திரைத்துறை
முதியவர்களின் நிலையைப் பேசும் தமயந்தியின் 'அனல்மின் மனங்கள்' சிறுகதை 'கழுவேற்றம்' என்ற குறும்படமாக உருவானது.
தமயந்தி இதுவரை 7 ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். விழித்திரு' திரைப்படத்திற்கு மீரா கதிரவனுடம் இணைந்து வசனம் எழுதினார். தமயந்தி எழுதிய 'தடயம்' என்கிற சிறுகதையை அதே தலைப்பில் ஒரு மணி நேரப் படமாக உருவானது. ஒரேயொரு காட்சியிலேயே முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 'கிரவுட் ஃபண்டிங்' தயாரிப்பில் சுயாதீன திரைப்படமாக உருவாகியது.
'காயல்' திரைப்படம் தமயந்தியின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது.
விருதுகள், பரிசுகள்
- சிறந்த பெண்குரலுக்கான பாரதி விருது-தமிழ்ஹிந்து 2018
- இலக்கிய மெரினா விருது 2025
இலக்கிய இடம்
"தமயந்தியின் 'நிழலிரவு' தேவாலய சபை அரசியல், ஆசிரியர் சமூக அரசியல், மதம்மாறி கிறிஸ்தவர்களை ஒதுக்கும் அரசியல் ஆகியவற்றின் மீதான் அதிகாரம் பற்றிய விமர்சனமாக விரிந்துள்ளது. கர்த்தரை கோவிலுக்குள் விற்பது பற்றிய விமர்சனம் வலுவாகவே வைக்கப்படுகிறது.கார்ல்மார்ஸ், ஏசுவின் சந்திப்புகளில் தொழிற்சங்க அரசியல் அதிகாரம், பொதுவுடமைக்கட்சிகளின் மீதான விமர்சனம் மேலிடுகிறது. கிறிஸ்துவ சபை அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும் தமயந்தி தொடர்ந்து காவல்துறை சார்ந்த அதிகாரத்தை கேள்விக்குறியாக்குவதை சமீபத்தில் வெளிவந்த 'கோட்டை காவல் நிலையம்' போன்ற நிறையக் கதைகளிலும், அவர் பங்கு பெறும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ' ரவுத்தரம் பழகு' போன்ற நிகழ்ச்சிகளிலும். புதிய தலைமுறை பத்திரிக்கையில் அவர் சமீபத்தில் எழுதி முடித்த "'இந்த நதி நனைவதற்கல்ல' தொடரிலும் காணலாம் ." என்று சுப்ரபாரதிமணியன் குறிப்பிடுகிறார்.
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமாகவே இருக்கும்" என்று பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
- கொன்றோம் அரசியை - பனிக்குடம் பதிப்பகம்
- ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் (சிறுகதை) - கருப்புப் பிரதிகள்
- அக்கக்கா குருவிகள் (சிறுகதை) - போதி
- சாம்பல் கிண்ணம் (சிறுகதை)- போதி
- வாக்குமூலம்(சிறுகதை) - போதி
- முற்பகல் ராஜ்ஜியம் (சிறுகதை) - கவிதா பப்ளிகேஷன்
- தமயந்தியின் சிறுகதைகள் - சுப்ரஜா ஶ்ரீதரனின் பதிப்பகம்
- மனம் என்னும் மாய கண்ணாடி - மின்னம்பலம்
- முட்களின் மேல் சில பட்டாம்பூச்சிகள் - பேட்டிகள் மின்னம்பலம்
நாவல்
- நிழல் இரவு
கவிதை
- என் பாதங்களில் படரும் கடல்
கட்டுரைத் தொகுப்பு
- இந்த நதி நனைவதில்லை
- வல்லமை தாராயோ - மின்னம்பலம் கட்டுரைகள்
ஆவணப்படங்கள்
- கந்தக பூமி
திரைப்பாடல்கள்
- விழித்திரு திரைப்படத்தில் வெள்ளை இரவே (song)
- karichan kuruvi (Movie) - Naan Saami Pulla (song)
- இதமா இதமா, கொல்லாதே -கொலைகாரன் ,
- சிவப்பு பச்சை மஞ்ச- மைலாஞ்சி
உசாத்துணை
- எழுத்தாளர் தமயந்தி நேர்காணல் குங்குமம் தோழி
- தமயந்தி-தென்றல் இதழ்
- தமயந்தி சிறுகதைகள், சிறுகதைகள்.காம்
- தமயந்தி நேர்காணல்-பெண்களின் குரல்
- அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்-சுப்ரபாரதி மணியன், திண்ணை இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Jun-2024, 10:06:05 IST