under review

சுப. நாராயணசாமி

From Tamil Wiki
சுப. நாராயணசாமி 8.jpg
சுப. நாராயணசாமி.jpg

சுப. நாராயணசாமி (சுப்பையா நாராயணசாமி) (பிறப்பு:ஜூன் 8, 1935) மலேசியாவின் சமூகச் செயல்பாட்டாளர். மலேசியாவில் அரசியல், சமூகம், பொது இயக்கப்பணி எனப் பல்வேறு துறைகளில் செயலாற்றினார்.

பிறப்பு, கல்வி

சுப. நாராயணசாமி ஜூன் 8, 1935-ல் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுங்கை பெசியில் பிறந்தார். சுப. நாராயணசாமியின் தந்தையார் பெயர் சுப்பையா. தாயார் பெயர் மீனாட்சி. சுப்பையா - மீனாட்சி இணையரின் 5 பிள்ளைகளில் சுப. நாராயணசாமி மூத்த பிள்ளையாவார். செல்வந்தராகத் திகழ்ந்த சுப. நாராயணசாமியின் தந்தையாரின் தொழில் மலாயாவில் ஜப்பானியர்களின் வருகையின் காரணமாகப் பாதிப்பு அடைந்தது. போர் முடிவதற்குள் சுப. நாராயணசாமியின் குடும்பம் வறிய நிலையை அடைந்தது. மலாயாவின் ஜப்பானிய காலக்கட்டத்தில், ஐ.என்.ஏ.யின் வேண்டுகோளுக்கு இணங்கி, சுப. நாராயணசாமியின் தந்தை குடும்பத்தோடு கோலாலம்பூரிலிருந்து தஞ்சோங் காராங் பகுதிக்குச் சென்று நெல் பயிரிட்டு இந்திய தேசியப் படையினருக்கு அளித்தார். போருக்குப் பின்னர், மீண்டும் சுப. நாரயணசாமியின் குடும்பத்தினர் கோலாலம்பூருக்குத் திரும்பினர்.

சுப. நாராயணசாமி தமது குடும்பத்தினருடன்

சுப. நாராயணசாமி தமது ஆரம்பக்காலக் கல்வியை லொக் யூ (சன்பெங்) தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு வரை பெற்றார். இரண்டாம் உலகப் போர் காரணத்தினால் இவருடைய கல்வி இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் சுப. நாராயணசாமி இரண்டாம் உலகப் போர் முடிந்து பள்ளியில் மீண்டும் இணைய எண்ணினார். ஆனால், வயது மீறிய காரணத்தால் அவரால் தமது கல்வியைத் தொடர முடியவில்லை. இருந்தபோதிலும், லொக் யூ (சன்பெங்) தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரின் உதவியினால், அவர் தொடர்ந்து நான்காம் ஆண்டு வரை பதிவு செய்யப்படாத மாணவனாகக் கல்வி பெற்றார்.

திருமணம், தொழில்

ஜப்பானியர் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக எஸ்.சி. என்ற சிறப்புப் பாதுகாப்புப் படை ஒன்றை மலாயாவில் உருவாக்கினர். அந்தச் சிறப்புப் பாதுகாப்புப் படையில் சேரும் இளைஞர்களுக்குத் துப்பாக்கி பயன்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டதோடு அவர்களை ரப்பர் தோட்டங்களுக்குக் கட்டாயச் சேவைக்குப் பயன்படுத்தினர். சுப. நாராயணசாமி எஸ்.சி படையில் சேராமல் இருக்க, தன் 12-ஆவது வயதில் அவரின் தந்தையார் அவரை ஒரு கடையில் பாக்கு நறுக்கும் தொழிலில் சேர்த்தார்.

ஏப்ரல் 1, 1950-ல் சுப. நாராயணசாமி தமது தந்தை மற்றும் வைரவன் என்பவரின் உதவியினால் இந்தியன் வங்கியில் ஊதியமின்றி அலுவலகப் பையனாகப் பணியாற்றினார். பின்னர் இரண்டு மாதத்திற்குப் பிறகு, 47 வெள்ளி ஊதியத்திற்கு அலுவலகப் பையனாகப் பணியாற்றினார். சுப. நாராயணசாமி இந்தியன் வங்கியில் அலுவலகப் பையனாக வேலை செய்த காலத்தில், செட்டிநாட்டு அரசர் சர்.எம்.எம் முத்தையாவிற்கு உபசாரம் செய்தார். பின்னர் செட்டிநாட்டு அரசர் சர்.எம்.எம் முத்தையா சுப. நாராயணசாமியின் சேவையைப் பாராட்டி அவருக்கு இந்தியன் வங்கியில் எழுத்தர் வேலையை வழங்கினார். தொடர்ந்து அங்கேயே அவருக்குப் பணி ஓய்வு பெறும் வரையில் படிப்படியாகப் பலவித பணி உயர்வுகள் கிடைத்து நிறைவாக வங்கி காசாளராகப் பதவி வகித்தார். இந்தியன் வங்கியில் சேவையாற்றிய சுப. நாராயணசாமி 1985-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

சுப. நாராயணசாமி 1969-ம் ஆண்டு வசுந்தராதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சுப நாராயணசாமி - வசுந்தராதேவி இணையருக்கு 5 பிள்ளைகள். அவர்களில் மூவர் பெண், இருவர் ஆண் பிள்ளைகள் ஆவர். 2008-ம் ஆண்டு சுப. நாராயணசாமியின் மனைவி காலமானார்.

பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை தந்த மேன்மை தாங்கிய சிலாங்கூர் சுல்தானுடன் சுப. நாராயணசாமி

பொது வாழ்க்கை

அரசியல் ஈடுபாடு

1943-ம் ஆண்டில், ஐ.என்.எ-வின் பாலக் சேனா பிரிவில் சுப. நாராயாணசாமி தமது 10வது வயதில் சேர்ந்தார். அப்போதிலிருந்து, சுப. நாராயணசாமி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தீவிர பற்றாளறானார். அவரின் சுதந்திரப் போராட்டத்தின் பாதையைச் சுப. நாராயணசாமி பின்பற்றினார். ஒன்றரை ஆண்டு காலம் பாலக் சேனா பிரிவில் சுப. நாராயணசாமி யுத்தத்திற்கான பயிற்சியைப் பெற்றார். பயிற்சி பெற்றும் சுப. நாராயணசாமி யுத்தத்திற்குச் செல்லும் படை பிரிவுக்கு நேரடியாகச் செல்லவில்லை.

1946-ம் ஆண்டு மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் முதல் அமைப்புக் கூட்டத்தில் சுப. நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர், 1952-ல் இந்தியன் காங்கிரஸின் இளைஞர் குழு உறுப்பினராக தமது 17-ஆவது வயதில் சேர்ந்தார். தமது 19-ஆவது வயதில், சுப. நாராயணசாமிக்குத் தமிழ்நாட்டில் நடந்த இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 1955-ல் மலாயன் இந்தியன் காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கும் பணியில் சுப. நாராயணசாமி முக்கியப் பங்காற்றினார்.

தோ புவான் இல்லத்தில் சுப. நாராயணசாமி
சுப. நாராயணசாமி 9.jpg

மலாயா 1957-ல் சுதந்திரம் அடைந்த பிறகு, சுப. நாராயணசாமி இந்தியர்கள் வாழும் தோட்டத்திற்குச் சென்று, மலாயாவிற்குச் சுதந்திரம் கிடைத்ததைப் பற்றிய விழிப்புணர்வைப் பிராச்சாரங்கள் மூலம் வழங்கினார். தேர்தல், வாக்களிக்கும் உரிமை, வாக்காளராகப் பதிவு செய்வதன் முக்கியத்துவம் போன்றவற்றைத் தோட்டத்தில் வாழும் இந்திய சமூகத்தினருக்குக் கூறினார்.

நிர்வாகத் தலைவர்

சுப. நாராயணசாமி 1960-ம் ஆண்டு தொடங்கி 2000-ம் ஆண்டு வரை லொக் யூ (சன்பெங்) தமிழ்ப்பள்ளியின் நிர்வாகத் தலைவராகத் திகழ்ந்தார்.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர்

சுப. நாராயணசாமி தமது 28-ஆவது வயதில், கோலாலம்பூரில் ஜி.வி.தேவரின் கீழ் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சமய மற்றும் கல்விக் கிளையின் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ல் சுப. நாராயணசாமி கோவிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 தொடங்கி 1973 வரை சுப. நாராயணசாமி ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவராகச் செயல்பட்டார்.

நேதாஜி சேவை மன்றத்தின் வழி கல்வி நிதி வழங்கும் சுப. நாராயணசாமி
நேதாஜி மையம்/ நேதாஜி சமூக நல அறவாரியம்

மலேசியாவில் நேதாஜி மையம் 1965-ம் ஆண்டு குருபாதம், சுப. நாராயணசாமி, அமரிக் சிங், சௌத்ரி, பானி மற்றும் மாரிமுத்து போன்றோர்களால் தோற்றுவிக்கப்பட்டது. நேதாஜி மையத்தின் செயலாளராக சுப. நாராயணசாமி 1965-ம் ஆண்டு செயலாற்றினார். 1965-ம் ஆண்டு ஐ.என்.எ பிரிவின் கீழ் யுத்தத்திற்குச் சென்ற 2000 படை வீரர்கள் நேதாஜி மையத்தில் பதிவு செய்தனர். யுத்தத்திற்குச் சென்றவர்கள் மட்டுமே நேதாஜி மையத்தில் பதிவு செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தததால், 1997-ம் ஆண்டு தான்ஸ்ரீ எல். கிருஷ்ணன் மற்றும் தான்ஸ்ரீ கே.ஆர் ஆகியோருடன் இணைந்து சுப. நாராயணசாமியும் அவரின் நண்பர்களும் நேதாஜி சமூக நல அறவாரியத்தைத் தோற்றுவித்தனர். கோலாலம்பூரில் உள்ள விஸ்மா கொன்வாவில் நேதாஜி மையம் மற்றும் நேதாஜி சமூக நல அறவாரியத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.

வரலாற்று அடையாளம்

மலாயா சுதந்திரம் அடைந்த பின், செப்டம்பர் 30, 1957-ல் பிரிட்டிஷ் நாட்டின் கொடி இறக்கப்பட்டது. அச்சமயத்தில் ம.இ.கா இளைஞர் பகுதியில் செயலாற்றிய 30 இந்தியர்களுக்குத் தலைவராகத் திகழ்ந்தார் சுப. நாராயணசாமி. சுப நாராயணசாமியிடம் இறக்கப்பட்ட பிரிட்டிஷ் கொடி வழங்கப்பட்டது.

ஈடுபாடுகள்

1992-ம் ஆண்டு நேதாஜி இயக்கத்தின் வெளியீட்டில் வெளியான ‘சுபாஷ் சந்திர போஸ் - மலேசியரின் கண்ணோட்டம்’(Netaji Subash Chandra Bose - A Malaysian Perspective) என்ற புத்தகத்திற்காகப் பல தகவல்கள் வழங்கி புத்தகம் வெளியிடுவதில் பங்காற்றினார் சுப. நாராயணசாமி. தொடர்ந்து, சுப. நாராயணசாமி சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் உருவாகிய இயக்கங்கள், சுதந்திரப் போராட்டங்கள், ஐ.என்.ஏவின் போராட்டங்கள் போன்ற வரலாற்றுத் தகவல்களைப் பகிரும் நபராகச் செயலாற்றுகிறார். 2019-ம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு பெர்னாமா செய்தி பிரிவினருடன் மலாயாவின் சுதந்திரக் கால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

எ.எம்.என் விருது பெரும் சுப. நாராயணசாமி

விருது

  • எ.எம்.என் விருது (1980)

உசாத்துணை

  • மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள் தொகுதி 1, 2019.
  • Netaji Service Centre


✅Finalised Page