under review

சங்கு (சிறார் இதழ்)

From Tamil Wiki
சங்கு இதழ் (படம் நன்றி: எழுத்தாளர், சிற்றிதழ் சேகரிப்பாளர் நவீன்குமார் முகநூல் பக்கம்)

சங்கு (1948) ஒரு சிறார் இதழ். அன்றைய திருச்சி மாவட்டம் (இன்றைய புதுக்கோட்டை) ராயவத்தில் இருந்து இவ்விதழ் வெளிவந்தது. வெ.சுப. நடேசன் செட்டியார் சங்கு இதழின் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளராக இருந்தார். அழ. வள்ளியப்பா கௌரவ ஆசிரியராகச் செயல்பட்டார்.

பதிப்பு, வெளியீடு

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் (அன்றைய திருச்சி மாவட்டம்) ராயவத்தில் இருந்து 1948 முதல் வெளிவந்த சிறார் இதழ் சங்கு. வாரமிருமுறை இதழாக வெளிவந்த சங்கு இதழின் விலை காலணா. எட்டுப் பக்கங்கள் கொண்ட இவ்விதழ், வாரந்தோறும் புதன்கிழமையும் சனிக்கிழமையும் வெளியிடப்பட்டது. பாலர் மலர், டமாரம் போன்ற சிறார் இதழ்களை நடத்திய தமிழ் நிலைய அதிபர் வெ.சுப. நடேசன் செட்டியார், சங்கு இதழின் நிறுவனர் வெளியீட்டாளராக இருந்தார். அழ. வள்ளியப்பா கௌரவ ஆசிரியராகச் செயல்பட்டார். அவர் அரசுப் பணியில் இருந்ததால் ஆசிரியர் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், புனை பெயரில் பணியாற்றினார். சங்கு இதழ், 1948-ன் ஆண்டு இறுதியில், இருபத்தி மூன்றாயிரம் பிரதிகள் விற்றதாக இதழின் குறிப்பு கூறுகிறது.

உள்ளடக்கம்

சங்கு இதழின் முகப்பில், சங்கு என்ற இதழ்த் தலைப்பின் இடமும் வலமும் ஒரு சிறுவனும் சிறுமியும் சங்கு ஊதுவதைப் போன்ற சித்திரம் இடம் பெற்றது. தலைப்பின் கீழ் ’குழந்தைகளுக்கு வாரம் இருமுறை’ என்ற குறிப்பு காணப்பட்டது. இதழின் ஆண்டினைக் குறிக்க சங்கு என்பதையும் மாதத்தைக் குறிக்க நாதம் என்பதையும் சங்கு பயன்படுத்தியது.

சங்கு இதழில் சிறார்களுக்கான கதைகள், சிறு துணுக்குகள், சிறார் பாடல்கள், விடுகதைகள், புதிர்கள் போன்றவை இடம் பெற்றன. கோட்டோவியப் படங்களும் இடம் பெற்றன. அழ. வள்ளியப்பாவின் சிறுகதைகளும், பாடல்களும் சங்கு இதழில் தொடர்ந்து வெளிவந்தன. பூவண்ணன் பல சிறார் சிறுகதைகளை இவ்விதழில் எழுதினார். சிறார் எழுத்தாளர்கள் பலரது படைப்புகள் சங்கு இதழில் வெளியாகின.

நிறுத்தம்

சங்கு இதழ் மூன்று ஆண்டுகள் வெளிவந்தது. 1951-ல் ஏற்பட்ட காகித விலையேற்றத்தாலும், தட்டுப்பாடாலும் நின்றுபோனது.

வரலாற்று இடம்

சிறுவர்களின் வரவேற்பைப் பெற்ற இதழாக சங்கு இருந்தது. தமிழின் முன்னோடிச் சிறார் இதழ்களுள் ஒன்றாக சங்கு அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page