under review

சமண திருவெம்பாவை

From Tamil Wiki

சமண திருவெம்பாவை அவிரோதிநாதர் இயற்றிய சமண தோத்திரப்பாமாலை. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையை அடியொற்றி, 'எம்பாவாய் 'என முடியும் பாடல்களைக் கொண்டது. மார்கழி மட்டுமின்றி எல்லா காலத்திலும் வாசிக்கக் கூடிய ஒரு பாமாலை. இதில் தீர்த்தங்கரர்களைப் போற்றி பாக்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆசிரியர்

இதனை இயற்றியவர் அவிரோதி நாதர். இவரை அவிரோதி ஆழ்வார் என்றும் அழைப்பர். சமணத் துறவிகள் ஊழ்கத்தில் ஆழ்ந்திருப்பதால் ஆழ்வார் என்ற சொல் அவர்களையும் குறிக்கும் எனக் [1]கருதப்படுகிறது. வைணவ சமயத்திலிருந்து மாறி, சமணக்கோட்பாட்டைப் பின்பற்றிய சமணர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

பதிப்பு

இந்த நூல் 1963-ல் அமரர் ஜீவபந்து அவர்களால் ஜினகாஞ்சி ஜைனத் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையுடன் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1977-ல் தஞ்சை ஆதிபகவன் ஜைன சேவா சமாஜத்தினரால் வெளியிடப்பட்டது. குறிப்பாக வேறு பிரதிகளில் விடுபட்ட செய்யுட்களும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

மயிலையில் கோவில்கொண்ட நேமிநாதர் மீது அவிரோதி ஆழ்வார் பாடிய 22 பாடல்களைக் கொண்டது. நேமிநாதரின் அருளும், தீர்த்தங்கரர்களின் தவமும், அறமும் பெருமையயும் சொல்லப்படுகின்றன. மார்கழி மாதத்தில் பெண்கள் நீராடி, அருகனை வணங்கி நோன்பிருக்கின்றனர். திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் காணப்படுவதுபோல் தோழியரை நீராட அழைக்கின்றனர்.

சமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு யக்ஷன் யக்ஷி காவலாய் இருப்பர், நேமிநாதர் என்னும் 22 வது தீர்த்தங்கரரின் காவல் தெய்வம் "தர்மதேவி". மழைக்கு உவமையாக தர்மதேவியின் கருணையை சொல்லும் சமணத் திருவெம்பாவை வரிகள்,

பிறவிப் பெருங்கடல் நீந்திய பெய்வளையாய்
உறவுத் தமர்வாழும் உச்சந்த வாழ்மலைமேல்
அறமிக வுஞ்செய்யும் அம்மை

பாக்களின் உட்கருத்தும், சந்தமும், சொற்றொடர் அமைப்பும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையைப் பெரிதும் ஒத்திருக்கின்றன.

யாப்பருங்கல விருத்தி எடுத்துக்காட்டுச் செய்யுள்

கோழியுங் கூவின குக்கி லழைத்தன

தாழியும் ணீலத் தங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவன டியேத்தி
கூழை நனையக் குடைந்துங் குளிர்புனல்
ஊழியுண் மண்ணுவோ மென்றேலோர் எம்பாவாய்.

பாடல் நடை

மூவா முதல்வன்

மூவா முதல்வன் உலகம்முழுதுணர்ந்த
தேவாதி தேவன் திருநாமம் யாம்பாடப்
பாவாய்நீ கேட்டிலையோ பைங்கண் துயிலுதியோ
பூவாரு மென்கழல்வள் போற்றியபொங்கு ஒலிபோய்த்
தேவாயிற் கேட்டலுமே தேர்ந்துநெஞ்சு சோர்ந்தயர்ந்து
பூவார் அமளிப் புலம்பப் புரண்டிங்கன்
ஓவா மனத்தில் உணர்விலா ஓவியம்போல்
ஆஆ!யென் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

( மூவா முதல்வன், உலக மூன்றும் உணர்ந்தவன், தேவாதி தேவனின் நாமம் பாடுவது கேட்காததுபோல் தூங்குகிறாயே! உடலோடு உள்ளமும் சோர்ந்து பூ மெத்தையில் உணர்வின்றி உறங்குகிறாயே, வியப்பாக இருக்கிறது)

பேரேது ஊரேது தமரார் அயலார்

உம்பர் பெருமான் உலகம் முழுதுணர்ந்தான்
செம்பொன் எயில்மூன்று உடைய சிநவரனார்
வெம்பு வினையகற்றி வேதம் பொழிந்தருளும்
சம்பு அருகன் சகல் செனன் அனந்தன்
விம்ப வடிவன் உயர்வீரன் அசோகத்தான்
நம்பெருமான் கோயில் நயந்த பிணாப்பிளைகாள்
தம்பேரேது ஊரேது தமரார் அயலார்
எம்பரிசால் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

(தேவர்களின் தலைவனும், உலகம் மூன்றும் அறிந்தவனும், செம்பொன்னாலான அரண்களைப்போல நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் உடைய சினவரனும், அருகனும், சகலசெனனும், ஒளிவடிவினனும், நல்வீரனும், அசோக மரத்தடியில் அமர்ந்தவனும் அக்கிய அவனுக்கு ஏது ஊர்? அவன் பெயர் என்ன? யார் சுற்றம்? யார் அயலவர், அவனை எப்படிப் பாடுவது?)

வாழி அருகன் மலர்த்தாமரையிரண்டும்

வாழி அருகன் மலர்த்தா மரையிரண்டும்
வாழியா மாகில் மலரிணைகள் தானாகும்
வாழியா மந்த மலர்ச்சே வடியிணைகள்
வாழிஎல்லா உயிர்க்கும் வன்ன மலரடிகள்
வாழிஎல்லா உயிக்கும் வாழ்வா மர்த்தாள்கள்
வாழிய வானோர்கள் வணங்கு மலர்ப்பதங்கள்
வாழிஎமை ஆட்கொண்டு அருளுகின்ற புண்டிரிகம்
வாழி மலர்க்கழல் நீராடேலோர் எம்பாவாய்.

(அருகனின் இரு தாமரையடிகள் வாழ்க! எவ்வுயிர்க்கும் அன்னமாகிய இணையடிகள் வாழ்க! எல்லாவுயிர்க்கும் வாழ்வான அடிகள் வாழ்க! எமை ஆட்கொண்டு அருளும் அடிகள் வாழ்க!)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page