கல் நடுதல்
கல் நடுதல் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. தேர்ந்தெடுத்த நடுகல்லில் வீரனின் பெயரைப் பொறித்து, நடுவதைக் குறிக்கும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி, அக்கல்லை நடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அவன் பெயர்கல் மிசைப் பொறித்துக்
கவின் பெறக் கல் நாட்டின்று (கொளு 10.12)
வெண்பா
மாலை துயல மணிஎறிந்து மட்டு உகுத்துப்
பீலி அணிந்து பெயர் பொறிந்து - வேல்அமர்உள்
ஆண்டகை நின்ற அமர் வெய்யோற்கு ஆக
காண்தக நாட்டினார் கல் (251)
பொருள்: போரில் ஆண்மையும் வீரமும் மிக நின்று போரினை விரும்பியோனுக்கு, இஃது உருவமாக' என்று சொல்லி, அவனுக்காகக் கொணர்ந்த கல்லினை, மாலை அசையவும், மணியொலி எழவும், கள்ளினைத் தெளித்தும், மயிற்பீலியைச் சூட்டியும், அவன் பெயரினைப் பொறித்தும், காட்சிபொருந்த நாட்டினார்கள்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:58:45 IST