under review

சி.பி.சிற்றரசு

From Tamil Wiki

To read the article in English: C. P. Chitrarasu. ‎

சி.பி.சிற்றரசு
இனமுழக்கம் இதழ்

சி. பி. சிற்றரசு (ஏப்ரல் 11, 1906 - பிப்ரவரி 16, 1978) அரசியல்வாதி, எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க எழுத்தாளர்களில் ஒருவராக கணிக்கப்படுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்.

பிறப்பு கல்வி

சி.பி.சிற்றரசின் இயற்பெயர் சின்னராஜ். சி.கே.பெத்தசாமி நாயுடு, லட்சுமி அம்மாள் இணையருக்கு காஞ்சிபுரத்தில் ஏப்ரல் 11, 1906-ல்பிறந்தார்.

சி.பி.சிற்றரசு சிலை

தனிவாழ்க்கை

சி.பி.சிற்றரசுக்கு சரசுவதி என்னும் மகள். சரசுவதி பி.வரதராசலு நாயுடு என்பவர் மகன் பி.வ.சுதர்சனனை மணந்தார். சி.என்.அண்ணாத்துரை தலைமையில் அந்த திருமணம் நடைபெற்றது

அரசியல்

சி.பி.சிற்றரசு தனித்தமிழியக்க தலைவர் கு. மு. அண்ணல் தங்கோவால் கவரப்பட்டு தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930-ல் நீதிக்கட்சியில் இணைந்தார். பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நடத்திய திராவிட இயக்கத்தில் பணியாற்றினார். 1949-ல் திமுகவை சி.என்.அண்ணாத்துரை உருவாக்கிய போது அதில் இணைந்தார். மு.கருணாநிதி டால்மியாபுரம் பெயரை மாற்றக்கோரி நடத்திய கல்லக்குடி போராட்டத்தின்போது அதன் இரண்டாம் கட்டத்தை தலைமைதாங்கி நடத்தினார். வெவ்வேறு இதழ்களை திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக நடத்தியிருக்கிறார்

1957-ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1962-ல் சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1964-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 23, 1970 முதல் ஏப்ரல் 20, 1976-ம் ஆண்டு வரை அந்த அவையின் தலைவராகப் பணியாற்றினார். அக்டோபரில் 1970-ல் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் 16-வது மாநாடு நடைபெற்றது; அதில் தமிழ்நாட்டின் சார்பில் சிற்றரசு கலந்துகொண்டார். 1976-ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதழியல்

  • 1952 ஆகஸ்டு 22-ம் நாள் 'தீப்பொறி' என்னும் வார இதழைத் தொடங்கினார்.
  • 1956 மே 3-ம் நாள் 'தீச்சுடர்' என்னும் என்னும் இதழைத் தொடங்கினார்.
  • 1959-ல் 'இனமுழக்கம்' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரபூர்வ 'நம் நாடு' இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரைப்படம்

1950-களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். 1960-ம் ஆண்டு வெளியான 'ஆட வந்த தெய்வம்' படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

இலக்கியவாழ்க்கை

சி.பி.சிற்றரசு கட்சிப்பிரச்சாரத்தின் பொருட்டு நாடகங்களையும் குறுங்கட்டுரைகளையும் எழுதினார். அவர் நடத்திவந்த இதழ்களில் ஐரோப்பிய அரசியல்தலைவர்கள் சிந்தனையாளர்கள் பற்றிய சிறு வரலாறுகளை எழுதினார். மேடைப்பேச்சுக்குரிய மிகைநடையில் எழுதப்பட்ட திராவிட இயக்கக் கொள்கைப்பிரச்சார நூல்களையும் எழுதியிருக்கிறார்.

மறைவு

சி.பி. சிற்றரசு பிப்ரவரி 16 , 1978-ல் மறைந்தார்

நினைவுகள்,வாழ்க்கை வரலாறுகள்

1989-ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சி.பி.சிற்றரசு பெயர் சூட்டப்பட்டது.

நாட்டுடைமை

சி.பி. சிற்றரசின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன,

இலக்கிய இடம்

சி.பி.சிற்றரசு திராவிட இயக்கம் உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவருடைய விஷக்கோப்பை[1] என்னும் நாடகம் புகழ்பெற்றது

நூல்கள்

வ.எண் நூலின் பெயர் வகை வெளியான ஆண்டு பதிப்பகம் குறிப்புகள்
01 இரத்த தடாகம் நாடகம் ? ?
02 இலங்கை எதிரொலி சொற்பொழிவுகள் 1953 திசம்பர் தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
03 உலக விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு 1979 ஆகஸ்ட் பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 12 அறிவியலாளர்களின் வரலாறு
04 உலகை திருத்திய உத்தமர்கள் வாழ்க்கை வரலாறு 1979 சூன் பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 18 மெய்யிலாளர்களின் வரலாறு
05 எமிலி ஜோலா - முதற்பாகம் கட்டுரைகள் 1952 மே தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
06 எமிலி ஜோலா - இரண்டாம் பாகம் கட்டுரைகள் 1952 செப்டம்பர் தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
07 கொலம்பஸ் வாழ்க்கை வரலாறு 1952 திராவிடப்பண்ணை, திருச்சி.
08 சரிந்த சாம்ராஜ்யங்கள் வரலாறு 1958 மே தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
09 சாக்கிய சிம்மன் ? 1952 திசம்பர் திராவிடப்பண்ணை, திருச்சி.
10 சாய்ந்த கோபுரம் வாழ்க்கை வரலாறு 1951 நவம்பர் தமிழ்மன்றம், திருச்சி மாஜினியின் வாழ்க்கை வரலாறு
11 சிந்தனைச் சுடர் ? ? ?
12 சீனத்தின் குரல் வரலாறு 1953 மே தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
13 சுதந்திரத் தந்தை ரூசோ வரலாறு ? ?
14 சேரனாட்டதிபதி நாடகம் ? ?
15 சோகச்சுழல் கதை}}1951 இராஜன் பதிப்பகம், மேட்டுப்பாளையம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்
16 தங்க விலங்கு நாடகம் 1951 ஆகத்து தமிழ்மன்றம், திருச்சி
17 போர்வாள் நாடகம் ? ?
18 மந்திரமுட்டை ? ? ?
19 மதி நாடகம் 1951 நவம்பர் தமிழ்மன்றம், திருச்சி
20 மார்ட்டின் லூதர் வாழ்க்கை வரலாறு 1951 செப்டம்பர் தமிழ்மன்றம், திருச்சி
21 விடுதலை வீரன் வாழ்க்கை வரலாறு ? ? ஆப்ரகாம் லிங்கன் வரலாறு
22 விஷக்கோப்பை வாழ்க்கை வரலாறு 1952 தமிழ்மன்றம், திருச்சி சாக்ரடீஸ் வரலாறு
23 வெங்கலச்சிலை வாழ்க்கை வரலாறு 1951 செப்டம்பர் தமிழ்மன்றம், திருச்சி லெனின் வரலாறு
24 ரோம்நாட்டு வீரன் வாழ்க்கை வரலாறு 1958 முத்துவேல் பதிப்பகம், திருச்சி
25 ஜோதிப்பெண் ? ? ?

இவைதவிர 'புறப்படு மகனே' ,'பேரனுக்கு' ஆகிய தொடர்களை இனமுழக்கம் இதழிலும் 'கபாடபுரம்' என்னும் தொடரை முன்னணி இதழிலும் எழுதியுள்ளார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page