under review

ஜோதிர்லதா கிரிஜா

From Tamil Wiki
ஜோதிர்லதா கிரிஜா
ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா (ஜோதிர்லதா முக்தா கிரிஜா: பிறப்பு: 1936).நடைமுறை வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை, பிரச்சனைகளை மையமாக வைத்துச் சிறுகதைகள், நாவல்களை எழுதியவர். 70 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு இலக்கியப் பரிசுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஜோதிர்லதா கிரிஜா, திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில், மே 27, 1936-ல் பிறந்தார். உயர் கல்வியை முடித்தார். ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

ஜோதிர்லதா கிரிஜாவுக்கு, சென்னையில், அஞ்சல் துறையில் சுருக்கெழுத்தாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து பணியாற்றி பதவி உயர்வு பெற்றார். நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்று எழுத்துப் பணியில் ஈடுபட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

ஜோதிர்லதா கிரிஜாவின் தந்தை பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் மூலம் இலக்கிய நூல்கள் அறிமுகம் ஆயின. தீவிர வாசிப்பு அனுபவத்தினால் எழுத்தார்வம் வந்தது. தினமணி கதிருக்கு சில சிறுகதைகளை எழுதி அனுப்பினார். அப்போது அதன் ஆசிரியராக இருந்த துமிலன், “நீ மிகவும் சிறிய பெண். பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது” என்ற குறிப்புடன் அவற்றைத் திருப்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைகள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஜோதிர்லதா கிரிஜாவின் முதல் சிறுகதை, 1950-ல், ’ஜிங்லி’ சிறுவர் இதழில், அவ்விதழின் ஆசிரியராக இருந்த ரா.கி. ரங்கராஜனால் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் கதைகள் எழுதினார். எழுத்தாளர் தமிழ்வாணன், ஜோதிர்லதா கிரிஜாவை ஆதரித்து, தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ஆர்.வி, அழ.வள்ளியப்பா போன்றோரும் ஜோதிர்லதா கிரிஜாவை எழுத ஊக்குவித்தனர்.

‘குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் எழுது’ என்று தமிழ்வாணன் ஆலோசனை கூறினார். அதன்படி ஜோதிர்லதா கிரிஜா எழுதிய பெரியவர்களுக்கான முதல் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் 1968-ல் வெளியானது. ‘அரியும் சிவனும் ஒண்ணு’ என்னும் தலைப்பிலான அக்கதை, கலப்புமணம் பற்றியதாகும். தொடர்ந்து 'அதிர்ச்சி’ எனும் மற்றொரு சிறுகதையும் விகடனில் வெளியாகி வாசக கவனம் பெற்றது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி எனப் பல இதழ்களில் ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் வெளியாகின.

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

பெண்ணியச் சிந்தனைகளும், முற்போக்கு எண்ணங்களும் கொண்டவையாக ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் அமைந்துள்ளன. பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணைக் கொடுமைகள், திருமணப் பிரச்சனைகள், பணியிடங்களில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளால் ஏற்படும் துயர்கள், பாலியல் சிக்கல்கள், பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறைகள், வன்முறைகள், மறுமணம், பொருந்தாத் திருமணம் போன்ற சமூகத்தின் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையக் கருவாகக் கொண்டு பல கதை, கட்டுரை, நாவல்களை எழுதியுள்ளார்.

புதினங்கள்

ஜோதிர்லதா கிரிஜாவின் ‘நாங்களும் வாழ்கிறோம்’ புதினம், பெண்களுக்குக் கல்வி என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் கூறுகிறது. ‘தனிமையில் இனிமை கண்டேன்’ என்ற நாவல், ஜாதிப் பிரச்சனையோடு, கல்வியின் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறது. பெண்களின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு மிக முக்கிய காரணமான வரதட்சணைப் பிரச்சனையைப் பற்றிப் பேசும் ‘மன்மதனைத் தேடி’ நாவல், அதற்கான தீர்வையும் முன்வைக்கிறது. ஏழைப் பெண்களுக்கு, பணம் படைத்த செல்வந்தர்களால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது ’போராட்டம்’ புதினம். மலேசியாவின் ‘ தமிழ் நேசன்’ இதழில் தொடராக வெளிவந்த இவரது ‘இல்லாதவர்கள்’ நாவல் குறிப்பிடத் தகுந்த ஒன்று, ஏழை மக்களை, உயர்வர்க்கச் சமூகம் எந்த அளவுக்குத் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்தி விட்டுப் பின் தூக்கி எறிந்து விடுகிறது என்பதை அதில் எழுதியிருக்கிறார் ஜோதிர்லதா கிரிஜா. சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அமைந்தது ‘மணிக்கொடி’ நாவல். இது சென்னை வானொலியில் ஓரங்க நாடகமாகத் தொடர்ந்து ஒலிபரப்பானது.

சிறுகதைகள்

நாவல், குறுநாவல், கட்டுரைகளோடு தீவிரத் தன்மை கொண்ட பல சிறுகதைகளையும் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருக்கிறார். குமுதம் இதழில் வெளியான "கொலையும் செய்வாள்" என்ற சிறுகதை வெளியான காலத்தில் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது. தன்னைக் கொன்று அதன் பின் மறுமணம் செய்து கொண்டு சுகமாக வாழ நினைக்கும் கணவனையும், நிறைய வரதட்சணை கிடைக்கும் என அதற்காக ரகசியத் திட்டம் தீட்டும் மாமியாரையும் ஒரு பெண் கொலை செய்வதுதான், ‘கொலையும் செய்வாள்' சிறுகதை. “காவு” என்ற சிறுகதை, திரைப்படப் பாடலாசிரியர்களைக் கண்டித்து எழுதப்பட்டதாகும். கவிஞர் கண்ணதாசனைக் குறி வைத்து எழுதப்பட்ட அக்கதை, கண்ணதாசன் இதழிலேயே வெளியானது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய அம்சங்கள் கொண்ட பல சிறுகதைகளை ஜோதிர்லதா கிரிஜா கண்ணதாசனில் எழுதியிருக்கிறார்.

ஆண்களின் போலித்தனத்தை உரித்துக் காட்டும் ‘கவரிமான் கணவரே..’ சிறுகதை, பெரிய பதவிகளில் இருந்துகொண்டு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், எப்படியெல்லாம் ஊழல்கள் செய்து அலுவலகப் பணத்தை மறைமுகமாய்ச் சுரண்டுகிறார்கள் என்பதையும், ஆனால், அவர்களே தங்களின் கீழ் பணி புரியும் சாதாரண ஊழியர்களின் சிறு குற்றங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் எப்படியெல்லாம் கொடுமையாகத் தண்டிக்கிறார்கள் என்பதையும் கூறும் ’இளிக்கின்ற பித்தளைகள்’, சிறுகதை, மற்றும் ‘வாரிசுகள் தொடர்வார்கள்’, ‘அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம்’, ‘நான் ஒண்ணும் நளாயினி இல்லை’ போன்ற இவரது சிறுகதைகள் முக்கியமானவை.

பிற பங்களிப்புகள்

25-க்கும் மேற்பட்ட நாவல்கள், 650-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், மற்றும் பல நாடகங்களை ஜோதிர்லதா கிரிஜா எழுதியுள்ளார். வங்காளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவருடைய சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய ‘தாயின் மணிக்கொடி’ என்னும் சிறாருக்கான நூல், உக்ரெய்ன் மொழியில் பெயர்க்கப்பட்டு, 1987-ல் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலை இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது. சிறார்களுக்காக நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஐந்திற்கும் மேற்பட்ட புதினங்களையும் ஜோதிர்லதா கிரிஜா எழுதியுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் நிறைய எழுதியிருக்கிறார். முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’, ‘ஃபெமினா’, ‘ஈவ்ஸ் வீக்லி’, ‘யுவர் ஃபாமிலி’, ‘ஃபிக்க்ஷன் ரிவ்யூ’, ‘சண்டே எக்ஸ்பிரஸ்’, ‘விமன்ஸ் இரா’, ‘வீக் எண்ட்’ ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் 'ஒப்பன் பேஜ்' பகுதியில் சமூகம் சார்ந்த, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘தி பொயட்’ இதழிலும் ஆங்கிலத்தில் கவிதை, வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’, ‘துக்ளக்’, ‘திண்ணை’ இணைய இதழ், வல்லமை மின்னிதழ் போன்றவற்றிலும் ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

கிரண் பேடியின் ”As i See” நூலின் பெரும் பகுதியை ஜோதிர்லதா கிரிஜா சாருகேசி, ப. சுந்தரேசன் ஆகியோருடன் இணைந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

விருதுகள்

  • தினமணி கதிர் நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு: ‘துருவங்கள் சந்தித்த போது…’ நாவலுக்கு.
  • கல்கி பொன்விழாப் போட்டிப் பரிசு: ‘மணிக்கொடி’ நாவலுக்கு.
  • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசு: ‘மணிக்கொடி’ நாவல்.
  • லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை வழங்கிய ‘சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான பரிசு’
  • இலக்கிய சிந்தனை பரிசு (நியாயங்கள் மாறும், தலைமுறை விரிசல் சிறுகதைகளுக்காக)
  • திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவலுக்கான பரிசு.
  • தமிழ் வளர்ச்சித் துறையின் 1999-ம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலுக்கான முதல் பரிசு: ‘மறுபடியும் பொழுது விடியும்’ நாவல்.
  • அமுதசுரபி நாவல் போட்டிப் பரிசு
  • கே.ஆர்.வாசுதேவன் இலக்கியப் பரிசு
  • கம்பம் பாரதியார் சங்கப் பரிசு
  • மன்னார்குடி-செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை அமைப்பு வழங்கிய பன்முக எழுத்தாளர் விருது
  • 2013-ல் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மூத்த பெண் எழுத்தாளருக்கான விருது.
  • கம்பன் கழகத்தின் சிவசங்கரி விருது.

இலக்கிய இடம்

பெண்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் தன் படைப்பில் முன் வைத்தவர் ஜோதிர்லதா கிரிஜா. பெண்களின் பல பிரச்சனைகளைப் பூசி மெழுகாமல் வெளிப்படையாகத் தன் படைப்புகளில் கூறியுள்ளார். பெண்களின் சில பிரச்சனைகளுக்குப் பெண்களே காரணமாக உள்ளனர் என்பதையும், பெண்களுக்கான பல பிரச்சனைகள் உண்மையில் பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் சேர்த்தே பாதிக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பிரச்சனைகள், அகச் சிக்கல்களைப் பேசும் பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவராக ஜோதிர்லதா கிரிஜா மதிக்கப்படுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • புதிய யுகம் பிறக்கட்டும்
  • தனிமையில் இனிமை கண்டேன்
  • அழகைத்தேடி
  • சாதி இரத்தத்தில் ஓடுகிறது
  • குருஷேத்திரக் குடும்பங்கள்
  • வாழத்தான் பிறந்தோம்
  • நாங்களும் வாழ்கிறோம்
  • மன்மதனைத் தேடி
  • வசந்தம் வருமா?
  • மரபுகள் முறிகின்ற நேரங்கள்
  • சிறகு முளைத்த பிறகு
  • அவசரக் கோலங்கள்
  • வித்தியாசமானவர்கள்
  • அவர்கள் கிடக்கிறார்கள்
  • புறத்தே ஒரு பூப்பந்தல்
  • துருவங்கள் சந்தித்தபோது
  • படி தாண்டிய பத்தினிகள்
  • இதயம் பலவிதம்
  • இல்லாதவர்கள்
  • அன்பைத் தேடி
  • காதல் போயின்
  • மத்தளங்கள்
  • போராட்டம்
  • இப்படியும் ஒருத்தி
  • தொடுவானம்
  • மறுபடியும் பொழுது விடியும்
  • காதல் தொடர்கிறது
  • அலைகளும் ஆழங்களும்
  • மன விலக்கு
  • புருஷன் வீட்டு ரகசியம்
  • தேடி வந்த காதல்
  • மணிக்கொடி
  • பெண்களின் சிந்தனைக்கு
  • சுவடிகள் சொன்னதில்லை
சிறுகதைத் தொகுப்புகள்
  • கோபுரமும் பொம்மைகளும்
  • மகளுக்காக
  • அம்மாவின் சொத்து
  • திருப்புமுனை
  • அரியும் சிவனும் ஒண்ணு
  • ஞானம் பிறந்தது
  • வெகுளிப் பெண்
கட்டுரை நூல்கள்
  • இன்றும் நாளும் இளைஞர்கள் கையில்
  • உடன் பிறவாத போதிலும்
  • நாமிருக்கும் நாடு
  • பாரதியார் வாழ்க்கை வரலாறு
நாடகம்
  • பொன்னுலகம் நோக்கிப் போகிறார்கள்
சிறார் நூல்கள்
  • நம் நாடு
  • தாயின் மணிக்கொடி
  • நல்ல தம்பி
  • புரட்சிச் சிறுவன் மாணிக்கம்
  • வனஜாவின் அண்ணன்
ஆங்கில நூல்கள்
  • The story of Jesus Christ Retold in Rhymes
  • Pearls from the Prophet
  • Voice of Valluvar
  • Gandhi Episodes
  • Ramanayana in Rhymes
  • Mahabharatha
  • Mini Bharat
  • Song on the Sun God (Adithya Hirudhayam)
  • The Living God at Puttaparthi (Baghavan Sri Sathyasai Baba Life)
  • The Inscrutable Mulla Nasrudin Episodes in rhyming verses
  • Caught in the Cross Fire
  • The War is not yet over

உசாத்துணை


✅Finalised Page