under review

தடாதகைப் பிராட்டியாரின் திருஅவதாரப் படலம்

From Tamil Wiki

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் ஒன்று திருவிளையாடல் புராணம். இது மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திரு ஆலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம், தடாதகைப் பிராட்டியாரின் திருஅவதாரப் படலம்.

சிவனின் ஆடல்/தொன்மம்

மதுரையில் பல்வேறு வகையிலான திருவிளையாடல்களை நிகழ்த்திய சிவபெருமான், தடாதகைப் பிராட்டி என்று அழைக்கப்பட்டும் மீனாட்சி அம்மையின் திரு அவதாரத்தில் நிகழ்த்திய ஆடல்கள் பற்றி விளக்குவதே தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம். இப்படலத்தின் மூலம், அடியவர்களின் உண்மையான விருப்பத்தை இறைவன் நிறைவேற்றுவான் என்பதையும், இறைவி, பாண்டிய நாட்டின் அரசியாகி மதுரையை ஆட்சி செய்ததன் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதையும் சிவபெருமான் உணர்த்தினார்.

படலத்தின் விளக்கம்

தடாதகைப் பிராட்டியார் என்னும் மீனாட்சி அம்மையின் பிறப்பை விளக்குவது தடாதகைப் பிராட்டியாரின் திருஅவதாரப் படலம்.

கதைச் சுருக்கம்
மலயத்துவசன் செய்த வேள்வி

மலயத்துவசன் என்ற மன்னன் மதுரை மண்ணைச் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி சூரசேனன் என்னும் சோழ அரசனின் மகளான காஞ்சனமாலை. அவள் அம்பாள் மீது மிகுந்த பக்தி உடையவளாக இருந்தாள். ஆனால், இவர்களுக்கு புத்திரப் பேறு வாய்க்கவில்லை. அது மன்னனுக்கு மிகுந்த மனக் குறையாக இருந்தது. அதனால் அசுவமேத யாகத்தைச் செய்தான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில், நூறு யாகங்களை முடித்தால், இந்திர பதவி மலயத்துவசனுக்குப் போய் விடும் என்பதால், மனம் பதைத்த இந்திரன், மலயத்துவசன் முன் தோன்றினான். “பாண்டியனே நீ நற்புத்திரப் பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரப் பேற்றினை வழங்கக்கூடியதுமான புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்வாக” என்று ஆலோசனை கூறினான்.

அன்னையின் அவதாரம்

அதன்படியே பாண்டியனும் புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்யத் தொடங்கினான். மிகவும் அர்ப்பணிப்போடும் பக்தியோடும் அவன் யாகத்தை நடத்தினான். யாகத்தின் முடிவில், அன்னை தலையில் கொண்டையுடன், காலில் சதங்கையுடன், மூன்று வயதுக் குழந்தை வடிவில், மூன்று தனங்களுடன் தோன்றினாள். மன்னனும், காஞ்சனமாலையும் மனம் மகிழ்ந்தனர். குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்ததால் ‘அங்கயற்கண்ணி’ என்று பெயரிட்டனர்.

ஆனாலும், மன்னனுக்கு ஒரு மனக்குறை இருந்தது. தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியது ஏன் என்று யோசித்தான். பின் தன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுள் ஆலயத்துக்குச் சென்றான். தனது மனக்குறையை இறைவனிடம் தெரிவித்து வழிபட்டான். இறைவன் அசரீரியாக, “பாண்டிய மன்னா. வருந்தாதே. உன்னுடைய புதல்விக்குத் தடாதகை எனப் பெயரிட்டு வளர். அவளுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து அவளை நாட்டின் ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து போகும்.” என்று கூறினார்.

கன்னி நாடு

இறைவனின் வாக்கைக் கேட்டு மனக் கவலை நீங்கினான் மலயத்துவசன். பல தான, தர்மங்களைச் செய்து மகிழ்ந்தான். குழந்தையை இறைவனின் ஆணைப்படி சிறப்பாக, வீராங்கனையாக வளர்த்தான். மகள், தகுந்த பருவம் எய்தியதும், அவளுக்கு முடிசூட்டும் நிகழ்வினை மேற்கொண்டான். தடாதகைப் பிராட்டி கன்னிப் பருவத்திலேயே பாண்டிய நாட்டின் அரசி ஆனாள். அதனால் பாண்டிய நாடு ‘கன்னி நாடு’ என்று பெயர் பெற்றது.

அகத்தியர் கூறிய அன்னையின் அவதார விளக்கம்

அங்கயற்கண்ணி நாட்டின் பெருமையையும், அன்னையின் அவதாரச் சிறப்பையும் குறுமுனியாகிய அகத்தியர் பிற முனிவர்களிடம் தெரிவித்தார். அதுகேட்ட முனிவர்களில் ஒருவர், “ இறைவனாகிய சிவபெருமானை விட்டுவிட்டு அன்னை பாண்டியனின் திருமகளாகத் தனியே இப்பூமியில் தோன்றக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்குக் குறு முனிவர், “விச்சுவாவசு என்ற ஓர் கந்தர்வன் இருந்தான். அவனது மகள், விச்சாவதி . அவள் உமையம்மையின் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள், அவள், தனது தந்தையிடம், ‘உமையம்மையின் அருளைப் பெறச் செய்ய வேண்டியது என்ன?’ என்று கேட்டாள். விச்சுவாவசு, தன் மகளுக்கு, உலக மனைத்தையும் பெற்ற உமாதேவியின் திருமந்திரத்தை உபதேசம் செய்தான். மகிழ்ந்த விச்சாவதி, ‘அன்னையை வழிபட வேண்டிய தலம் என்ன?’ என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசு, ‘பூவுலகத்தில், துவாதசாந்தம் என்று புகழ் பெற்றதும், கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் உள்ளதுமான புண்ணியத் தலத்தில், யார் ஒருவர் அன்னையைத் தரிசித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் பெரும் பேற்றைப் பெற்றவர்களாவார்கள்’ என்று எடுத்துரைத்தான்.

தந்தையிடம் அனுமதி பெற்று கந்தர்வ கன்னியான விச்சாவதி பூவுலகம் வந்தாள். கடம்ப வனத்தை அடைந்தாள். தந்தை உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது சொல்லி, அன்னையை வணங்கி வந்தாள். ஒருநாள் அன்னை மூன்று வயதுக் குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். மகிழ்ந்த விச்சாவதி அன்னையிடம், ‘தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும்’ என்று வேண்டினாள். அன்னையும் ஆசிர்வதித்து, ’உன் விருப்பம் என்ன?’ என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி, ‘அன்னையே, தற்போது நீ காட்சி தருகின்ற இதே உருவத்திலேயே எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்’ என்று அன்போடு வேண்டினாள். அதனைக் கேட்ட அன்னை அங்கையற்கண்ணி, ‘பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் என்ற மன்னன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம்’ என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை, மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள்” என்று அகத்தியர் சக முனிவர்களிடம் அன்னைஅவதரித்த கதையைக் கூறினார்.

மன்னரின் முடிவு

தடாதகைப் பிராட்டி மதுரையை ஆட்சி செய்துவரும் நிலையில், மன்னன் மலயத்துவசன் நோய்வாய்ப்பட்டான். ஒருநாள் தன் அமைச்சரான சுமதி என்பவரை அழைத்து, “அமைச்சரே! அரசியாரைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். இதனை உம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்” என்று கூறி, அன்னைக்கு இருக்கும் மூன்று தனங்கள் பற்றிய ரகசியத்தையும், சிவபெருமான் அவள் முன் தோன்றியதும், ஒரு தனம் மறைந்துவிடும் என்பதையும், அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்ற விபரங்களையும் தெரிவித்தான். பின்னர் அவனது உயிர் பிரிந்தது.

மதுரை மீனாட்சி

தடாதகைப் பிராட்டி, பாண்டிய நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீன் தனது பார்வையாலேயே குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டிப் பாதுகாப்பது போல தடாதகைப் பிராட்டியும் தம் குடிமக்களைப் பாதுகாத்து வந்தார். அதனால் ’மீனாட்சி’ என்று போற்றப்பட்டார்.

பாடல் நடை

மலயத்துவசன் செய்த வேள்வி

மிக்க மக வேள்வி செய் விருப்பு உடையன் ஆகி
அக் கணம் அதற்கு உரிய யாவையும் அமைத்துத்
தக்க நியமத்து உரிய தேவியொடு சாலை
புக்கனனன் இருந்து மகவேள்வி புரிகிற்பான்

அன்னையின் அவதாரம்

தெள்ளமுத மென்மழலை சிந்தவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரு மெவ்வுலகு மீன்றாள்

இறைவனின் வாக்கு

மன்னவநின் நிருமகட்கு மைந்தர்போற்
  சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென்
  றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னனையா டனக்கிறைவன் வரும்பொழுதோர்
  முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவர னருளாலோர் திருவாக்கு
  விசும்பிடைநின் றெழுந்த தன்றே

அன்னையின் ஆட்சி

வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தார்முடி வேய்ந்துதன் குடைமனு வேந்தன்
கரைசெய் நூல்வழ கோல்செலக் கன்னியாம் பருவத்
தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு

உசாத்துணை


✅Finalised Page