under review

சண்முக.செல்வகணபதி

From Tamil Wiki
சண்முக.செல்வகணபதி (நன்றி: http://muelangovan.blogspot.com/)

சண்முக. செல்வகணபதி (ஜனவரி,1949) கல்வியாளர், தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் புலமை பெற்றவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15- பொழிவுகளாக திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கினார். இதுவரை 650க்கு- மேற்பட்ட மேடைகளில் இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

பிறப்பு, கல்வி

சண்முக.செல்வகணபதி திருவீழிமிழலையில் கி. சண்முகம், குப்பம்மாள் இணையருக்கு ஜனவரி 15,1949 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையிலும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியிலும், பி.ஓ.எல், முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

'டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு' என்னும் தலைப்பில் 1987- ல் இளம் முனைவர் பட்ட ஆய்வும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991- ல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வும் செய்து பட்டங்களைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

டிசம்பர் 5, 1974- அன்று திருவெறும்பூர் நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 29- ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி, திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்றுப் பணி நிறைவு பெற்றார்.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் ( 2007-2009).

ஆய்வுகள்

  • இலக்கியம், இசை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். உலக அளவிலான கருத்தரங்குகள் பதினைந்திலும், தேசியக் கருத்தரங்குகள் இருபத்தெட்டிலும், இதரக் கருத்தரங்குகள் எழுபத்தியிரண்டிலுமாகக் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். இதுவரை 85- கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
  • தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் இயலிசை நாடக மன்றத் திட்டத்தின் சார்பில் 'பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள்' என்ற ஆய்வேட்டை உருவாக்கினார்.
  • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைஞராக இருந்து, சிலப்பதிகாரம் வழி அறியலாகும் ஆடல் அரங்கேற்ற நுட்பங்கள் என்ற தலைப்பில் (2011, நவம்பர்) ஆய்வேட்டை உருவாக்கினார்.

சொற்பொழிவு

  • இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15- பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார். இதுவரை 650-க்கு மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளார்.
  • இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15- பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார்
  • திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருப்புகழ்ப் பொழிவுகளும் (90- பொழிவுகள்), திருவீழிமிழலை ஆலயத்தில் 110- திருமுறைப்பொழிவுகளும், திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்புகழ் இசைவிளக்கமும்(64-பொழிவுகள்), திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும் நிகழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில் 38-பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்

இலக்கிய இடம்

தமிழிசை சார்ந்த ஆய்வுகளில் சண்முக செல்வக் கணபதி முக்கியமானவர். தமிழின் இசைமரபு பற்றி ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய ஆய்வுமுறைமையை முன்னெடுத்தவர்களில் ஒருவர். சைவசித்தாந்த ஆய்வுகளிலும் குறிப்பிடத்த பங்காற்றியிருக்கிறார்.

படைப்புகள்

  • ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்
  • மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
  • கல்வி உளவியல் மனநலமும் மனநலவியலும்
  • தனியாள் ஆய்வு
  • வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
  • தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு
  • தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
  • மொழிபெயர்ப்பியல்
  • பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு
  • ஒப்பிலக்கிய வரம்பும் செயல்பாடும்
  • திருவீழிமிழலை திருத்தலம்
  • நன்னூல் தெளிவுரை
  • சீர்காழி மூவர்
  • தமிழ்க்கலைகள், இசைக்கலை நுட்பங்கள்(ஆறு பாடங்கள்)
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
  • அருணகிரியாரின் அருந்தமிழ் ஆளுமைகள்
  • இடைநிலைக் கல்வி நூல் தமிழ்ப்பாடம்
  • சித்தர் கருவூரார் வரலாறும் பாடல்களும்
  • பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வும் வாக்கும்.
  • மேனிலைக் கல்விநூல் தமிழ் ( 3- பாடங்கள்)
  • இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி 1
  • இராவ் சாகிப் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்
  • தஞ்சை தந்த ஆடற்கலை
  • தொல்காப்பியம் செய்யுளியல்
  • அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தலப் பெருமை
  • கட்டளைகள் ஒதுவார் பட்டயப் படிப்பு பாட நூல்(அச்சில்)
  • தமிழிசை மூவர்- ஓதுவார் பட்டயப் படிப்பு பாடநூல்
  • திருமங்கலமும் ஆனாய நாயனாரும்(அச்சில்)

பரிசுகள், விருதுகள்

  • செந்தமிழ் அரசு
  • விரிவுரை வித்தகச் செம்மல்
  • முத்தமிழ் நிறைஞர்
  • தமிழிசைச்செம்மல்
  • செந்தமிழ் ஞாயிறு
  • திருப்புகழ்த் தமிழாகரர்
  • உயர்கல்விச்செம்மல்
  • இயலிசை நாட்டிய முத்தமிழ் வித்தகர்
  • செந்தமிழ்ச்செம்மல்
  • தமிழ்ச்சுடர்
  • தமிழ்மாமணி
  • முத்தமிழ்ச்செம்மல்,
  • குறள்நெறிச் செம்மல்
  • பண்ணாய்வுப்பெட்டகம்
  • தொல்காப்பியர் விருது
  • பெரும்பாண நம்பி( பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு தமிழிசை விழாக்குழு)

உசாத்துணை


✅Finalised Page