சிந்தியல் வெண்பா
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா . குறுகிய அடி எண்ணிக்கையுடைய வெண்பா குறள்வெண்பா என்று அழைக்கப்பட்டது போலவே, அடி எண்ணிக்கையில் சிறியதாக (சிற்றியல் - சிந்தியல்) உள்ள வெண்பா சிந்தியல் வெண்பா எனப் பெயர் பெற்றது. இது நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என இருவகைப்படும்.
சிந்தியல் வெண்பாவின் இலக்கணம்
- சிந்தியல் வெண்பா வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று வரும்
- மூன்று அடிகளைப் பெற்று வரும்.
- முதல் இரண்டு அடிகளும் நான்கு சீர்கள் கொண்ட அளவடியாக அமையும். ஈற்றடி மூன்று சீர்களைக் கொண்டிருக்கும்.
- இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்றோ, பெறாமலோ வரும்.
- நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளைக் கொண்டு முடியும்.
- சீர்களில் இயற்சீர் மற்றும் வெண்சீரைக் கொண்டு அமையும்.
- இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும்.
- செப்பலோசை உடையதாய் இருக்கும்.
சிந்தியல் வெண்பா வகைகள்
சிந்தியல் வெண்பா இரண்டு வகைப்படும். அவை, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
நேரிசைச் சிந்தியல் வெண்பா
மூன்று அடிகள் கொண்டதாய், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வரும். நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் பெற்று வருவதால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்பெயர் பெற்றது. இது ஒருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா என இரண்டு வகைப்படும்.
ஒருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் - சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
மேற்கண்ட பாடல், நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களுடன், மூன்று அடிகள் கொண்டு, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளது. அறிந்த, செறிந்த, சிறந்த, சிறந்த என ஒரே எதுகையைப் பெற்றுள்ளதால், இது ஒருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவா.
இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்
மேற்கண்ட பாடல், நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களுடன் மூன்று அடிகள் கொண்டு, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளது. நற், சுற், பொற் என்று ஒரு வித எதுகையும், பாலை என மற்றொரு எதுகையும் (நற், சுற், பொற்; பாலை) அமைந்து இரண்டு வித விகற்பங்கள் வந்துள்ளதால், இது இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா.
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
வெண்பாவிற்குரிய பொது இலக்கணத்தோடு, மூன்று அடிகள் கொண்டதாய், தனிச்சொல்லின்றி, ஒரு விகற்பத்தாலோ பல விகற்பத்தாலோ அமைவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இன்னிசை வெண்பா போல் தனிச்சொல்லின்றி வருவதால் இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்பட்டது.
இது ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, இரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, மூன்று விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா என மூன்று வகைப்படும்.
ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்டிர் அடி
மேற்கண்ட பாடல், இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணத்தோடு, மூன்று அடிகள் கொண்டதாய், தனிச்சொல்லின்றி அமைந்துள்ளது. நறு, பிற, பற என ஒரே வித விகற்பம் அமைந்துள்ளதால் இது ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
இரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
சுரைஆழ அம்மி மிதப்ப வரைஅனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப
கானக நாடன் சுனை
மேற்கண்ட பாடல் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணத்தோடு, மூன்று அடிகள் கொண்டதாய், தனிச்சொல்லின்றி அமைந்துள்ளது. சுரை; யானை, கானக என இருவித விகற்பங்களைக் கொண்டுள்ளதால் இது இரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
மூன்று விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
முல்லை முறுவலித்துக் காட்டின - மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற - போயினார்
திண்தேர் வரவுரைக்கும் கா
மேற்கண்ட பாடல், இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணத்தோடு, மூன்று அடிகள் கொண்டதாய், ஈற்றடி தவிர்த்து அடிதோறும் தனிச்சொல்லுடன் அமைந்துள்ளது. முல்லை, மெல்ல; சேயி, போயி; திண் என மூன்று வித விகற்பங்கள் கொண்டுள்ளதால் இது மூன்று விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாகும்.
உசாத்துணை
- யாப்பருங்கலக்காரிகை: சென்னை நூலகம்
- யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்: பதிப்பாசிரியர்: முனைவர் சோ. கண்ணதாசன்: தமிழ் இணைய மின்னூலகம்
- இலக்கண விளக்கம்: வைத்தியநாத தேசிகர்: பதிப்பாசிரியர்: தி.வே. கோபாலையர்: தமிழ் இணைய மின்னூலகம்
- யாப்பிலக்கணம்: விசாகப்பெருமாளையர்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
✅Finalised Page