செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி
செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி (பொ.யு 19-ம் நூற்றாண்டு) இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி. சூஃபி ஞானியர் மீது பாடல்கள் பல பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி பொ.யு 19-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் பிறந்தார். இவரின் தந்தை பாக்தாத்தில் பிறந்த ஷாஹ் அபுபக்கரின் மகன் செய்கு முகய்யதீன் காதிரி. சூஃபி ஞானி.
ஆன்மிகம்
செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரியின் சீடர்கள் பலர் புலவர்களாக இருந்தனர். முகம்மதுப் புலவர், பஹாருதீன் ஹுசைன், புகாரீ ஹீரைய்ரா சவால், ஆ.பி. அப்துல்காதிறு ஆகியோர் இவரின் மாணவர்கள்.
இலக்கிய வாழ்க்கை
செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி 'திருத்தோத்திரக் காரணமாலை' என்ற பாடலை முகய்யத்தீன் அப்துல் காதிறு ஜீலானி பேரில் பாடினார். இது 'நீதி மெய்ஞானமாலை' என்று அழைக்கப்பட்டது. 'கனஜீல கறாமாத்துமாலை' என்ற நூலை நாகூர் ஒலி முஹம்மது கெளது குவாஸீர் மேல் பாடினார். ஹஸ்ரத் கிலுறுநபி மேல் 'கிலுறுமாலை' பாடினார்.
பாடல் நடை
- ஞானக்கண்மாலை
பாட்டின் பயனறியேன்
பல கலயுந் தோநதறியேன்
கூட்டிலுறைந்த பொருள் குவலயத்திற் கண்டறியேன்
ஏட்டி லெழுத்தறியேன் ஏவல விலக்கறியேன்
நாட்டில் என் சொற்பிழை திருத்தி
நாட்டி வைப்பீர் நாவலரே
நூல்கள் பட்டியல்
- திருத்தோத்திரக் காரணமாலை
- கனஜீல கறாமாத்துமாலை
- திருத்தோத்திரமாலை
- ஞானப்பெண்மாலை
- ஞானக்கண்மாலை
- உஹதத்துமாலை
- மெய்ஞானப் பஃறொடை
- வாஹித்தியா மாலை
- அஹதத்து மாலை
- மெய்ஞானத்தாய்மகள் வினாவிடை
- கிலுறுமாலை
உசாத்துணை
✅Finalised Page