under review

கந்தப் பிள்ளை

From Tamil Wiki

To read the article in English: Kanthapillai. ‎


கந்தப் பிள்ளை (ப. கந்தப்பிள்ளை) (1766 - ஜூன் 2, 1842) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஆறுமுக நாவலரின் தந்தை. புலவர், நாடக ஆசிரியர், அரசு அலுவலர்.

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாணம், நல்லூரில் 1842-ல் பரமானந்தருக்கும் உலகாத்தையார் அம்மையாருக்கும் பிறந்தார். பரமானந்தர் பாண்டி மல்லன் வழிவந்த இலங்கை காவல முதலியாரின் மகன். கந்தப்பிள்ளை புகழ்பெற்ற தமிழறிஞரும் சைவ அறிஞருமான ஆறுமுக நாவலரின் தந்தை. இவர்கள் இலங்கையில் முதல் தலைமுறையில் குடிபெயர்ந்தவர்கள்.

இளமையில் சண்முகச் சட்டாம்பியாரிடம் கல்வி கற்றார். கூழங்கைத் தம்பிரானிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தந்தையிடம் மருத்துவக்கலையையும் கற்றார்.

தனி வாழ்க்கை

பதினெட்டு ஆண்டுகள் ஆங்கியே-இலங்கை அரசாங்கத்தில் அமைதியை நிலை நாட்டுதல், வரி வசூல் செய்தல், நீதித்துறை செயல்பாடு ஆகியவற்றுக்கு உதவும் ”ஆராச்சி” என்ற பதவியில் பணியாற்றினார். இதனால் ஆராச்சிக் கந்தர் எனவும் அழைக்கப்பட்டார்.

வேதவானத்தின் மகளான சிவகாமியை மணந்தார். இவர்களுக்கு ஆறு மகன்களும், ஆறு மகள்களும் பிறந்தனர். தியாகர், சின்னத்தம்பி(உடையார்), பூதந்ததம்பி, பரமானந்தர்(தமிழறிஞர்), தம்பு, ஆறுமுக நாவலர் ஆகியோர் மகன்கள்.பதினெட்டு ஆண்டுகளாக அரசாங்கத்தில் விசாரணைக் கந்தராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆங்கிலம், போர்ச்சுகீசியம், டச்சு (ஒல்லாந்தம்) ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். போர்ச்சுகீசியம் பாதரியார் பிலிப் டெல்லோவிடம் பயின்றார். இருபது நாடகங்கள் இயற்றினார். "இரத்தினவள்ளி விலாசம்" என்ற எழுதத் தொடங்கி முடிக்கப் பெறாத நூலை மகன் ஆறுமுக நாவலர் பாடி முடித்தார். இரத்தினவள்ளி விலாசம், இராம விலாசம், ஏரோது நாடகம், கண்டி நாடகம், சந்திரகாச நாடகம் போன்ற நாடகங்களை எழுதினார்.

மறைவு

கந்தப் பிள்ளை ஜூன் 2, 1842-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

குறவஞ்சி
  • நல்லைநகர்க் குறவஞ்சி
நாடகம்
  • இரத்தினவள்ளி விலாசம்
  • இராம விலாசம்
  • ஏரோது நாடகம்
  • கண்டி நாடகம்
  • சந்திரகாச நாடகம்

உசாத்துணை


✅Finalised Page