under review

கல் முறைப்பழிச்சல்

From Tamil Wiki

கல் முறைப்பழிச்சல் (கன்முறைப் பழிச்சல்) பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. இறந்த வீரனுக்காக நடப்பட்ட நடுகல்லைப் புகழ்தலைக் குறிக்கிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

நிழல் அவிர் எழில் மணிப்பூண்
கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று(கொளு 10.13)

வெண்பா

அடும் புகழ்பாடி அழுது அழுது நோனாது
இடும்பையுள் வைகிற்றிருந்த - கடும்பொடு
கைவண் குரிசில் கல் கைதொழூஉச் செல் பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு (252)

பொருள்: பாணனை விளித்துக் கல்லை வணங்குமாறு கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது. பாணனே! கை வளப்பத்தினையுடைய நம் தலைவன், இப்பொழுது எட்டுத் திசைக்கும் ஒரு தெய்வமாகக், கல்மேல் நின்றான்; அதனால், அவனை இழந்தது பொறாமல் துன்பப்படும் சுற்றத்தோடு, அழுதழுது வருந்துதலின்றி, அவன் பகைவரை வெல்கின்ற கீர்த்தியைப் பாடினாய், அக் கல்லினைக் கைதொழுது மேற்செல்வாயாக.

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:59:33 IST