under review

சின்ன வன்னியனார் பணவிடு தூது

From Tamil Wiki

சின்ன வன்னியனார் பணவிடு தூது (பதிப்பு: 2003) தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தாரால் இந்நூல்பதிப்பிக்கப்பட்டது. சின்னவன்னியனார் என்ற புரவலரிடம் பரிசு பெற்றுத் திரும்பிய புலவர் ஒருவர், வழியில் ஒரு பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு, அவளிடம் பணத்தைத் தூதாக விடுத்தலே சின்ன வன்னியனார் பண விடு தூது. இந்நூல் 396 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர், சூரிய நாராயண கவி.

பிரசுரம், வெளியீடு

சின்ன வன்னியனார் பணவிடு தூது நூல், புல்லைக் குமரேசர் பணவிடு தூது, கவிராயர் பணவிடு தூது ஆகிய தூது நூல்களுடன் இணைந்து, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தாரால், 2003-ல், பதிப்பிக்கப்பட்டது. உ.வே.சா., இவ்வோலைச் சுவடியின் முகப்பு ஏட்டில் 'வழுவாட்டி ஜமீன், புதுக்கோட்டை, மிதிலைப்பட்டி' எனக் குறித்துள்ளதால், மிதிலைப்பட்டியில் கிடைத்த ஓலைச்சுவடி என்றும், வழுவாட்டி ஜமீன் குறித்துப் பாடப்பட்ட நூல் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

ஆசிரியர்

சின்ன வன்னியனார் பணவிடு தூது நூலை இயற்றியவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த மிதிலைப்பட்டி சூரிய நாராயண கவி.

நூல் அமைப்பு

சின்ன வன்னியனார் பணவிடு தூது 396 கண்ணிகளைக் கொண்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கண்ணிகளாக மூவேந்தர்களின் சிறப்பு, வன்னிய மரபு, சின்ன வன்னியனாரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. புலவர் சின்ன வன்னியனார் பெயரில் தான் இயற்றிய இலக்கியங்களைக் குறிப்பிட்டு சின்னவன்னியனார் தனக்குப் பரிசாக அளித்த பொருள்களைப் பற்றிக் குறிப்பிட்டு அவனைப் புகழ்ந்துரைக்கிறார். சின்ன வன்னியன் செய்த போர்கள், அவன் குடும்பச் செய்திகள், வன்னிய மரபுச் செய்திகள், அக்காலச் சூழல், நாணயங்கள் பற்றிய செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன.

சின்னவன்னியனார் மீது தமிழ் மாலை பாடித் திரும்பி வந்துகொண்டிருக்கும் போது தஞ்சை சமஸ்தானத்துத் தாசி ஒருத்தியைக் காண்கிறார் புலவர். உடன் அவள் மீது காதல் கொள்கிறார். பொன்னும் நவமணியும் போல மன்மதனும் தேவி ரதியும் போல அப்பெண்ணும் தானும் இந்திர போகமென வாழத் தூது சொல்லி வரும்படி பணத்தைத் தூது விடுகிறார்.

பேச்சு வழக்குச் சொற்களும், வடமொழிச் சொற்களும் இத்தூது நூலில் இடம் பெற்றுள்ளன.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

சின்னவன்னியனார் சிறப்பு பற்றி, “சிவபிரான் வரத்தில் பிறந்தவர் பெத்த பெருமாள். அவரது மகன் இராமசந்த்ர வன்னியன். அவரது மகன் சிதம்பர சிகாமணி. அவரது மகன் பிரம விக்கிரமன். அவரது மகன் நல்லபிச்சன். அவருக்கு பிள்ளைகள் மூவர். அவர்களில் மூத்தவரே சின்ன வன்னியனார் என்னும் சின்னயன். இவர், சிவத்தெழுந்த பல்லவனின் தளபதியாகப் பணிபுரிந்து பல போர்களில் வெற்றி பெற்றவர். சிறந்த கொடையாளர்.” என்று புலவர் குறிப்பிட்டுள்ளார்.

சின்னவன்னியனார் அளித்த பரிசில்களை 96 -ம் கண்ணியில் கூறத் தொடங்கிய புலவர், தொடர்ந்து பணம், பொன் ஆகியவற்றின் சிறப்புகளை 315-ம் கண்ணி வரை கூறியுள்ளார். பணம் இறைவனுக்குச் சமமாகக் கூறப்படுகிறது. பெண்ணாசை, மண்ணாசை விட்டாலும் பணத்தாசை ஒழியாது என்றும், சிவன் பொன்னம்பலத்தில் ஆடியதும், இந்திரன் பொன் உலகிற்காக யாகம் செய்ததும் பணத்தின் சிறப்புக்களாகக் கூறப்பட்டுள்ளன. 'சீராம மாடை', 'பெறுமாடை' என பணத்தின் பல்வேறு பெயர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆதரவற்ற காலத்தில் நண்பனாக உதவக் கூடியது பணமே என்றும் புகழப்படுகிறது.

பாடல் நடை

சின்ன வன்னியனாரின் சிறப்பு

பூவுலகும் பாதலமும் பொன்னுலகும் என்னவரு
மூவுலகும் தோத்திரம்செய் மும்முரசான் - காவலரில்

போசன் நளராசன் புகழ்மூ அரசர்எனத்
தேசம் செழிக்கவளர் செங்கோலான் - வாசவனைச்

செங்கை வளையால் சிதற முடிதகர்த்த
சங்கம்மகிழ் பாண்ட்யகுல சந்ததியான் - துங்கம்மிகும்

அட்டதிக்கி னில்ப்ரசித்தன் அட்சயகு ணத்தன்மிக்க
அட்டலக்ஷ்மிக் கோர்கர்த்தன் அற்புதத்தன் - நிட்சேப

மானபரி பாலன்அபி மானகுண சீலன்உயர்
தானஅனு கூலம்நிறை சன்மானன்

பணத்தின் பெருமை

செய்யசெம்பொற் சோதிஎன்று தேவாரம் தன்னிலும்உன்
மெய்வடிவைச் சொன்னாரோ வேறுண்டோ - அய்யமில்லை
ஆகையால் நீயே அதிகம்என யான்அறிந்தேன்

மதிப்பீடு

தூது நூல்கள் பலவும் தலைவன் பால் தலைவி விடுக்கும் நூது நூல்களாகவே அமைந்திருக்க, தலைவி பால் பணத்தைத் தூதாக விடுத்த ஒரு சில நூல்களுள், சின்ன வன்னியனார் பணவிடு தூது நூலும் ஒன்று. சின்ன வன்னியனாரின் பெருமையும் பணத்தின் சிறப்பும் இந்நூலில் பலவாறாக விரித்துரைக்கப்பட்டுள்ளன. பணவிடு தூது நூல்களுள் ’சின்ன வன்னியனார் பணவிடு தூது’ குறிப்பிடத்தகுந்த ஒரு நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page