under review

கௌதம சன்னா

From Tamil Wiki
கௌதம சன்னா

கௌதம சன்னா( பிறப்பு: அக்டோபர் 21, 1973) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பண்பாட்டு ஆய்வாளர், களச்செயல்பாட்டாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி. தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கம், சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் ஆகியவற்றின் நிறுவனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கலை, பண்பாடு சார்ந்த ஆய்வுகள் செய்து வருகிறார்.

வாழ்க்கைக்குறிப்பு

கௌதம சன்னா அக்டோபர் 21, 1973 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தந்தை பெயர் ஜான் ஃப்ரான்சிஸ். கௌதம சன்னா பள்ளிக்கல்விக்குப்பின் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பச்சையப்பா கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றார். அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சென்னை ஆசிய ஆய்வுகள் நிறுவனத்தில் (Institute of Asian Studies) கையெழுத்துப்பிரதியியல் சார்ந்து சான்றிதழ் பட்டம் பெற்றார்.

கௌதம சன்னா வழக்கறிஞராக சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றுகிறார். மணமானவர். மனைவி கணினித்துறையில் பணிபுரிகிறார்.

அமைப்புப்பணிகள்

  • தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்.
  • 1996-ல் தொடங்கப்பட்ட அம்பேத்கரிய பயிற்சிப் பள்ளி மற்றும் சமூக மாற்றத்திற்கான அமைப்பின் நிறுவனர்
  • 1999-ல் தொடங்கப்பட்ட அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியர் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்
  • 2005-ல் தொடங்கப்பட்ட இளையோர் பௌத்தர் கழகத்தின்(YBA) நிறுவனர்.
  • 2008-ல் தொடங்கப்பட்ட முற்போக்கு வழக்கறிஞர் பயிற்சிப் பட்டறையின் (Progressive Legal Study Circle) நிறுவனர்.
  • 2019-ல் ஜெர்மனி ஸ்டுட்கார்ட்(Stuttgart) நகரில் உள்ள லின்டன் அருங்காட்சியகத்தில்(Linden museum) திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட்டபோது குழுவில் ஆலோசகராக இருந்தார். ஒரு திருவள்ளுவர் ஐம்பொன் சிலையை நன்கொடையாக வழங்கினார்.
  • நாளந்தா கலைப் பண்பாட்டு இயக்கம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்த்துக் கலைகள் மற்றும் நாட்டார் கலைகளை ஆய்வு செய்து பதிவு செய்யும் அமைப்பின் ஆலோசகர்.
சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்

கௌதம சன்னா 2012-ல் தொடங்கப்பட்ட சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர். எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், அரங்கக் கலைஞர்கள் ஆகியோர் 2012-ம் ஆண்டு தமிழகத்தில் உருவான சமூகப் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டும் சமூக அமைதியை உருவாக்கும் விதமாகவும் ஓவியர் சந்ரு, கௌதம சன்னா, மனுஷ்யபுத்திரன், மனவியல் மருத்துவர் ருத்ரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியது இந்த இயக்கம்.

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கம்

கௌதம சன்னா தமிழகத்தில் மறைந்த பௌத்த மதக் கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்து அதை 'தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கம்' எனும் பெயரில் பதிவு செய்தார். இந்த அமைப்பின் வழி பண்டைய பௌத்த வழிபாட்டு முறைகளைப் பயிற்சியளித்தல், தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பௌத்த விகாரைகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருதல் மற்றும் பௌத்த குருமார்களுக்கான பயிற்சியளித்து தமிழ் பௌத்தத்தை மீட்டெடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டார். நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழக நூலகத்தின் சிறப்புப் பிரிவில் பாதுகாக்கப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் க. சுபாஷிணியுடன் இணைந்து ஆய்வு செய்து அதன் பதிவாக்கத்தில் உதவினார்.

அரசியல் வாழ்க்கை

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர், முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர்.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக 2021-ல் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

உரைகள்

கௌதம சன்னா தமிழகத்தின் பல இடங்களில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுத் தளங்களில் இலக்கியம், வரலாறு, சமூகவியல் மற்றும் சட்டம் தொடர்பான 500-க்கும் மேலான கருத்தரங்குகள் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்துரைகள் நிகழ்த்தினார். மலேசியா, துபாய், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இலக்கியம் வரலாறு தொடர்பாக பல்கலைகழகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் பத்துக்கும் மேற்பட்ட உரைகளை நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் நிகழ்த்தினார்.

ஆய்வு வாழ்க்கை

கௌதம சன்னா தமிழ்ப் பண்பாடு மற்றும் வரலாற்று ஆய்வு நோக்கில் மலேசியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அருங்காட்சியகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் கள ஆய்வு செய்தார். 19, 20-ம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பழைய புத்தகங்கள், துண்டறிக்கைகள், கையேடுகள் மற்றும் சுவடிகளைப் பாதுகாத்து அவற்றை மின்னாக்கம் செய்து நுண்படங்களும்(micro film) உருவாக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

கௌதம சன்னா தமிழகம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதினார். இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, டெக்சஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களால் தமிழக சமூக நீதி வரலாறு தொடர்பாக கௌதம சன்னாவை நேர்காணல்கள் செய்யப்பட்டு அவை அனைத்துலக ஆங்கில ஆய்வேடுகளில் வெளியிடப்பட்டன.

கௌதம சன்னா 2009-ல் நடந்த ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டிக்கும் விதமாக ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் தொகுப்பான 'தமிழ் உயிர்' நூலின் தொகுப்பாசிரியர். இது கரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.

கௌதம சன்னா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகளில் வாழும் முப்பத்தியாறு பழங்குடிகளின் வாழ்விடங்களுக்கு ஓராண்டுக்கு மேலாக பயணம் செய்து அவர்களின் பண்பாடு வாய்மொழி இலக்கியங்கள் வழக்குகள் ஆகியவற்றை பண்பாட்டு மானுடவியல் நோக்கில் பதிவுசெய்து, அவற்றுள் ஏறக்குறைய இருபது பழங்குடியினரின் வாழ்விலக்கியங்களை 'புதிய கோடாங்கி' இதழின் சிறப்பிதழாகக் கொணர்ந்தார். தமிழகத்தில் உள்ள மாற்று பாலினத்தோருக்கு இலக்கியப் பயிற்சி அளித்து அவர்களின் படைப்புகளை முதன்முறையாகத் தொகுத்து அதனை புதிய கோடாங்கி இதழில் சிறப்பிதழாக வெளியிட்டார். கௌதம சன்னா எழுதிய 'குறத்தியாறு' மலேசியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது.

சிறப்புகள்

  • 'குறத்தியாறு' கோவையிலுள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை முதுகலை மாணவர்களுக்கும், சென்னையிலுள்ள ப்ரின்ஸ் தன்னாட்சி பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதுகலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது.
  • குறத்தியாறு' சென்னைப் பல்கலைக்கழகத்திலும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் முதுகலை மற்றும் எம்ஃபில் மாணவர்களின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் ’கௌதம சன்னாவின் படைப்புகள்’ எனும் தலைப்பின் கீழ் முனைவர் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டன.

நூல்கள் பட்டியல்

நாவல்
  • குறத்தியாறு (காப்பிய புதினம், கிழக்கு பதிப்பகம், 2017)
கட்டுரைகள்
  • மதமாற்றத் தடைச்சட்டம் வரலாறும் விளைவகளும் (மருதா பதிப்பகம், 2006)
  • பண்டிதரின் கொடை (கலகம் பதிப்பகம், 2006)
  • க.அயோத்திதாச பண்டிதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதமி வெளியீடு, 2007)
  • கலகத்தின் மறைபொருள் (ஆழி பதிப்பகம், 2018)
  • திருவள்ளுவர் யார்? கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர் (தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம், 2019)
  • Dialogues on Anti Castes Politics. (Interviewed by Prof.Dr.Hugo Gorringe, Ediburg University, Dr.Micheal Collins, Colombia University) (ஆழி பதிப்பகம் 2018)
  • ஆதிதிராவிடர் வரலாறு, தலைவர்கள் ஆவணங்கள் (ஆழி பதிப்பகம், 2018)
  • இட ஒதுக்கீட்டின் மூல வரலாறு, விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதி கொள்கையின் தோற்றம் (ஆழி பதிப்பகம், 2021)
  • அம்பேத்கரின் மனிதர் (எழிலினி பதிப்பகம், 2022)
  • அம்பேத்கரின் மனிதர், எளிய தத்துவார்த்த உரையாடல் (எழிலினி பதிப்பகம். 2022)
தொகுப்பாசிரியர்
  • தமிழ் உயிர் (கரிசல் பதிப்பகம், 2009)
  • அயோத்திதாச பண்டிதர் நூற்றாண்டு நினைவு மலர் (கரிசல் பதிப்பகம், 2014)
  • ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகளும் ஆவணங்களும் தொகுதி-1 (ஆழி பதிப்பகம், 2018)
பதிப்பாசிரியர்
  • ஆண்களின் விடுதலை, அன்னை மீனாம்பாள் உரை தென்னிந்தியாவின் பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடி (கரிசல் பதிப்பக வெளியீடு)
International Research Journal
  • Reading Other Side, Interview with Gowthama Sannah by Prof.Dr.Hugo Gorringe, Published by South Asianist, Edinburg University, United Kingdom. The above same research article was also republished in ESRC, Economic and Social Research Council, Polaris House, North Star Avenue, Sweden.

உசாத்துணை


✅Finalised Page