under review

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

From Tamil Wiki

To read the article in English: Kulamutrathu Thunjiya Killivalavan. ‎


குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்க காலப் புலவர், சோழ அரசர். குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை எழுதியவர். இவரின் வீரத்தையும், கொடையையும் இவரின் சமகாலத்துப் புலவர்கள் பாடினர்.

வாழ்க்கைக் குறிப்பு

உறையூர்ச் சோழரில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் ஒருவர். மணிமேகலை கூறும் கிள்ளிவளவன் இவரே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். குளமுற்றம் என்னுமிடத்ததில் இறந்ததால் "குளமுற்றத்துத் துஞ்சிய" என்னும் அடைமொழியுடன் "சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" என்று குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

செய்யுள் இயற்றும் திறம் பெற்றிருந்தார். புறநானூற்றில் 173-வது பாடலைப் பாடினார். இந்தப் பாட்டில் அறச்சாலையில் எழும் ஒலிக்கு பழுமரம் சேர்ந்த பறவைகளின் ஒலியையும், அறச்சாலையிலிருந்து உணவு பெற்று மீளும் பாணார்கள் வரிசையாகச் செல்வதை, மழைவருமென அறிந்து முட்டைகளை மேட்டு நிலத்திற்கு எடுத்துச் செல்லும் எறும்பின் பயணத்தையும் உவமையாகக் கூறினார்.

இவரைப் பாடியவர்கள்
  • ஆலத்தூர் கிழார்
  • ஆடுதுறை மாசாத்தனார்
  • ஆவூர் மூலங்கிழார்
  • இடைக்காடனார்
  • எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
  • ஐயூஎ முடவனார்
  • கோவூர்க் கிழார்
  • நல்லிறையனார்
  • மாறோக்கத்து நப்பசலையார்
  • வெள்ளைக்குடி நாகனார்
புலவர்கள் வழி அறியவரும் செய்திகள்
  • இவரை 'பசும்பூண் வளவன்’ என்று ஆடுதுறை மாசாத்தனார் கூறினார்.
  • கிள்ளி வளவன் வெள்ளம் போன்ற படையுடன் கூடல் நகருக்குச் சென்று பழையன் மாறனைப் போரில் வென்று அவன் குதிரைகளையும் யானைகளையும் கைப்பற்றியபோது சேரன் கோதை மார்பன் உவகை கொண்டதை நக்கீரர் பாடினார்.
  • வானவன் தலைநகர் வஞ்சி மாநகரை கிள்ளிவளவன் வென்றது பற்றி மாறோக்கத்து நப்பசலையார் பாடினார்.
  • மலையமான் மக்களை யானைக் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபோது கோவூர் கிழார் புறாவுக்காகத் தன்னையே கொடுத்த சிபி வழிவந்தவன் என்று புகழ்ந்தும் கொல்ல வரும் யானையைக் கண்டு குழந்தைகள் சிரிப்பதையும் எடுத்துக் கூறி மலையமான் மக்களைக் காப்பாற்றினார்.
  • புலவர் வெள்ளைக்குடி நாகனார் இவனை நேரில் கண்டு பாடி தன் நிலவரியைத் தள்ளுபடி செய்தார்.
  • புலவர் இடைக்காடனார் பரிசில் வேண்டியபோது இவர் பிறர் மண்ணை வென்று பரிசில் வழங்குவது போல் பார்த்தார் என்றார்.
  • வளவன் எப்போது தாக்குவான் என்று தெரியாமல் பகைவர் நாட்டு மக்கள் நடுங்கியது பற்றிப் புலவர் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார்.
  • வளவன் பகைவரை வென்று அவர் தலையில் அணியும் முடிப் பொன்னால் தான் காலில் அணிந்துகொள்ள கழல் செய்து கொண்டார் என்று புலவர் ஆவூர் கிழார் பாடினார்.
  • புலவர் மூலங்கிழார் "உன் பகைநாட்டவரும் உன்னை விரும்புவர்" என்று பாடினார்.
  • புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் ’பிறரை நாடாவண்ணம் தனக்குப் பரிசுகளை வழங்கினான்’ என்றார்.
  • பாணர் சுற்றத்துக்குப் பாற்சோறும் பரிசில் பொருள்களும் வளவன் வழங்கியது பற்றி ஆலத்தூர் கிழார் பாடினார்.
  • மழைத்துளி விழுவது போல் பொறியும்படி நெய்யில் வறுத்துத் தனக்கு வளவன் உணவளித்ததாகப் புலவர் கோவூர் கிழார் பாடினார்.
  • ’தேர்வண் கிள்ளி’ என்று வளவன் போற்றப்படுவதாக புலவர் பொத்தியார் பாடினார்.
  • சிறந்த வள்ளல் என்பதைப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பால் பாடினார். இவரது உயிரை எமன் கொண்டு சென்றிருக்க முடியாது. காரணம் இவன் பெருவீரன். இவனிடம் இவனது உயிரைத் தானமாகக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

பாடல் நடை

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,

உசாத்துணை


✅Finalised Page