under review

கோடிவனமுடையாள் ஆலயம்

From Tamil Wiki

To read the article in English: Kodivanamudayal Temple. ‎

கோடிவனமுடையாள் ஆலயம்
யோகினி
யோகினி 2

கோடிவனமுடையாள் ஆலயம் ( பொயு 8-ம் நூற்றாண்டு) தஞ்சாவூர் நகருக்கு வெளியே பழங்காலத்தில் இருந்த கோடிவனம் என்னுமிடத்தில் இருந்த காளிகோயில். இப்போது கருந்திட்டைக்குடிக்கும் வெண்ணாற்றுக்கும் இடையே கோடியம்மன் கோயில் என அழைக்கப்படும் ஆலயமாக உள்ளது.

நான்கு காளிகள்

தஞ்சாவூர் நகரில் காவலுக்காக நான்கு காளிகளை சோழர்காலத்தில் நிறுவியதாகச் சொல்லப்படுகிறது. நான்கு மகாகாளி கோயில்களுக்கு பலி பூஜை செய்வித்த பின்புதான் மேற்குறித்த விழாக்கள் தொடங்குவது வழக்கம்

  1. மேற்கு கோட்டை வாயிலில் திகழும் கோட்டை வாயிற் காளி கோயில்
  2. விஜயாலய சோழன் ஸ்தாபித்த நிசும்பசூதனி எனும் வடபத்ரகாளி கோயில்
  3. ரெளத்திர மகாகாளம் எனும் பெயரில் விளங்கிய கீழ்திசை குயவர் தெருவில் உள்ள மகாகாளி கோயில்
  4. கோடிவனமுடையாள் பெருவழி எனும் நெடுஞ்சாலை அருகில் திகழும் கரந்தை கோடியம்மன் கோயில்

இடம்

தஞ்சை நகரத்தின் புறநகராக விளங்கும் கருந்திட்டைக்குடிக்கும், வெண்ணாற்றுக்கும் இடையில் கோடியம்மன் கோயில் என்ற பெயரில் இக்காளி கோயில் உள்ளது. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுச் சாசனமொன்று இதனைக் கோடிவனம் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு கோயில் கொண்டுள்ள வடவாயிற் செல்வியான மாகாளியை கோடிவனமுடையாள் என்றும், இவ்வனத்தின் வழியே சென்ற பழங்கால நெடுஞ்சாலையை கோடிவனமுடையாள் பெருவழி என்றும் அச்சாசனம் குறிக்கின்றது.

ஆலய அமைப்பு

வடக்கு நோக்கி அமைந்த ஆலயத்தின் கருவறை சாலாகார விமானத்துடன், அர்த்த மண்டபம் மகாமண்டபம் ஆகிய கட்டுமானங்களுடன் இணைந்து காணப்படுகிறது. திருச்சுற்றில் முன்பு அப்பகுதியில் திகழ்ந்து முற்றிலுமாக அழிந்துபோன சிவாலயமொன்றின் தெய்வத் திருமேனிகளான இரண்டு பைரவ மூர்த்தங்கள், இரண்டு அம்பிகையின் திருமேனிகள், துர்காதேவி எனப் பல தெய்வ உருவங்களைத் தற்போது பிரதிட்டை செய்துள்ளனர்.

மூலவர்

கோடி வனமுடையாள் எனப்பெறும் தேவி கருவறையில் எட்டுத் திருக்கரங்களுடன் வீராசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி நல்குகின்றாள். இது சுதையால் அமைந்த சிலை. தீச்சுடர்கள் ஒளிரும் திருமகுடத்தோடு கையில் திரிசூலம், வாள், கேடயம், மணி, கபாலம் பாசம் போன்ற ஆயுதங்களைக் கையில் தரித்தவளாக அமர்ந்த கோலத்தில் கோடியம்மனின் திருமேனி உள்ளது.

யோகினியர்

இந்த ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் கருவறையின் வாயிலின் இருமருங்கும் பல்லவர் காலத்துக்குரிய மிகப் பழமையான இரண்டு அமர்ந்த கோல தேவியின் கற்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு தேவி தன் இடக்காலை மடித்தும், வலக்காலைத் தொங்கவிட்ட நிலையிலும் நான்கு திருக்கரங்களோடு ஜடாபாரம் விரிந்து திகழ்ழ, காதுகளில் பத்ரகுண்டலங்களுடன் காணப்படுகிறாள். வல மேற்கரத்தில் கத்தியும், இட மேற்கரத்தில் கபாலமும் உள்ளன. இட முன்கரத்தை தொடையின் மீது இருத்தியும், வல முன்கரத்தால் அபயம் காட்டியும் திகழ்கின்றாள். மார்பில் பாம்பாலான உரக கச்சையைத் தரித்துள்ளாள். மற்றொரு பாம்பாலான யக்ஞோபவீதம் எனும் மார்பணி காணப் பெறுகின்றது. கையிலும், தோளிலும் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன.

மற்றொரு புறம் உள்ள தேவியின் சிலா வடிவமும் பல்லவர்கால கலை அமைதியுடன் அமைந்துள்ளது. இத்தேவி தாமரை பீடத்தின் மேல் இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளாள். தலையில் சிகை ஜடாபாரமாக விரிந்து திகழ்கின்றது. ஒரு காதில் குழையும், ஒரு காதில் பிரேத குண்டலமும் தரித்துள்ளாள். வலமேற்கரத்தில் திரிசூலமும், இடமேற்கரத்தில் கபாலமும் உள்ளன. இடமுன்கரத்தை தொடையின் மீது அமர்த்தியுள்ள இத்தேவி வலமுன் கரத்தால் அபயம் காட்டுகின்றாள். இவள் அணிந்துள்ள யக்ஞோபவீதம் கபாலங்கள் கோர்க்கப் பெற்றதாகத் திகழ்கின்றது.

இவ்விரண்டு தேவிகளின் திருவடிவங்களை தற்காலத்தில் பச்சைக்காளி பவளக்காளி எனக் குறிப்பிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்த இருதேவிகளும் தேவி வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் யோகினிகள் என முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார். அறுபத்து நாலு யோகினிகளுடன் காளிதேவியின் கோயிலை அமைப்பதும், காலபைரவர் பைரவி ஆகியோருடன் அத்தேவியருக்கு கோயில் அமைப்பதும் உண்டு. இந்தியாவில் யோகினிகளுடன் அமைந்த கோயில்கள் ஒரு சிலவே. தமிழகத்தில் இருந்த ஓரிரு கோயில்களும் அழிந்து அவற்றின் எச்சங்களாக ஒரு சில யோகினிகளின் திருவடிவங்களே நமக்குக் கிடைக்கின்றன.

வரலாற்றுக் குறிப்புகள்

தஞ்சை கருந்திட்டைக் குடியில் உள்ள பராந்தகசோழன் காலத்து கல்வெட்டொன்றில் கோடிவனமுடையாள் திருக்கோயிலை நந்தி மாகாளி கோயில் எனக் குறிப்பிடுவதோடு அக்கோயிலின் இருபது நாள் பூசை உரிமை ஆத்திரையன் சீதரன் என்பானுக்கு வழங்கப் பெற்றதாகவும் கூறுகிறது. நந்தி மகாகாளம் என்ற இந்த கோயிலோடு இணைந்தோ அல்லது அருகிலோ அறுபத்துநான்கு யோகினிகளுக்கான கோயில் அமைந்திருந்து பிற்காலத்தில் முற்றிலுமாக அழிந்துள்ளது. அதில் இடம் பெற்றிருந்த இரண்டு யோகினிகளின் அரிய திருமேனிகளே தற்போது அங்கு இடம் பெற்றுள்ளன என குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார்.

சோழராட்சியின் இறுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தஞ்சையை அழித்தான். அழிந்த தஞ்சைப் பகுதியில் மீண்டும் பாண்டியனின் தளபதி தொண்டைமான் என்பவரால் புதிய குடியிருப்புகளும், நரசிம்மர் கோயிலொன்றும் அமைக்கப்பெற்றன. அப்பகுதிக்கு சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும் பெயரிட்டான். சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பாண்டியனின் கல்வெட்டில் அதற்கென அளிக்கப்பெற்ற நிலங்கள் பற்றி கூறும்போது கோடிவனமுடையாள் எனும் தேவியின் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன (முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம்)

உசாத்துணை


✅Finalised Page