ஞா. சாமுவேல்
- சாமுவேல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாமுவேல் (பெயர் பட்டியல்)
ஞா. சாமுவேல் (ஞா. சாமுவேல் ஐயர்; தரங்கை ஞா. சாமுவேல்; சங்கை ஞா. சாமுவேல்) (செப்டம்பர் 18, 1850 - மே 20, 1927) கவிஞர், எழுத்தாளர், கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். கிறிஸ்தவக் கீர்த்தனைகள் பலவற்றை இயற்றினார். லெய்ப்ஜிக் எவாஞ்சலிகல் லூத்தரன் மிஷன் (L.E.L.M - Leipzig Evangelical Lutheran Mission) கவுன்சிலின் முதல் உறுப்பினர். 'குணப்படு பாவி' என்னும் ஞா. சாமுவேலின் கீர்த்தனைப் பாடல் மிகவும் புகழ்பெற்றது.
பிறப்பு, கல்வி
ஞா. சாமுவேல், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள கருப்பூர் என்ற சிற்றூரில், செப்டம்பர் 18, 1850 அன்று, ஞானாச்சரியம் - பூவம்மாள் இணையருக்குப் பிறந்தார். தரங்கம்பாடியில் உள்ள ஆங்கிலோ தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்றார். இ.எல்.எம். சென்ட்ரல் உயர்நிலைப்பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். தருமபுரம் ஆதீன மடத்தில் சேர்ந்து யாப்பிலக்கணம் உள்பட தமிழ்ப் புலவருக்கான பயிற்சி பெற்றார். ஆனால் சூழல்களால் அதனை நிறைவு செய்யாமல் மடத்தில் இருந்து வெளியேறினார்.
1872-ல், தரங்கை இறையியல் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஜெர்மானிய மொழியை முதன் முதலில் கற்ற தமிழராக ஞா. சாமுவேல் அறியப்படுகிறார்.
தனி வாழ்க்கை
ஞா. சாமுவேல், தாம் படித்த பள்ளியில் ஆசிரியராகவும், மாணவர் விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றினார். இறையியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஞா. சாமுவேல் மணமானவர். மனைவி: பேரின்ப முத்தாச்சியம்மாள். மகன்கள்: ஞானாச்சரியம், ஞானமாணிக்கம், ஞானாபரணம். மகள்கள்: சீதம், புஷ்பம், சோபனம்.
மதப்பணிகள்
ஞா. சாமுவேல், 1878-ல், தரங்கம்பாடியில், சுவார்ட்ஸ் ஐயரால், புது எருசலேம் தேவாலயத்தின் குருவாகத் திருப்பொழிவு பெற்றார். 1880-ல் அத்தேவாலயத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். தரங்கம்பாடி, காரைக்கால், மணிக்கிராமம், பொறையார், பெங்களூர் போன்ற இடங்களில் குருவாக இருந்து ஊழியம் செய்தார். காரைக்காலில் திருச்சபை ஒன்றை உருவாக்கினார். பலருக்குத் திருமுழுக்கு செய்வித்தார். கிராமங்கள் தோறும் சென்று சத்திய வசனங்களை உபதேசித்துப் பலரை கிறிஸ்தவ மதத்தை ஏற்க வைத்தார்.
ஞா. சாமுவேல் தரங்கம்பாடியில் உள்ள இறையியல் கல்லூரியில் 1897 முதல் 1919 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். பெங்களூரில் உள்ள ஐக்கிய இறையியல் கல்லூரியில் 1921 முதல் 1927 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பொறுப்புகள்
- லைஃப்சிக் மிஷன் ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினர்.
- இறையியல் கல்லூரியில் பயிற்சியளிக்கும் செமினரியின் தலைவர்
- புதிய ஏற்பாடு திருத்திய மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினர்
இலக்கிய வாழ்க்கை
ஞா. சாமுவேல் பஜனைப் பாடல்கள் பலவற்றை இயற்றி மக்களுக்கு உபதேசித்தார். பல சபை நிகழ்வுகளில் அவற்றை கதாகாலேட்சபமாகப் பாடி மக்களை ஈர்த்தார். சுவிசேஷக் கீர்த்தனைகள் உள்ளிட்ட சில கீர்த்தனைப் பாடல் நூல்களை இயற்றினார், தூபகலசம், 'நறுமலர்க் கொத்து', 'ஒரு சந்திநாள் தியானப் புத்தகம்', 'சத்தியவேத பாயிரம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். தரங்கம்பாடி லுத்தரன் திருச்சபை நூல்கள் பலவற்றைப் பொறுப்பேற்று வெளியிட்டார்.
இசை வாழ்க்கை
ஞா. சாமுவேல், இசை மூவர், தமிழ் மூவர் கீர்த்தனைகளால் ஈர்க்கப்பட்டார். வெளிநாட்டவர்களின் இசைப் பாடல்களும் சாமுவேலை மிகவும் கவர்ந்தன. அதனையொட்டி எளிய சந்தம் மற்றும் ராகத்தில் தானும் பல கீர்த்தனைகளை இயற்றினார். ஜெர்மானியப் பாடல்கள் பலவற்றை மொழிபெயர்த்து அவற்றிற்குத் தமிழ் இசை வடிவம் கொடுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை ஞா. சாமுவேல் இயற்றினார். 'குணப்படு பாவி' என்னும் ஞா. சாமுவேலின் கீர்த்தனைப் பாடல் மிகவும் புகழ்பெற்றது. அவர் இயற்றிய கீர்த்தனைகளில் சில.
தமிழ்க் கீர்த்தனைகள்
"என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே"
இயேசுவே செங்கரும்பே - உனை
எத்தனை நாவினால் இத்தினம் போற்றுவேன்
துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் - உம்மை மா அரசே
மொழிபெயர்ப்புக் கீர்த்தனைகள்
ஞா. சாமுவேல், ஜெர்மனிலிருந்து சில கீர்த்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவை
- கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
- இரத்தம் காயம் குத்தும்...
- ஆ ஏசுவே நீர் எங்களை...
- எந்த நாள் போம்...
- உம்மை துதிக்கிறோமே...
- வெகுபேருக்கு இன்பமான...
இதழியல்
ஞா. சாமுவேல், 1885 முதல் 1908 வரை, கிறிஸ்தவ சமயத்தின் முன்னோடி இதழான அருணோதயம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மறைவு
ஞா. சாமுவேல், மே 20, 1927 அன்று சென்னையில் காலமானார்.
மதிப்பீடு
ஞா. சாமுவேல் கிறிஸ்தவம் பரப்பிய இறைத்தொண்டர்களுள் ஒருவர். தமிழாசிரியர், மதப்பரப்புரையாளர், எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர் எனப் பல களங்களில் பணியாற்றினார். புகழ்பெற்ற பல கீர்த்தனைகளை இயற்றினார். தமிழ் கிறிஸ்தவத்தின் சிறந்த இதழாசிரியர்களுள் ஒருவராகவும், குறிப்பிடத்தகுந்த கீர்த்தனை ஆசிரியருள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
நூல்கள்
- உள்ளது நாற்பது
- சத்திய வேதபாயிரம்
- திருச்சபை சரித்திரத் தொகுப்பு
- திருச்சபை வருஷ விபரம்
- புதுப்பழமொழித் தொகுப்பு நூல்
- தியானப் புத்தகம்
- திருவிருந்தாடி
- தூப கலசம்
- பாலர் பூச்சக்கரம்
- கதாமலர்க் கூடை
- லூத்தர் சரித்திரப் புத்தகம்
- கிராமப் பிரசங்க புத்தகம்
- சமயோகித வேத வாக்கியக் குறிப்புகள்
- குடியின் கேடுகள் - கள்ளுக்கும்மி
- சுவிசேஷக் கீர்த்தனைகள்
- நறுமலர்க் கொத்து
- உள்ளது சொல்வேன்
- அருளுரைப் புத்தகம்
- தரங்கை மிசியோன் சரித்திரம்
உசாத்துணை
- N. SAMUEL OF TRANQUEBAR
- தியானமலர்.ஆர்க்
- கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்
- கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்: ஜெயமோகன் தளம் கட்டுரை
- ஞா. சாமுவேல் கீர்த்தனைகள்: யூ ட்யூப் தளம்
- குணப்படு பாவி - கீர்த்தனை
- சேனைகளின் கர்த்தரே - கீர்த்தனை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 09:09:39 IST
