under review

கி.பார்த்திப ராஜா

From Tamil Wiki
ராஜா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜா (பெயர் பட்டியல்)
பார்த்திபன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பார்த்திபன் (பெயர் பட்டியல்)

To read the article in English: Ki. Parthiba Raja. ‎

கி.பார்த்திபராஜா

கி.பார்த்திப ராஜா நாடகக் கலைஞர், தமிழிலக்கிய ஆய்வாளர், கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பெருவாக்கோட்டையில் சி.கிருஷ்ணன் - கி.லட்சுமி அம்மாள் இணையருக்கு பிறந்தார். பெருவாக்கோட்டை, மங்கலக்குடி, ஓரியூர் ஆகிய இடங்களில் தொடக்கப் பள்ளிக்கல்வியை முடித்து, காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை வகுப்பையும் மு.வி.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பையும் படித்தார்.காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.சென்னை பல்கலையில் முனைவர் பொற்கோ, முனைவர் வீ.அரசு ஆகியோரின் மாணவர். 'இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கி.பார்த்திபராஜா திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ் மற்றும் முதுகலை ஆய்வுத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்

இலக்கியவாழ்க்கை

1999-ம் ஆண்டில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகைதரு பேராசிரியராக வந்தபோது அவருடைய உதவியாளராகப் பணியாற்றினார். சி.சுப்ரமணிய பாரதியார் பற்றி ஞான ராஜசேகரன் எடுத்த பாரதி என்னும் படம் வெளிவந்தபோது பாரதியார் பற்றி எதிர்மறையாக வந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும்பொருட்டு 2001-ல் தன் முதல் நூலை எழுதினார். கி.பார்த்திபராஜா அவ்வப்போது இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை 'சுழல்' என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். வீ.அரசுவும் இவரும் இணைந்து 'வாய்மொழி வரலாறு', 'நாட்டார் சாமிகள்' என்னும் இரு தொகுப்பு நூல்களைக் கொண்டு வந்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த ஒயிலாட்டத்தை முழுவதுமாகப் பதிவு செய்து, 'இராமாயண ஒயில் நாடகம்' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார் கி.பார்த்திபராஜா.

நாடகப் பங்களிப்பு

பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே நவீன நாடக இயக்கங்களோடு தொடர்புடையவராக இயங்கத்தொடங்கிய கி.பார்த்திபராஜா தான் பணியாற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 'மாற்று நாடக இயக்கம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்து வருகிறார். 'நெடும்பயணம்', 'புதிய ஒளி' ஆகிய இரண்டும் இவரது நாடகத் தொகுப்புகள். இதில் நெடும்பயணம் என்னும் நாடகம் தேசிய நாடகப்பள்ளி நடத்திய நாடக எழுத்தாக்கப் பயிற்சிப்பட்டறையில் உருவாக்கப்பட்டது.

நூல்கள்

  • பாரதி - கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு, ராகாஸ், சென்னை, 2001
  • சுழல் - சிறுகதைகள், ராகாஸ், சென்னை, 2002
  • வாய்மொழி வரலாறு (இணைப் பதிப்பாசிரியர்), தன்னனானனே, பெங்களூரு, 2002
  • நாட்டார் சாமிகள் (இணைப் பதிப்பாசிரியர்), காவ்யா, சென்னை, 2002
  • இராமாயண ஒயில் நாடகம் - ஆய்வு, ராகாஸ் சென்னை. 2003
  • பிரதியிலிருந்து மேடைக்கு... - நாடக ஆய்வு, தோழமை, சென்னை, 2005
  • காயாத கானகத்தே... - நாடக ஆய்வு, போதிவனம், சென்னை, 2006
  • இலக்கம் 4 பிச்சிப்பிள்ளை தெருவிலிருந்து - நேர்காணல், மதுரை, 2007
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு வரலாறு - ஆய்வு, அரிதாரி, திருப்பத்தூர், 2009
  • தமிழ் மொழி அரசியல் - நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீ - ஆய்வு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012
  • நெடும்பயணம் - ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, டிசம்பர் 29, 2013
  • திறக்கப்பட்ட புதிய வாசல்கள் - போதிவனம் பதிப்பகம், சென்னை, 2013
  • புதிய ஒளி - நாடகங்கள், ஜீவா பதிப்பகம், சென்னை
  • படித்தேன் - கட்டுரைகள், ஜீவா பதிப்பகம், சென்னை
  • இப்படிக்குத் தங்கள் அன்புள்ள... - கடிதங்கள், பாரதி புத்தகாலயம், சென்னை
  • மரபிலக்கியங்கள் ஓர் மறுவாசிப்பு - ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை
  • சங்ககாலச் சமூகவியல் - ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை
  • சமூக இலக்கியப் பயணம் - ஆய்வுக்கட்டுரைகள், போதிவனம், சென்னை
  • திருக்குறள் எளிய உரை - பாரதி பதிப்பகம், வேலூர்
  • ஆய்வு மலர்கள் - கட்டுரைகள், பரிதி பதிப்பகம், சோலையார்பேட்டை
  • அறிஞர் அண்ணா - வரலாறு, பாரதி பதிப்பகம், வேலூர்
  • பண்பாட்டுத் தளத்தில் திருமணம் - பாரதி புத்தகாலயம், சென்னை
  • தமிழ்க் கலைமணிகள் - கட்டுரைகள், பாரதி புத்தகாலயம், சென்னை

உசாத்துணை

[[]]



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:12 IST