சொக்கநாத கலித்துறை
சொக்கநாத கலித்துறை தருமபுர ஆதீனத்தின் முதல் ஞானாசிரியரான குருஞான சம்பந்தர் தாம் வழிபட்ட சொக்கலிங்கம் மீது இயற்றிய தோத்திர நூல்.
ஆசிரியர்
சொக்கநாத கலித்துறையை இயற்றியவர் குருஞான சம்பந்தர். தருமபுர ஆதீனத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைமை குருவாகவும் இருந்தவர்.
நூல் அமைப்பு
சொக்கநாத கலித்துறை 11 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது. சிவபெருமானை நினைந்து பாடியாடும்படி செய் என்று வேண்டுவதோடு, தம் கையில் எழுந்தருளிவந்த மகாலிங்கத்தில் (இந்த லிங்கம் குருஞான சம்பந்தர் பொற்றாமரைக்குளத்தில் சிவபெருமான் ஆணைப்படி கண்டெடுத்தது) என்றும் மகிழ்ந்து உறைந்து, அன்பர்களுக்குப் பிறவித்துயர் மாற்றி என்றும் சிவானந்தப் பேறு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். எல்லாப் பாடல்களிலும் உலக மக்களின் இயல்பைத் தன் இயல்பாக எற்றிச் சொல்லி அருள் வேண்டுகிறார்.
முதல் பத்து பாடல்களும் 'மதுராபுரிச் சொக்க நாயகனே' என்றும் 11-ம் பாடல் 'பிஞ்சகனே' என்றும் முடிகின்றன.
பாடல் நடை
கல்லது நெஞ்சம்
கல்லது நெஞ்சம் இரும்பே
இருசெவி கண்கள்மரம்
சொல்லுவ தும்பொய் அவமே
தொழில்துக்க சாகரமாம்
அல்லலென் பங்குநின் அன்பர்பங்(கு)
ஆனந்த மாகவைத்தாய்
நல்லது நல்ல மதுரா
புரிச்சொக்க நாயகனே. 3
எனை ஆண்டருள் பிஞ்சகனே
அறிவைத் திருப்பிநின் பாதார
விந்தம் அடையவில்லை
நெறியைக் கொடுத்து நிறுத்தினை
யேநின்ம லாஇனிஎன்
பொறியைத் தவிர்த்துநின் ஆனந்த
சாகர பூரணத்தைப்
பிறிவற் றிருக்கவைப் பாய்எனை
ஆண்டருள் பிஞ்ஞகனே. 11
உசாத்துணை
- சொக்கநாத கலித்துறை, மதுரைத் திட்டம்
- தமிழ்ப்புலவர் வரலாறு-குருஞான சம்பந்தர்-மு அருணாசலம், தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:55:53 IST