under review

ஓராங் கானாக்

From Tamil Wiki
நன்றி: orgasli.weebly.com

ஓராங் கானாக் ( Orang Kanaq ) மலேசிய பழங்குடியினர். தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பெயர் விளக்கம்

ஓராங் கானாக் பழங்குடியினரைக் ‘செகானாக்’ என்றும் அழைப்பர். செகனாக் எனும் பெயர் காலப்போக்கில் கானாக்காக மறுவியது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை இவர்களுக்கு ‘ஓராங் கானாக்’ எனப் பெயர் சூட்டியது. ஓராங் கானாக் பழங்குடியினர் தங்களை ‘ராயாட்’ (Rayat) என்றழைப்பர். ரக்யாட் (Rakyat) என்றால் மலாய் மொழியில் மக்கள். ஓராங் கானாக் பழங்குடி தங்களை ஜொகூர்-ரியாவ் தீவுக்கூட்டத்தின் மக்களென அடையாளப்படுத்த ராயாட்டென அழைத்துக்கொள்வர்.

வாழிடம்

கானாக் பழங்குடி சுங்காய் செலாங்கி பழங்குடி கிராமம், கோத்தா திங்கி வட்டாரம், ஜொகூர் மாநிலத்தில் வசிக்கின்றனர்.

பின்னணி

ஜொகூர்-ரியாவ் அரசாட்சி, நன்றி: wzwh.blogspot.com

ஓராங் கானாக் பழங்குடியினரின் மூதாதையர்கள் ரியாவ் தீவுக்கூட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ரியாவ் தீவுக்கூட்டம் ஜொகூர்-ரியாவ் அரசாட்சியில் அடங்கும். ரியாவ் தீவுக்கூட்டம், சுமத்ரா (இன்றைய மேற்கு இந்தோநேசியா) தீவீன் கிழக்கில் அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து ஓராங் கானாக் பழங்குடியினர் லிங்கா தீவிலிருந்து சிங்கேப் தீவு வரை இருக்கும் கடலை வசிப்பிடமாகக் கொண்டனர். ஓராங் கானாக் கடல்வாசிகளாக இருப்பினும் தரையில் வசித்துள்ளனர். அதில், சிங்கேப் தீவு, லிங்கா தீவு, தெலுக் செகானா அடங்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓராங் கானாக் பழங்குடியினர் ஜொகூர்-ரியாவ் தளபதியின் கட்டளைக்கிணங்க கடற்கொள்ளையர்களாகப் அரசாங்கத்திற்குப் பங்காற்றியுள்ளனர். இந்தப் பங்களிப்பு டச்சு வணிகத்தைப் பெரிதும் பாதித்தது. 1842-ல் டச்சு வீரர்கள் ஓராங் கானாக் பழங்குடியினர் தங்கியிருந்த தெலுக் செகானா கிராமத்தை இல்லாமலாக்கினர். இதனால், லிங்கா தீவின் சுல்தான் ஓராங் கானாக் பழங்குடியிடம் கடற்கொள்ளைகளை நிறுத்த உத்தரவிட்டார். சுல்தானின் கட்டளைகிணங்கி ஓராங் கானாக் பழங்குடியினர் கப்பல்களை எரித்தனர். இதன் பிறகு, ஓராங் கானாக் பழங்குடியினர் பூர்விக இடத்தையும் தொழிலையும் விட்டு நாடோடிகளாகத் திரிந்தனர். ஓராங் கானாக் பழங்குடியினர் இறுதியாக பிந்தான் தீவில் குடியேறினர். பிந்தான் தீவுகளில் சீனர்களின் பாக்கு தோட்டத்தில் வேலை செய்தனர்.

பிந்தான் தீவிலிருந்து ஓராங் கானாக்கை அன்றைய ஜொகூர் சுல்தானாகிய அபு பாக்கார் சுல்தான் (1886-1895) தீபகற்ப மலேசியாவிற்கு அழைத்து வந்தார். 1870-களில் பிந்தான் தீவிலிருந்து மொத்த ஓராங் கானாக் பழங்குடியினரும் தீபகற்ப மலேசியாவிற்குள் இடம்பெயர்ந்தனர். ஓராங் கானாக் பழங்குடியினர் ஜொகூரின் கோத்தா திங்கி மாவட்டத்தில் சுங்காய் செடிலியில் தங்கினர். ஓராங் கானாக் பழங்குடியினர் சுங்காய் செடிலியில் சீனர்களின் கிராம்பு, மிளகு தோட்டத்தில் கூலி வேலை செய்தனர். பிறகு, பந்தி மலையடிவாரத்தில் (Gunung Panti) லெபாக் மின்சினில் (Lebak Mincin) தங்கினர். இன்றளவும் ஓராங் கானாக்கின் மூதாதையர்களின் நட்ட பழதோட்டங்கள் தடயமாக உள்ளன. ஓராங் கானாக் பழங்குடி மூதாதையர்கள் சுங்காய் செடிலியில் உருவாக்கிய பழத்தோட்டங்கள் இன்று மலேசியாவின் பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலாயாவின் முதலாம் அவசரகாலத்தில் (1948-1960) ஓராங் கானாக் பழங்குடி கம்யூனிஸ்வாதிகளுக்கு உதவாமளிருக்க லெபாக் மின்சினிலிருந்து சிலாங்கூர், கோம்பாக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கோம்பாக்கில் ஓராங் கானாக்குடன் தெமுவான், செனோய் பழங்குடியினரும் ஐந்து வருடங்கள் வாழ்ந்தனர். மலாயாவில் கம்யூனிஸ்டின் செல்வாக்கு அதிகரித்தது. 1959-ல் ஓராங் கானாக் பழங்குடியினர் செமங்கார் கிராமத்துக்கு ஜகூன் பழங்குடியினருடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஓராங் கானாக் மலேசிய பழங்குடி துறைக்கு மீண்டும் இடமாற்றம் செய்ய சிறப்பு கோரிக்கை விடுத்தது. இதை தொடந்து ஓராங் கானாக் பாத்து 9, ஜாலான் மாவாய்க்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 1964-ல் மலேசிய அரசாங்கம் ஓராங் கானாக்கிற்கான தனி நிலமாக சுங்காய் செலாங்கி தோட்டத்தை அறிவித்தது.

உம்பூட்
பெதாய், அறிவியல் பெயர்: Parkia speciosa

தொழில்

ஓராங் கானாக் பழங்குடியினர் கடற்கொள்ளையர்களாக இருந்தனர். இன்று ஓராங் கானாக் பழங்குடியினர் பெதாய், உம்பூட், நிபோங் பனை மரம் , மூங்கில், வாழை, வேர்கிழங்கு வகை, அன்னாசி போன்றவற்றை விவசாயம் செய்கின்றனர். ஓராங் கானாக் பழங்குடியினர் மாவாய் மூங்கிலால் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர்.

மொழி

ஓராங் கானாக் பழங்குடியினரின் மொழியைக் கானாக் மொழியென அழைப்பர். கானாக் மொழி ஆஸ்த்ரோநேசிய குடும்பத்தைச் சார்ந்ததாகும். ஓராங் கானாக் பழங்குடியினர் மலாய் மொழியிலும் பேசுவர்.

நம்பிக்கை

ஓராங் கானாக் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றினர். 1997-லிருந்து ஓராங் கானாக் பழங்குடியினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினர்.

சடங்கு

ஓராங் கானாக் பழங்குடி பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தால், அக்கம் பக்கம் உள்ளவர்கள் பெண்ணின் கணவரிடம் தகவலனுப்புவர். ஓராங் கானாக் பழங்குடியில் மூலிகை தேனீர் அருந்தும் வழக்கம் உள்ளது. இந்த வழக்கத்தில் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து குடும்ப நிகழ்வுகளைக் கலந்துரையாடுவர். ஓராங் பழங்குடியினர் புது வருடத்தைக் கொண்டாடுவர்.

திருமணம்

ஒராங் கானாக் பழங்குடியினர் தங்களது இனக்குழுவுடன் திருமணம் புரிந்து கொள்வர். ஓராங் கானாக் திருமணங்களில், பெண் பார்த்தல், பரிசம், திருமணம் எனும் மூன்று சடங்குகள் இருக்கும். ஓராங் கானாக் பழங்குடி தீபகற்ப மலேசியாவிலேயே மிகச் சிறிய பழங்குடி மக்கள் தொகையைக் கொண்டவர்கள்.

இறப்பு

ஓராங் கானாக் பழங்குடி சமூகத்தில் ஒருவர் இறந்தால், மற்றவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனால், இயற்கை பேரிடர்கள் நிகழாதென ஓராங் கானாக் பழங்குடியினர் நம்புகின்றனர். இறந்தவரின் குடும்பத்தார், இறந்தவரின் கல்லறைக்குப் பக்கத்தில் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நெருப்பேற்றுவர். இதனால், இறந்தவரைச் ‘சைத்தான்கள்’ தொந்தரவு செய்யாதென நம்புகின்றனர்.

பார்க்க: தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர்

உசாத்துணை


✅Finalised Page