under review

ஐயம் (கைக்கிளை)

From Tamil Wiki

ஐயம் கைக்கிளைத் திணை(புறம்) யின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. ஒரு பெண்ணின் அழகைக் கண்டு வியந்து, பின் அவள் யார், எத்தகையவள் என ஐயப்படுவது ஐயம்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கல் போன்ற தோள்களையுடையவன் அப்பெண்ணைக் கண்டபின் இன்னவள் என்று அறியமுடியாமல் ஐயப்படுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கல்நவில் தோளான் கண்டபின் அவளை
இன்னள் என்று உணரான் ஐயம் உற்றன்று(கொளு 14.2)

வெண்பா

தாமரைமேல் வைகிய தையல் கொல் தாழ்தளிரின்
காமருவும் வானோர்கள் காதலிகொல் - தேமொழி
மைஅமர் உண்கண் மடந்தைகண்
ஐயம் ஒழியாது ஆழும் என் நெஞ்சே (286)

பொருள்: (தலைவன் கூற்று) -தாமரையில் இருக்கும் திருமகளோ? செழித்த சோலைகள் நிறைந்த வானஉலகத்து மகளோ? இனிய குரலையும் மைதீட்டிய விழிகளையும் உடைய இப்பெண் யாரெனப் புலப்படாது ஐயத்தில் என் மனம் துயரத்தில் அழுந்துகின்றது

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jul-2025, 10:05:37 IST