குமரித்துறைவி
To read the article in English: Kumarithuraivi.
குமரித்துறைவி (2021) ஜெயமோகன் எழுதிய நாவல். மதுரை மீனாட்சியம்மன், போர்க்காலத்தில் கன்யாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சிலகாலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்படும் செவிவழிச் செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது. மதுரை மீனாட்சிக்கும் சொக்கநாத நாயக்கருக்கும் திருமணம் நிகழும் சித்திரத்தை எழுதிக்காட்டுகிறது
எழுத்து, வெளியீடு
ஏப்ரல் 22, 2021-ல் இந்நாவல் முதன்முதலாக ஜெயமோகனின் இணையதளத்தில் ஆறுபகுதிகளும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. பின்னர் விஷ்ணுபுரம் பதிப்பகம் 2021 ஜூலையில் மின்நூல் வடிவில் வெளியிட்டது. 2021 அக்டோபரில் அச்சுநூல் வெளியாகியது.
வரலாற்றுப் பின்னணி
1311-ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்னும் வரலாற்றுச் செய்தி ஒன்று உண்டு. ஸ்ரீரங்கம் பெருமாள் திருவல்லா ஸ்ரீவல்லபநாதர் ஆலயத்தில் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் என்று ஊகிக்கப்படுகிறது.
ஆனால் 1738-ல் ஆட்சிக்கு வந்த மார்த்தாண்டவர்மா குலசேகரப் பெருமாளுக்கு பின்னர்தான் திருவிதாங்கூர் அரசின் வரலாறு முறைப்படி எழுதப்படுகிறது. அதற்கு முன் அது வேணாடு என அழைக்கப்பட்டது, அக்காலகட்டத்தின் வரலாறு இன்றும் மிகமிகக் குறைவான செய்திகளைக்கொண்டு சுருக்கமாகவே எழுதப்படுகிறது. ஓரிரு அரசர்களைப் பற்றிய செய்திகளே கிடைக்கின்றன. ஆகவே இக்கால வரலாற்றுச் சித்திரத்தை ஆதாரபூர்வமாக உருவாக்கிக் கொள்வது இன்னமும் இயல்வதாக இல்லை. இந்நாவல் 1368-ல் திருவிதாங்கூர் அரசர் ஆதித்ய வரகுணன் சர்வாங்கநாதன் ஆட்சிக்காலத்தில் நிகழ்கிறது. இவர் ஆதிகேசவப்பெருமாளைப் பற்றிய கேசவபதாம்புஜம் என்னும் நூறு பாடல்களை இயற்றியவர். . ’சொல்விளங்கும் பெருமாள்’ என்றும் ’படைதிகழ்ந்த பெருமாள்’ என்றும் புலவர்களால் பாடப்பட்டவர். மிகக்குறைவான செய்திகள் வழியாக அறியப்படுபவர்.
கதைச்சுருக்கம்
மதுரை மீனாட்சியம்மனை மாலிக் காபூரின் படைகளிடமிருந்து காப்பாற்ற சிவாச்சாரியார்கள் வேணாடுக்கு கொண்டு வந்து அங்கே பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் ஒளித்துவைக்கிறார்கள். மதுரையை குமார கம்பணன் கைப்பற்றிய பின் மதுரை நாயக்கரின் தூதர்கள் வேணாட்டுக்கு வந்து மீனாட்சியை மதுரைக்கு திரும்ப அளிக்கும்படி கோருகிறார்கள். தெய்வத்தை திரும்ப அனுப்புவது இழுக்கு என நினைக்கும் மகாராஜா என்ன செய்வதென அறியாமல் குழம்பும்போது சிறமடம் தந்த்ரி என்னும் பெரியவர் ’பெண் வீட்டைவிட்டுச் செல்வது ஒரே ஒரு நிலையில் மட்டுமே மங்கலமானது. மணம்புரிந்து செல்லலாம். மீனாட்சியை மகாராஜா தன் மகளாக எண்ணி சொக்கநாதருக்கு மணம்புரிந்து அளித்து அனுப்பிவைக்கலாம்’ என ஆலோசனை சொல்கிறார். அந்த திருமண நிகழ்வை விவரிக்கும் நாவல் இது.
இலக்கிய இடம்
குமரித்துறைவி எதிர்மறைக் கூறுகளே இல்லாத, முழுக்க முழுக்க மங்கலம் மட்டுமே கொண்ட நாவல் என்று மதிப்பிடப்படுகிறது நேர்நிலையான உணர்ச்சிகள் தொடர்ந்து வெளிப்படும் ஒரு படைப்பு. ஒரு திருமணநிகழ்வின் வர்ணனை, ஒரு திருவிழாவின் விவரிப்பு என்று ஒரு தளத்தில் வாசித்தாலும் மொத்தத் தமிழ்ப்பண்பாடும் ஒரு புள்ளியில் ஒருங்குகுவிவதன் சித்திரமாகவும் அமைகிறது. மங்கலப்படைப்பு என்பதனால் திருமணங்களில் பரிசாக அளிக்கப்படுவதாகவும் உள்ளது
உசாத்துணை
- குமரித்துறைவி முன்னுரை | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- குமரித்துறைவி [குறுநாவல் – 1 | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
- குமரித்துறைவி- ஒரு சொல் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- குமரித்துறைவி : சிறு குறிப்பு (theeraaperuveli.blogspot.com)
- பார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை (silarojakkal.wordpress.com)
- குமரித்துறைவி - வாசிப்பனுபவம் (gdivakar.blogspot.com)
✅Finalised Page