under review

குற்றம் பொறுத்த நாதர் கோயில்

From Tamil Wiki
குற்றம் பொறுத்த நாதர் கோயில் (நன்றி: தரிசனம்)
குற்றம் பொறுத்த நாதர் கோயில்

குற்றம் பொறுத்த நாதர் கோயில் தலைஞாயிறில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயில் தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ளது.

இடம்

வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் தலைஞாயிறு (திருகருப்பரியலூர்) அமைந்துள்ளது. பிரதான சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர்.

பெயர்க்காரணம்

குற்றம் பொறுத்த நாதர் கோயிலின் வரலாற்றுப் பெயர்கள் யுதிகவனம், திருகருப்பரியலூர், மேலைக்கழி, கண்மனசபுரம், ஆதித்யபுரி, தலைஞாயிறு, கொக்குடிக்கோயில், கல்லாறு கோட்டை. சூரியன் சிவனை வழிபட்ட முதல் தலம் இது. எனவே இந்த இடம் 'தலை ஞாயிறு' என்றழைக்கப்பட்டது. இது ஆதித்யபுரி என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் கொக்குடி முல்லை என்பதால் இத்தலம் கொக்குடிக்கோயில் என்றும் அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இருவரும் தங்கள் பாடல்களில் இந்த கோவிலை 'கொக்குடிக்கோயில்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

கல்வெட்டு

சோழ மன்னர்கள் மூன்றாம் குலோத்துங்கன், கோனேரிகொண்டான், திருபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜன், விஜயநகர மன்னர் பிரதாபகிருஷ்ண தேவராயர் ஆகியோரின் காலத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு கல்வெட்டுகள் உள்ளன.

குற்றம் பொறுத்த நாதர் கோயில்

தொன்மம்

இந்திரன்

இந்திரன் கைலாச மலைக்குச் சென்றபோது அங்கு சிவபெருமான் பூதகணமாக தோன்றினார். அது சிவபெருமான் என்பதை அறியாமல் இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அவரைத் தாக்கினான். பிறகு தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர இக்கோயிலுக்கு வந்தான். சிவபெருமான் அவரை மன்னித்தார். இக்கோயிலின் இறைவன் ஸ்ரீஅபாரதக்ஷமேஸ்வரர் அழைக்கப்பட்டார். இந்த இடம் 'கர்மநாசபுரம்' என்று பெயர் பெற்றது.

அனுமன்

ராவணனுடனான போருக்குப் பிறகு ராமர் ராமேஸ்வரம் திரும்பியதாக நம்பப்படுகிறது. அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து நிவாரணம் பெற ராமர் சிவனை வழிபட விரும்பினார். அயோத்திக்குச் சென்று வழிபடுவதற்காக தனது சிவன் சிலையைக் கொண்டு வர அனுமனிடம் சொன்னார். அனுமன் லிங்கத்தைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அகஸ்தியர் முனிவர் சீதையை மணலால் லிங்கம் ஒன்றைத் தயாரிக்கச் சொன்னார். அதை வழிபட்டு, ராமர் தனது பிரார்த்தனைகளை நிறைவேற்றும்படி கூறினார். அனுமன் தன் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டார். அவர் கொண்டு வந்த லிங்கம் ராமேசுவரத்தில் வேறொரு இடத்தில் ராமரால் நிறுவப்பட்டது. சீதையால் படைக்கப்பட்டு ராமர் பூசை செய்த மணல் லிங்கத்தை எடுத்துச் செல்ல விரும்பி அனுமன் அதைத் தனது வாலால் பிடுங்க முயன்றார். ஆனால் லிங்கத்தை நகர்த்த முடியவில்லை. இதில் வால் வெட்டப்பட்டு வலிமையை அனுமன் இழந்தார். சிவலிங்கத்தை அதன் இடத்தில் இருந்து அகற்றுவதன் மூலம் அவர் செய்ய முயன்ற பாவத்தைப் பின்னர் உணர்ந்தார். சிவன் கோயில்களுக்குச் சென்று பாவத்தைக் கழுவ ராமன் அனுமனுக்கு அறிவுறுத்தினார். அனுமன் வழிபட்ட சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

மேகநாதன்

ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை எதிர்த்து போரில் வென்றதால் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டார். இந்திரஜித் தனது புஷ்பக விமானத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது அவரது தேர் தடைப்பட்டு வானில் நின்றது. சிவன் கோவிலின் மேல் பறந்து கொண்டிருந்ததால் தான் அவரின் தேர் நகரவில்லை என்றறிந்து இந்திரஜித் புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு இங்குள்ள இறைவனை வணங்கினார். இக்கோயிலின் லிங்கத்தை இலங்கைக்கு மாற்ற முயன்றார். அதை நகர்த்த முடியாமல் மயங்கி விழுந்தார். ராவணன் தன் மகனுக்கு பாவ விமோசனம் வழங்க இறைவனிடம் வேண்டினார். சிவபெருமான் இந்திரஜித்தை மன்னித்து தனது பயணத்தைத் தொடர அனுமதித்தார். எனவே இத்தலத்தின் இறைவன் 'குற்றம் பொறுந்த நாதர்' என்று அழைக்கப்பட்டார்.

விச்சித்திரங்கன்

ஸ்தல புராணத்தின்படி, மன்னர் விச்சித்திரங்கன் (சிந்து நாட்டைச் சேர்ந்தவர்) தனது மனைவி சுசீலையுடன் பல சிவாலயங்களுக்குச் சென்று குழந்தை வரம் வேண்டி இறைவனை வழிபட்டார். இந்தக் கோவிலில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும், அதற்கு நன்றி செலுத்தும் வகையில் மன்னர் இந்த கோவிலை கட்டியதாகவும் நம்பப்படுகிறது.

வசிஷ்டர்

பிரம்மாவின் ஆலோசனையின் பேரில் வசிஷ்டர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. வசிஷ்டர் இங்கு லிங்கத்தை நிறுவி வழிபட்டதாக ஐதீகம். ஆங்கிரசர், கௌதமர், வாமதேவர் மற்றும் கபாலி உட்பட எழுபத்தியிரண்டு மகரிஷிகள் இங்குள்ள இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததாகவும் நம்பிக்கை உள்ளது.

குற்றம் பொறுத்த நாதர் கோயில்

கோயில் பற்றி

  • மூலவர்: குற்றம் பொருந்த நாதர், அபாரத க்ஷமேஸ்வரர்
  • அம்பாள்: கோல்வளை நாயகி, விசித்ர பாலாம்பிகை
  • தீர்த்தம்: இந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: கொக்குடி முல்லை (மல்லிகை)
  • பதிகம்: திருஞானசம்பந்தர், சுந்தரர்
  • இருநூற்று எழுபத்தியாறாவது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
  • இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • கடைசியாக கும்பாபிஷேகம் மார்ச் 22, 1953 அன்று நடந்தது.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோயிலில் இரண்டு நடைபாதைகள் உள்ளன. இதன் பிரதான ராஜகோபுரம மூன்று அடுக்குகள் கொண்டது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகளைத் தவிர, சித்தி விநாயகர், முருகன், அவரது துணைவியருடன் மகாலட்சுமி, மூவர் மற்றும் உமா மாமகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகள் மாடவீதிகளில் உள்ளன. சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலைப் போலவே இந்தக் கோயிலுக்குள் இரண்டு தளங்களைக் கொண்ட மலைக்கோயில் உள்ளது. கீழ் தளத்தில் மூலவர் உள்ளார். உமா மகேஸ்வரர் (தோணியப்பர்), சட்டைநாதர் இருவரையும் முறையே முதல், இரண்டாவது தளங்களில் தரிசனம் செய்யலாம். இங்குள்ள தோணியப்பர், அம்மன் இருவரையும் கர்ப்பஞானேஸ்வரர், கர்ப்பஞானபரமேஸ்வரி என்று அழைப்பர். இக்கோயில் சீர்காழியின் மேற்குப் பகுதியில் உள்ளதால் இத்தலம் மேலகாழி என்றும் அழைக்கப்படும். இக்கோயிலின் முன் மண்டபம் வவ்வால் நெற்றிப் பொட்டு போன்று வடிவமைக்கப்பட்டது. விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், ஹனுமான் தீர்த்தம், நிம்பபுஷ்கரணி, சங்கபுஷ்கரணி, பொற்றாமரை மற்றும் செங்கழுநீர் தடாகம் ஆகிய எட்டு புனித நீர் தீர்த்தங்கள் இக்கோயிலுடன் தொடர்புடையவை.

குற்றம் பொறுத்த நாதர் கோயில்

சிற்பங்கள்

கோஷ்டத்தைச் சுற்றியுள்ள இடத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கையின் சிலைகளைக் காணலாம். சண்டிகேஸ்வரர் தனது மனைவி யாமினியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். ஸ்தல விருட்சமான முல்லை செடியின் கீழ் சிவலிங்கத்துடன் விநாயகர் சிலை உள்ளது.

சிறப்புகள்

  • இங்குள்ள இறைவனை வழிபடுவது பக்தர்களுக்கு முக்தி கிடைப்பதோடு, மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட உதவும் என்பது நம்பிக்கை. எனவே இந்த இடம் 'கரு பரியலூர்' என்றும் அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் தனது திருப்பாடலின் முதல் பாடலில் இங்குள்ள இறைவனை வழிபடுபவர்களின் இந்த 'கருபரியாலை' பற்றியும் குறிப்பிட்டார்.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 8-12 வரை
  • மாலை 5-8வரை

வழிபாடு

  • இக்கோயிலில் செய்யும் எந்த ஒரு நல்ல காரியமும் பத்து மடங்கு பெருகும் என்று வசிஷ்ட முனிவருக்கு பிரம்மதேவன் தெரிவித்ததாக நம்பிக்கை உள்ளது.
  • இக்கோயிலில் வசிஷ்டர் முனிவர், எழுபத்தியிரண்டு மகரிஷிகள் சிவபெருமானால் ஞான வரம் பெற்றனர். எனவே கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.
  • தட்சிணாமூர்த்தி கல்வியின் கடவுளாக வணங்கப்படுகிறார். திருஞானசம்பந்தர் தம் திருப்பாடலில் கற்றறிந்த பெருமான் இக்கோயிலில் வீற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டிக்கொள்ளலாம் என்பது நம்பிக்கை.

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி.
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • மாசியில் சிவராத்திரி
  • பங்குனியில் பங்குனி உத்திரம்
  • மாதமிருமுறை பிரதோஷம்

உசாத்துணை


✅Finalised Page