under review

சுப்பிரமணிய பண்டிதர்

From Tamil Wiki

To read the article in English: Subramania Pandithar. ‎


சுப்பிரமணிய பண்டிதர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) இசைவாணர், தமிழ்ப்புலவர். பலவகை கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றி இசையமைத்தவர். பழனி தண்டாயுதபாணி சுவாமி மீது பல கீர்த்தனைகளும் சந்தப்பாடல்களும் பாடியவர்.

வாழ்க்கைக்குறிப்பு

சுப்பிரமணிய பண்டிதர் வைத்தியர் மரபில் முத்தையா ஞானியார் என்பவரின் மகனாகப் பிறந்தார். ஆயுர்வேத பாஸ்கரர் என்ற பட்டம் பெற்றவர்.

இசைப்பணி

பழனி தண்டாயுதபாணி சுவாமி மீது இவர் இயற்றிய பாடல்கள் 1852-ல் தண்டாயுதபாணி சந்நிதியில் அரங்கேற்றப்பட்டன. 1871-ல் இவர் பாடல்களின் ஐந்தாம் பதிப்பு அச்சானது. ஒன்பது கீர்த்தனைகள் எழுதினார்.

ராகம்: தன்யாசி
பல்லவி:
ஆடுது பார் - ஒரு மயில் ஆடுது பார்
அனுபல்லவி:
வாடும் பயிருக்கு மழைபோல மரர்முன்
வந்தின்பம் நல்கும் பழனிக் குமரரை
நீடும் பிடரியில் தாங்கிக் கொண்டேயிவர்
நித்தியர் நித்தியர் நித்தியர்
சத்தியர் சத்தியர் என்றிங் (ஆடுது பார்)

சந்தக்கும்மி, காவடிச்சிந்து, தாலாட்டு, குயிற்பாட்டு, எச்சரிக்கை, லாலி, ஊசல், கட்டியம் என்னும் பலவகைப் பாடல்களும் இயற்றினார். அவற்றுக்கு இசைக்குறிப்பும் குறிப்பிட்டுள்ளார். நூல் வெளிவந்த சமயத்தில் 1852-1871க்குள்ளாகவே ஐந்து பதிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதிலிருந்து இவர் பாடல்களுக்கு இருந்த வரவேற்பை அறிய முடிகிறது. இவரது பாடல்களில் முடுகு என்னும் சந்தவகையை[1] பயன்படுத்தினார்.

எடுத்துக்காட்டு

ராகம்: புன்னாகவராளி, தாளம்: ஆதி
பல்லவி:
வேலிருக்க வினையு முண்டோ - அஞ்சாதே நெஞ்சே
வேலிருக்க வினையு முண்டோ
அனுபல்லவி:
சேலிருக்குஞ் செங்கமல வாவிசூழ் பழனிமலைச்
சேவலன் புகலரு மகில புவன
காவலன் கரமலர் மிசையொளிர் வடி (வேலிருக்க)
சரணம்:
வாலசுப்பிர மண்ணிய தேவனே யுனக் கபைய மபையமென
ஓலமிடு மும்பருய்யவே கணப்பொழுதினி லெழுதிரை
வேலையைக் கிரவுஞ்சனை தாரகனை சிங்கமுக
வீரனைக் கதிரெதிர் பொருகதனொடு சூரனைப் பொடிபட வருமெரிசுடர் (வேலிருக்க)

இலக்கிய வாழ்க்கை

முனீசுரர் செய்த சீவரட்சாமிர்தம் என்னும் வைத்திய நூலை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். தேரையார் எழுதிய் அபதார்த்த குண சிந்தாமணி நூலை திருத்தி அச்சிட்டார். சாற்றுகவிகள் சில எழுதினார்.

சாற்றுகவி

சீர்கொண்ட பரஞ்சோதி முனிவர்முன மியற்றுஞ்
செய்யதிரு விளையாட லெனும்பெருங் காப்பியத்தைப்
பார்கொண்ட கீர்த்தனமா கச்சுருக்கி யுரைத்தான்
பகர்மழவைப் பதியுறைவிப் பிரகுலமா மணியாம்
ஏர்கொண்ட கலையுணர்சுப் பிரமணியக் கவிஞ
னிருநிலமுய்ந் திடவதனை யழகப்ப மகிபன்
பேர்கொண்ட கேசவமா லச்சுக்கூ டத்திற்
பிழையறவச் சிற்பதித்துப் பெரும்புகழ்பெற் றனனே.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. முடுகிச் செல்லும் சந்தவகை


✅Finalised Page