ஓரேருழவர்
ஓரேருழவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். புறநானூற்றில் உள்ள ஒரு பாடலும், குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலும் இவர் இயற்றியவை.
பெயர்காரணம்
ஓரேருழவர் என்பது இவரது இயற்பெயர் அல்ல. இவர் இயற்றிய குறுந்தொகைப் பாட்டில் உள்ள உவமையே இவருக்கு புனைப்பெயராக அமைந்தது. இவரது இயற்பெயர் தெரியவில்லை.
குறுந்தொகை பாடல் உவமை
பொருள் தேடி தலைவியை பிரிந்த தலைவன் தன் வேலை முடிந்து முல்லை நிலம் வழியாகத் திரும்பி வருகிறான். அவன் வருகையைச் சுட்டும் இடத்தில் பெய்த மழையின் ஈரம் காய்வதற்குள் வயலை உழ வேகமாகப் பணியைச் செய்யும் ஒரே ஒரு ஏர் (மாடு) கொண்ட உழவன் விரைந்து செல்வது போல் தலைவியைக் காண தலைவனின் உள்ளமும் விரைந்தது என்கிறார். ("ஓரேர் உழவன் போல பெருவிதுப் பற்றன்றால் நோகோ யானே")
பாடல்கள்
புறநானூறு (193)
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.
பாடல்:
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே!
குறுந்தொகை (131)
திணை: பாலைத் திணை கூற்று: வினைமுற்றிய தலைமகன் பருவவரவின்கட் சொல்லியது. பாடல்:
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்
தோரே ருழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே.
✅Finalised Page