under review

சி. தட்சிணாமூர்த்தி

From Tamil Wiki

To read the article in English: C. Dakshinamurthy. ‎

சி. தட்சிணாமூர்த்தி

சி. தட்சிணாமூர்த்தி(1943 - செப்டெம்பர் 23, 2016) தமிழ்நாட்டின் நவீன சிற்ப ஓவியக் கலைஞர்களில் ஒருவர். பெண் உருவங்களை நாட்டுப்புற மற்றும் ஆப்பிரிக்க அழகியலுடன் நவீன பாணியில் சிற்பங்களாக வடித்தார். அச்சுக்கலை, வண்ணக்கலை, உலோகம், சுடுமண் போன்ற ஊடகங்களில் படைப்புகள் செய்தவர் என்றாலும் பிறகு கல்லைத் தன் பிரதான ஊடகமாகக் கைகொண்டார். தட்சிணாமூர்த்தி தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள், நூல்களுக்கான அட்டைப்படம் மற்றும் ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் துறையின் ஆசிரியராகவும், பிறகு அத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். லலித் கலா அகாடமியின் தேசிய விருது பெற்றார்.

பிறப்பு, இளமை

தட்சிணாமூர்த்தி 1943-ல் வட ஆற்காடு டாக்டர் அம்பேத்கர் மாவட்டம் குடியாத்தத்தில் சின்னராஜ் முதலியார்-குப்பம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஒரு அண்ணன், மூன்று அக்கா, ஒரு தங்கை என ஐந்து உடன் பிறந்தவர்கள்.

குடியாத்தம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறுவயதில் இருந்தே தட்சிணாமூர்த்திக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. இவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் குடியிருந்த குயவர் உருவங்களை உருவாக்குவதை பார்த்து ரசித்து தானும் களிமண்ணில் சிறு உருவங்கள் செய்து பார்த்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்பில் ஓவியம் தேர்வுப் பாடமானது அவருக்கு உந்துதலாக அமைந்தது. பள்ளி கலை ஆசிரியராக இருந்த எஸ்.பி. கந்தசாமி தட்சிணாமூர்த்தியின் ஓவிய ஆர்வத்துக்கு தூண்டுதலானார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவருடைய பெற்றோர் அவரை பொறியியல் படிப்பில் சேர்க்க ஆசைப்பட்டனர். அவரோ சென்னை கலைப் பள்ளியில் சேரும் ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு லாரி ஏறினார்.

தனி வாழ்க்கை

1972-ல் சென்னையைச் சேர்ந்த எம்.என். வசந்தகுமாரியைத் திருமணம் செய்து கொண்டார். மகன்அன்புக்குமரன், மகள் அபிராமி. தட்சிணாமுர்த்தியின் மனைவி வசந்தகுமாரி சென்னை ஓவியக் கல்லூரியின் உலோக வேலை துறையில் துவக்க காலத்தில் பணியாற்றியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர். கலைஞரான கருணாமூர்த்தி வசந்தகுமாரியின் தம்பி. சிற்பி எஸ். கன்னியப்பனும் இவரது உறவினர். .

கலை வாழ்க்கை

கலைக் கல்லூரி
Dakshinamoorthy - painting

அரசு கலை மற்றும் கைவினை கல்லூரியில் வண்ணக்கலைத் துறை மாணவனாக 1960-ல் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்த போது அவருடைய ஓவியம் தேசிய ஓவியக் கண்காட்சியில் பங்கு பெற்றது.

சந்தானராஜ், தனபால் போன்ற மூத்த கலைஞர்களின் படைப்புகள் தட்சிணாமூர்த்தியை பெரியளவில் கவர்ந்தன. கலைக் கல்லூரியின் சிற்பத் துறையில் மாணவர்கள் குறைவாக இருந்ததால், கல்லூரி முதல்வர் பணிக்கர் ஆலோசனையின்படி தினம் 2 மணிநேரம் தனபால் மாஸ்டரின் சிற்ப வகுப்பிற்கு சென்று கற்றுக் கொண்டார். அந்தோணிதாஸ், எச். வி. ராம்கோபால், எஸ். முருகேசன் போன்றவர்களும் தட்சிணாமூர்த்திக்கு ஆசிரியர்களாக இருந்தனர்.

Dakshinamoorthy - metal sculpture

1966-ல் பணிக்கர் தலைமையில் சோழ மண்டல கலை கிராமம் தொடங்கப்பட்ட போது அதன் உறுப்பினராக தட்சிணாமூர்த்தியும் சேர்ந்து கொண்டார். கலைஞர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க கே.சி.எஸ் பணிக்கர் தொடங்கிய 'கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் சங்கம்' (Artists' Handicrafts Association) மூலமாக 'பத்திக்' படைப்புகள் விற்றும் பணிக்கர் அவ்வப்போது நடத்திய ஓவிய முகாம்கள் மூலமாக படைப்புகள் விற்றும் பணவரவு இருந்ததால் தட்சிணாமூர்த்தியால் சோழ மண்டலத்தில் நிலம் வாங்க முடிந்தது. 1968-1969-ல் ராதா சில்க் எம்போரியத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றினார். 1969-ல் சோழமண்டலம் பிளவுபட்ட போது அதிலிருந்து விலகி எஸ். கன்னியப்பனிடம் சென்று சேர்ந்தார். அவரின் ஆலோசனையின் படி அதே ஆண்டு கலைத் தொழில் கல்லூரியின் சுடுமண்(Ceramic) கலைத் துறையில் பகுதிநேர மாணவரானார். 1970-ல் அத்துறையின் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பிறகு சுடுமண் துறைத் தலைவரானார். காலையில் கல்லூரி நேரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வந்து தன் படைப்பு வேலைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 2001-ல் ஓய்வு பெற்றார். இடையில் 1978-ல் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலராக பிரிட்டனின் க்ராய்டன் வடிவமைப்பு மற்றும் அச்சுக் கலைக் கல்லூரியில் மேற்படிப்பு முடித்தார். ஓய்வு பெற்ற பிறகு சென்னை லலித் கலா அகாடமியில் தன் படைப்பு வேலைகளை தொடர்ந்தார். ஓவியர் ஆதிமூலம், பி வி ஜானகிராமன், ஜி ராமன், மோகன் கல்யாணி ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.

பயணம்
Ceramic Mural in Egmore Benefit Fund Society

இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கிரீஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். ஐரோப்பிய கலை ஆளுமைகளின் படைப்புகளை பார்வையிட்டிருக்கிறார்.

கலைப்படைப்புகள்

தட்சிணாமூர்த்தியின் கலை வாழ்க்கை ஓவியராகத் தான் துவங்கியது. பிறகு சிற்பத்திலும், அச்சுக்கலையிலும் ஆர்வம் கொண்டார். அச்சுக்கலையின் பல வகைமைகளில் படைப்புகள் செய்து பார்த்தார். பத்திக் படைப்புகள் செய்தார். சென்னை கலைக் கல்லூரியின் சுடுமண் துறையில் சேர்ந்தவுடன் பல சுடுமண் வேலைகள் செய்தார். உலோக சிற்பங்கள் உருவாக்கியிருக்கிறார். பிறகு தட்சிணாமூர்த்தியின் ஆர்வம் கல் சிற்பங்களை உருவாக்குவதில் திரும்பியது. ஜெர்மன் சிற்பி தாமஸ் லிங்க் சோழமண்டலத்திலும் லலித்கலா அகாடமி மகாபலிபுரத்திலும் நடத்திய சர்வதேச கல் சிற்ப முகாம்களில் கலந்து கொண்டார். கிரானைட் கருங்கல், ராஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ரோஸ் நிற கல் முதல் சாதாரணமாக சூழலில் கிடைக்கும் கற்கள் வரை பல வகைக் கற்களில் படைப்புகளை உருவாக்கினார். 1990-களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் சிற்பி ஸ்டீபன் காக்ஸ் சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலுக்காக உருவாக்கிய கல் சிற்பங்களைப் பார்வையிட்டார். ஆரம்ப காலத்தில் கல்லில் நிறைய மீன் மற்றும் பறவை சிற்பங்களை உருவாக்கினார். ஒட்டுமொத்தமாக தட்சிணாமூர்த்தியின் படைப்புகளில் பெண் உருவங்களே அதிகம்.

Dakshinamoorthy 5.jpeg

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள எழும்பூர் பெனிபிட் ஃபண்ட் சொசைட்டி லிமிடெட்(Egmore Benefit Fund Society Ltd) நிறுவனத்திற்கு செராமிக் சுவர் சிற்பம், 1970-ல் சென்னை உலக பல்கலைக்கழக மையத்தில் டெரகோட்டா சுவர் சிற்பம், 1972-ல் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினியருக்கான ஃபைபர் கண்ணாடி சிற்பங்கள், 1988-ல் ஹோட்டல் ட்ரைடெண்டிற்கான டெரகோட்டா சுவர் சிற்பம், 1989-ல் கோயம்பத்தூரில் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையில் டெரகோட்டா சுவர் சிற்பம், 1990-ல் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கான சுடுமண் சுவர் சிற்பம் போன்றவை தட்சிணாமூர்த்தியால் உருவாக்கி அளிக்கப்பட்டன.

இலக்கிய சிற்றிதழ்கள், நூல்களுக்கு நவீன ஓவியம் மற்றும் அட்டைப்படங்கள்

இலக்கிய மற்றும் நவீன ஓவியர்கள் முதன்முதலாக இணைந்து பங்காற்றிய , ஜூலை 23, 2016-ல் தொடங்கப்பட்ட 'நடை' சிறுபத்திரிகையில் ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன், பி. கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன் போன்றவர்களுடன் தட்சிணாமூர்த்தியின் ஓவியங்களும் இடம்பெற்றன. 1969-ல் வெளியிடப்பட்ட ஞானக்கூத்தனின் 'அன்று ஒரு கிழமை' கவிதைத் தொகுப்பில் தட்சிணாமூர்த்தியும் பங்களிப்பாற்றினார். 'கசடதபற' இலக்கிய சிற்றிதழின் 25-ஆவது சிறப்பிதழுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். 1976-ல் வெளியான சுந்தர ராமசாமியின் 'பல்லக்கு தூக்கிகள்' சிறுகதை தொகுப்பிற்கு முகப்போவியம் வரைந்து கொடுத்துள்ளார். 1985-ல் க்ரியா வெளியிட்ட சுந்தர ராமசாமியின் 'பள்ளம்' சிறுகதை தொகுப்பிற்கு தட்சிணாமூர்த்தி படைத்த சிற்பம் ஒன்றின் புகைப்படம் அட்டைப்படமாக பயன்படுத்தப்பட்டது.

இறப்பு

செப்டம்பர் 23, 2016 அன்று சென்னையில் தன் 73-வது வயதில் காலமானார்.

கலைத்துறையில் இடம், அழகியல்

Dakshinamoorthy 6.jpeg

தட்சிணாமூர்த்தி ஓவியம், பத்திக், சிற்பம், சுடுமண், அச்சுக்கலை என்று வெவ்வேறு ஊடகங்களில் படைப்புகள் உருவாக்கியிருக்கிறார். பிறகு சிற்பங்களைத் தன் முக்கிய கலை வெளிப்பாடாக்கினார். இவருக்கு மேற்கத்திய ஓவியரான பால் காகினின் படைப்புகள் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. அவரது ஓவியங்கள், மர சிற்பங்கள், சுடுமண் சிற்பங்களை நேரில் பார்வையிட்டிருக்கிறார். தட்சிணாமூர்த்தியின் வண்ண ஓவியங்களில் பால் காகினின் தாக்கத்தை உணர முடியும். பால் காகினின் படைப்புகளில் பெண்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் போன்று தட்சிணாமூர்த்தியின் படைப்புகளிலிலும் பெண் உருவங்கள் நிறைந்துள்ளன. தட்சிணாமூர்த்தியின் ஊரைச் சேர்ந்தவரும் கலை கல்லூரி ஆசிரியருமான சந்தானராஜ் ஓவியங்கள் மற்றும் சிற்பத்துறை ஆசிரியராக இருந்த தனபாலின் சிற்பங்களும் இவரை ஈர்த்தன. தட்சிணாமூர்த்தி வளர்ந்த நாட்டுப்புற சூழல் அவரது படைப்புகளிலும் எதிரொலித்தது. இவரது படைப்புகள் நாட்டார் சிறுதெய்வ உருவங்களின் ஆற்றல், எளிமை, நேரடித் தன்மையை கொண்டிருக்கிறது. தட்சிணாமூர்த்தி தன் படைப்புகள் பற்றி கூறியது, 'என் படைப்புகளுக்கான மன உந்துதலை நான் மக்களிடமிருந்தே பெறுகிறேன். தனி நபர்களாகவும் குழுவாகவும் மக்கள் என் மனதை நிறைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகள், தோற்றங்கள், அங்க அசைவுகள் ஆகியவற்றை நான் மிக நெருக்கமாக அவதானிக்கும் போது எனக்கான கருத்தாக்கங்கள் உருவாகின்றன. என்னுடைய காட்சி வெளிப்பாட்டு மொழியை நம்முடைய அய்யனார் உருவங்களிலிருந்தும் ஆப்பிரிக்க சிற்பங்களிலிருந்தும் பெற்றிருக்கிறேன்' என்றார்.

தொடக்கத்தில் சுடுமண், உலோகம் போன்ற பிற ஊடகங்களில் சிற்பங்கள் செய்தாலும் தன் கடைசி 25 வருடங்கள் கல்லிலேயே சிற்பங்கள் செய்தார். பெரும்பாலும் பெண் உருவங்களை செதுக்கினார். இருக்கும் கல்லை பெரியளவில் செதுக்கி குறைக்காமல் அச் சிற்பங்களில் ஏற்கனவே இருக்கும் மேடு பள்ளங்களை இடைவெளிகளை உபயோகித்து அதையே லாவகமாக கண் காது என்று செதுக்கி உருவங்களாக மாற்றுவார். கல்லில் இயற்கையிலேயே அமைந்திருக்கும் சொரசொரப்பு, கோடுகள், உயிர் கீறல்களை தக்க வைப்பார். கற்களின் அமைப்புகளுக்கு ஏற்ப தன் படைப்புகளை உருவாக்கும் இப்பாணியை மகாபலிபுரம் சிற்பங்களிலிருந்து பெற்றுக் கொண்டதாக தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார். மகாபலிபுரத்தின் சிற்ப அமைப்புகளான ஐந்து ரதம் போன்றவை கற்களை பெயர்த்தும் உடைத்தும் மாற்றாமல் இயற்கையாக அங்கே இருந்த கற்களின் அமைப்புகளை கொண்டே உருவாக்கப்பட்டன. முதலில் உளியை உபயோகித்து சிற்பங்கள் வடித்தவர் பிற்காலத்தில் கல் செதுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தினார். சென்னை மற்றும் தென்னிந்திய சூழலில் உளியை தவிர்த்து முதன்முதலாக கல் செதுக்கும் இயந்திரம் உபயோகித்து பெருமளவில் நவீன கல் சிற்பங்கள் செதுக்க ஆரம்பித்த சிற்பிகளில் தட்சிணாமூர்த்தியும் ஒருவர். தட்சிணாமூர்த்தி தன் விரைவிற்கும் அவசரத்திற்கும் புகழ் பெற்றவர். மற்ற கலைஞர்களை விட பல மடங்கு வேகத்தில் எண்ணிக்கையில் படைப்புகளை உருவாக்குவார். இந்த இயல்பு இவருக்கு சுடுமண், உலோகம் போன்ற ஊடகங்களை கையாளும் போது பிரச்சினையாகவும் இருந்திருக்கிறது. அதனால் கல் தட்சிணாமூர்த்திக்கு ஏற்ற ஊடகமாக இருந்தது. எதற்காகவும் காத்திருக்காமல் செதுக்கி கொண்டே இருக்கலாம். கலைஞர் கருணாமூர்த்தி கூறியது, "தட்சிணாமூர்த்தி சுடுமண் படைப்புகள் செய்யும் போது விரைவாக முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மண்ணை சுட்டெடுப்பதற்கு கால அவகாசம் தேவைப்படும். தட்சிணாமூர்த்தி அதை புரிந்து கொள்ளவே மாட்டார். அதனாலேயே படைப்புகள் சரி வராமல் வீணாகிவிடும். சுடுமண் துறைத் தலைவர் கன்னியப்பன் இதற்காக தட்சிணாமூர்த்தியிடம் கோபப்படுவதுண்டு. கல்லில் சிற்பங்கள் செய்யும் போதும் கூட கல் செதுக்கும் இயந்திரத்தை தட்சிணாமூர்த்தி தவறாக கையாள்வதுண்டு. அதிலும் விரைவு தான். சிற்பங்களில் அளவுகள் வடிவங்கள் அவருக்கு பொருட்டே அல்ல. தொடர்ந்து எதாவது செய்து கொண்டிருப்பார். நன்றாக வரவில்லையெனில் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த படைப்பை உருவாக்க துவங்கி விடுவார். கல்லில் ஒரு முகத்தை செதுக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பகுதி உடைந்து விழுந்திருக்கும். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால் அந்த இடத்தில் எப்படியோ கண் வாய் எல்லாம் செதுக்கி ஒரு உருவத்தை கொண்டு வந்திருப்பார். தட்சிணாமூர்த்தியால் ஊடகங்களை மற்றவர்கள் கையாள்வது போல் துல்லியமாக வரைமுறைக்குட்பட்டு கையாள முடியாது என்பது அவரது சிற்பங்கள் சிறந்த நவீன கலைப்படைப்புகளாவதற்கு உதவியது. தட்சிணாமூர்த்திக்கு அளவு வரைமுறை பற்றிய பிரக்ஞை இருந்திருந்தால் அவரது படைப்புகளில் வெறும் கைத்திறன் மட்டுமே இருந்திருக்கும்" என்றார். இவரால் உருவாக்கப்பட்டபெண் உருவங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்களுடன் அடுக்கடுக்காக நெருங்கியும் தனியாகவும் படைக்கப்பட்டிருக்கும். இந்த உருவங்கள் பலவும் முழுமையாக கால் பாதம் வரை அமையாமல் கால் முட்டியுடன் கணுக்காலுடன் முடிந்திருக்கும். இடை வரை அமைந்த சிற்பங்களும் உள்ளன. பெண் தலைகளும் நிறைய செதுக்கியிருக்கிறார். உருவங்கள் தட்டையாக கைகால் மற்றும் அங்கங்கள் உடலுடன் நெருங்கி கல்லோடு சேர்ந்து இருப்பதால் பல சிற்பங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது கல் தூண் போலவும் அருகில் வரும் போது அதில் உருவங்கள் தெரியும் விதத்திலும் அமைந்திருக்கும் அழகியலை கொண்டிருக்கிறது. கலைஞரும் லலித் கலா அகாடமியின் செயலாளருமாக இருந்த பழனியப்பன் கூறியது, "தட்சிணாமூர்த்தி பெண் உருவங்களை அதற்கான நளினத்துடன் படைத்த போது கூடவே துணிச்சலுடனும் மேதைமையை வெளிப்படுத்தும் முக அமைப்புகளையும் அச்சிற்பங்கள் கொண்டிருந்தன." என்றார். பளிங்கு சிற்பங்களுக்கு முக்கியத்துவம் இருந்த பாம்பே கலை உலகின் கவனத்தை மெதுவாக கருங்கல் சிற்பங்களை நோக்கித் திருப்பினார் தட்சிணாமூர்த்தி.

இவர் லலித் கலா அகாடமியில் பணிபுரிந்த போது தென்னிந்திய கலைஞர்களுக்கு டெல்லியில் அங்கீகாரங்கள் கிடைக்கச் செய்தார். பல கலைஞர்களுக்கு நல்கைகள்(scholarships) கிடைக்கக் காரணமானார். தட்சிணாமூர்த்தி பல கலைக் கண்காட்சிகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலம் இளம் படைப்பாளிகள் பயன் பெற முடிந்தது. கே. முரளிதரன், ராம சுரேஷ், சிங்கப்பூர் சிற்பியான பி. ஞானம் போன்றவர்கள் தட்சிணாமூர்த்தியின் மாணவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் நவீன ஓவியங்கள் இலக்கிய சிற்றிதழ்கள் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆதிமூலம் போன்ற ஓவியர்களைப் போல அதற்கு தட்சிணாமூர்த்தியும் பங்காற்றினார். பல தமிழ் நூல்களுக்கு அட்டைப்படம் மற்றும் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார். இன்று நவீன தமிழ் புத்தகங்களில் நவீன கலைப்படைப்புகள் இடம்பெறும் மரபிற்கு ஆதிமூலமும் தட்சிணாமூர்த்தியும் முன்னோடிகளாக இருந்தனர். நவீன தமிழிலக்கிய பரப்புடனான உறவை எப்போதும் பேணினார்.

விவாதங்கள்

கலை வட்டங்களில் தட்சிணாமூர்த்தியைப் பற்றிய புரிதல் என்பது அவர் தீவிரமாக படைப்பில் மட்டுமே ஈடுபடுபவராகவும் அதே நேரத்தில் படைப்பை சரியாக விலை பேசவோ விற்கவோ தேவையான மனநிலையும் ஆர்வமும் இல்லாதவராக இருந்தார் என்பதும் ஆகும். சிலர் தட்சிணாமூர்த்தியின் படைப்புகளின் சாயலில் படைப்புகளை உருவாக்கி விற்பனை செய்துள்ளனர்.

தட்சிணாமூர்த்தியின் படைப்புகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் சேகரிப்புகள்

தட்சிணாமூர்த்தியின் படைப்புகள் இந்தியா மற்றும் உலகின் பல இடங்களில் உள்ளன.

தட்சிணாமூர்த்தி வடித்த 82 இன்ச் உயர சுவாமி விவேகானந்தர் சிற்பம் பாராளுமன்றத்தில் உள்ளது. இச்சிலை முன்னாள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான டாக்டர் எல். எம். சிங்வியின் நன்கொடையாக வழங்கப்பட்டது.

டெல்லி மாடர்ன் ஆர்ட் காலரி, பெங்களூரு என்.ஜி.எம்.ஏ வளாகத்தில் திறந்த வெளி பூங்கா, ஹைதராபாத் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சோழமண்டலம் கலை கிராமம் போன்ற இடங்களின் வளாகங்களில் தட்சிணாமூர்த்தியின் படைப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

சென்னை அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு, பிர்லா கலை மற்றும் கலாச்சார அகாடமி - கொல்கத்தா, சண்டிகர் அருங்காட்சியகம், சிங்கப்பூர் ஞானி காலரி உட்பட பல அரசு மற்றும் தனியார் சேகரிப்புகளில் இவரது படைப்புகள் உள்ளன.

விருதுகள்

  • 1963 மற்றும் 1965 மாநில விருது, லலித் கலா அகாடமி
  • 1968, பெங்களூர் சித்ரகலா பரிஷத்தின் விருது
  • 1972, மைசூர் தசரா விருது
  • 1976 மற்றும் 1981, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு விருது
  • 1983-1985, புது தில்லியின் கலாச்சாரத் துறையால் ஜூனியர் ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டது
  • 1985 தேசிய விருது, லலித் கலா அகாடமி
  • 1989-1991, புது தில்லியின் கலாச்சாரத் துறையால் சீனியர் ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டது
  • 1999, சேலம் மாவட்ட கலைஞர்கள்-எழுத்தாளர்கள் சங்கத்தின் விருது
  • 2008-2009, கலை செம்மல் விருது, தமிழ்நாடு அரசு
  • 2009, கலை சாதனையாளர் விருது, புதுவை ஓவிய கலை பண்பாட்டு நற்சேவை இயக்கம்
  • 2014, சித்ரகலா ரத்னா விருது, தமிழ்நாடு கலை மற்றும் கைவினை மேம்பாட்டு சங்கம், படப்பை

பங்கெடுத்த ஓவிய முகாம்கள் சில

  • மார்ச் 23, 1988 - ஏப்ரல் 1,1988, கும்பகோணம் தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழு ஏற்பாடு செய்த சுடுமண் சிற்ப(Terracotta) கலைஞர்கள் முகாம்
  • 1990, மகாபலிபுரத்தில் லலித் கலா அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கல் சிற்பிகள் முகாமின் ஒருங்கிணைப்பாளர்
  • 1990, ஓஎன்ஜிசி கலைஞர் முகாம், டேராடூன்
  • 1992, தஞ்சாவூரின் 'தென் மண்டல பண்பாட்டு மையம்' மகாபலிபுரத்தில் நடத்திய சர்வதேச கல் சிற்பிகள் முகாமின் ஒருங்கிணைப்பாளர்
  • 1993, ஒருங்கிணைப்பாளர், 6-ஆவது ராஷ்ட்ரிய கலா மேளா, சென்னை
  • 1995, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவால் நடத்தப்பட்ட கலைஞர்கள் முகாமிற்கான ஒருங்கிணைப்பாளர்
  • 1999, சிற்பிகள் முகாம், விசாகப்பட்டினம்
  • 2002, கலை முகாம், ஊட்டி பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்

பிற பணிகள்

  • 1981, பொதுக்குழு உறுப்பினர், லலித் கலா அகாடமி, புது தில்லி
  • 1994, பொதுக்குழு உறுப்பினர், லலித் கலா அகாடமி, புது தில்லி
  • 2004, கர்நாடகாவின் குல்பர்கா விஷுவல் ஆர்ட்ஸ் கல்லூரிக்கான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) சக குழு உறுப்பினராக செயல்பட்டார்.
  • 2005, கர்நாடகாவின் மைசூர் சாமராஜேந்திர அகாடமி விஷுவல் ஆர்ட்ஸ்-க்கான (CAVA) தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) சக குழு உறுப்பினராக செயல்பட்டார்.
  • தமிழ்நாடு சினிமா தணிக்கை குழு(Censor Board) உறுப்பினராக, மத்திய திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு வாரியத்தில்(Central Board of Film Certification) இரண்டு முறை செயல்பட்டார்

கண்காட்சிகள்

1966-ம் ஆண்டு, சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள உள்ளூர் நூலக ஆணையத்தின் கட்டிடத்தில் தனது முதல் தனிமனிதர் கண்காட்சியை நடத்தினார் தட்சிணாமூர்த்தி.

தனிநபர் கண்காட்சிகள் சில

  • 1978, Croydon, United Kingdom
  • 1978, Morley Gallery, London
  • 1979, Buenos Aires, Argentina
  • 1985, Chennai
  • 1989, Croydon, United Kingdom
  • 1992, Design Scape Gallery, Mumbai
  • 1994, Delhi Art Gallery (Anamica), New Delhi
  • 1998, Chennai
  • 1998, Jehangir Art Gallery, Mumbai
  • 2003, Artworld, Chennai

குழு கண்காட்சிகள் சில

  • 1973, Seven Indian Artists Exhibition, Australia
  • 1975, Mumbai
  • 1981, Mumbai
  • 1983, Mumbai
  • 1982, 9th International Triennale of Coloured Graphic Prints, Switzerland
  • 1987, 7th International Small Sculpture Exhibition, Budapest, Hungary
  • 1990, 3rd International Asian European Art Biennale, Ankara, Turkey
  • 1989, Morley Gallery, London
  • 1990, Buenos Aires, Argentina
  • 1992, 7 South Indian Sculptors’, Art Heritage, New Delhi
  • 1993, The Madras Metaphor', Chennai and Mumbai
  • 1997, The Madras Metaphor', Birla Academy of Art and Culture, Kolkata
  • 2003, Romance with Images and Forms’, presented by Prakrit Art Gallery at Kuhu's Art Gallery, London
  • 2006, 'The Madras Metaphor', Cholamandal Artists Village, Chennai
  • 2007, 'Symbols of Exuberance', Sunjin Gallery, Singapore

இறப்பிற்கு பிந்தைய கண்காட்சிகள்

  • 2021, Her Divine Majesty, Gnani Arts Gallery, Singapore

நூல்கள்

  • சி. மோகன் எழுதிய 'காலம் கலை கலைஞர்கள்' நூலில் 'சி. தட்சிணாமூர்த்தி: கல்வெளிக் கலைப் பயணம்' என்ற தட்சிணாமூர்த்தி பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது.
  • 'நவீன கலையின் தமிழக ஆளுமைகள்' என்ற சி. மோகனின் நூலில் தட்சிணாமூர்த்தி பற்றிய கட்டுரையும் உள்ளது.
  • 1993-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமகால இந்திய சிற்பிகள் பற்றி வெளியிட்ட 'THE MADRAS METAPHOR'.
  • 1998-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமகால இந்திய சிற்பிகள் பற்றி வெளியிட்ட'AN ALGEBRA OF FIGURATION'.

உசாத்துணை


✅Finalised Page