under review

சித்தி கைறுன் நிஸா

From Tamil Wiki

சித்தி கைறுன் நிஸா (ஜூன் 1, 1964 - நவம்பர் 23, 2020) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்தி கைறுன் நிஸா இலங்கை சாய்ந்தமருதில் ஜூன் 1, 1964-ல் பிறந்தார். தந்தை அப்துல் மஜீத்.

அமைப்புப் பணிகள்

சித்தி கைறுன் நிஸா தடாகம் கலை இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பை நடத்தினார். இணையத்தளத்தின் வழியாக சர்வதேச ரீதியில் கவிஞர்களிடையே கவிதைப் போட்டிகளை நடத்தினார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் எனப் பல நாடுகளிலும் பல கவிதை நிகழ்வுகளில் கலந்துகொண்டார். தனது அமைப்பினூடாக பலரின் கவிதை நூல்களை வெளியிட்டார்.

இதழியல்

சித்தி கைறுன் நிஸா 1985 முதல் 2000-ம் ஆண்டுவரை 'தடாகம்' என்ற இலக்கிய இதழைத் தொடர்ச்சியாக வெளியிட்டார். தடாகம் இதழில் பல இளம் கவிஞர்கள் எழுதினர்.

இலக்கிய வாழ்க்கை

சித்தி கைறுன் நிஸா 'கலைமகள் ஹிதாயா மஜீட்', 'கலைமகள் ஹிதாயா றிஸ்வி' ஆகிய புனைப்பெயர்களில் எழுதினார். 1991-ல் 'நாளையும் வரும்' என்ற புதுக் கவிதைத் தொகுதியையும், 2000-ல் 'தேன் மலர்கள்' என்ற கவிதைத் தொகுதியையும், 'இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார்.

விருதுகள்

  • இளம் படைப்பாளி, தேசமான்ய, இரத்தினதீபம், பாவரசு என்ற விருதுகளையும் காவியத் திலகம், கலை மாமணி என்ற சர்வதேச விருதுகளும் பெற்றார்.

மறைவு

சித்தி கைறுன் நிஸா நவம்பர் 23, 2020-ல் காலமானார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • நாளையும் வரும்
  • தேன் மலர்கள்
  • இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை

உசாத்துணை


✅Finalised Page