தபுதார நிலை
தபுதார நிலைபொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. மனைவி இறந்ததால் ஏற்பட்ட தனிமை நிலையைக் குறிக்கிறது.
விளக்கம்
தாரமிழந்த நிலை, தபுதார நிலை எனப்பட்டது. "காதலி இழந்த தபுதார நிலையும்" என்கிறது தொல்காப்பியரம்-(புறத். சூ. 24).
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நகையணிந்த மனைவியை இழந்து தனிமையில் வீட்டில் துன்புறும் ஆண்மகன் நிலையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புனை இழை இழந்தபின் புலம்பொடு வைகி
மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று(கொளு 11.3)
வெண்பா
பைந்தொடி மேலுலகம் எய்தப் படர் உழந்த
மைந்தன் குரிசில் மழை வள்ளல் - எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி (256)
பரிசிலன் ஒருவன், வள்ளலது தபுதார நிலைகண்டு தன்னுள்ளம் நொந்து கூறியது- "பச்சென்ற வளையல்களை உடையாளாகிய தன் மனைவி மேலுலகம் சென்றதால் துன்புற்று வருந்திய வலிமையாளனும், மழைபோல வழங்கும் வள்ளலும் ஆகிய என் தந்தை போல்வான், காதலியை இழந்து அழுந்தின தனிமைத் துயர்நிலையைக் கேளோமல், என்செவிகள், தாம் செவிடாய்ப் போகட்டும்".
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 11:15:08 IST