under review

எஸ். முத்தையா

From Tamil Wiki

To read the article in English: S. Muthiah. ‎

எஸ். முத்தையா

எஸ். முத்தையா (ஏப்ரல் 13, 1930 - ஏப்ரல் 20, 2019) வரலாற்று எழுத்தாளர். இதழாளர். சென்னை நகரத்தை முதன்மையாகக் கொண்டு ஆய்வு செய்தவர்.

பிறப்பு, கல்வி

எஸ். முத்தையா சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் ஏப்ரல் 13, 1930 அன்று பிறந்தார். தந்தை சுப்பையா செட்டியார், அன்னை செட்டியாள் ஆச்சி. தந்தை சுப்பையா கொழும்புவில் மேயராக பணியாற்றினார். தனது பள்ளிப்படிப்பைக் கொழும்புவில் பயின்றார். அமெரிக்காவில் இளங்கலை அறிவியல் கட்டிடப் பொறியியலை (BSc civil engineering) பாஸ்டன் அருகிலுள்ள வூர்செஸ்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார் (Worcester Polytechnic Institute). கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில்(International affairs) M.A. பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1968-ம் ஆண்டு வள்ளியம்மையை மணந்தார். மகள்கள் ரஞ்சனி, பார்வதி. 1951-ம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரை தி டைம்ஸ் ஆஃப் சிலோன் பத்திரிகையில் பணியாற்றினார். அதன் வெளிநாட்டுத் தொடர்பு செய்தி ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக ஆனார். பின்னர் அதன் சண்டே டைம்ஸ் மற்றும் கிளை இதழ்களின் பொறுப்பாளராக இருந்தார். நியூஸ் க்ரோனிக்கல் ஆஃப் லண்டன், டெய்லி மெயில், தி அப்சர்வர், உள்ளிட்ட சில பத்திரிக்கைகளில் பணியாற்றி இருக்கிறார்.

1968-ம் ஆண்டு இந்தியா திரும்பி சென்னையில் வசிக்கலானார். சென்னை டி.டி.கே நிறுவனத்தில் மெட்ராஸ் நிலவரைபடத்தை (map) உருவாக்கும் பிரிவில் பொறுப்பேற்றார். சுற்றுலா புத்தகங்கள், நிலவரைபட ஏடுகளை(atlas) வெளியிட்டார். பின்னர் புகழ்பெற்ற வரைபடவியலாளராக (cartographer) அறியப்பட்டார்.

2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் டே, வார விழாக்களை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் எஸ். முத்தையாவும் ஒருவர்.

வரலாற்றெழுத்து

எஸ். முத்தையா சென்னையில் டி.டி.கே நிறுவனத்திற்காக நிலவரைபடம் தயாரிப்பதற்காக சென்னை தெருக்களில் அலைந்து திரிந்த போது சென்னை நகரத்தின் வரலாறு பற்றிய ஆர்வம் வந்ததாகச் சொல்கிறார். தன்னை வரலாற்றாய்வாளர் என்று சொல்வதை விட வரலாற்றெழுத்தாளர் (chronicler) என்றே சொல்ல வேண்டும் என்றார். அவர் ஏற்கனவே எழுதிய சென்னை நகரைப் பற்றிய ஆரம்பகாலப் பதிவுகள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் மெட்ராஸை பற்றி அவர் காணும் ஒவ்வொரு துண்டு தகவலையும் சேகரிப்பதாகச் சொல்கிறார்.

1981-ம் ஆண்டு Madras Discovery நூல் ஆங்கிலத்தில் வெளியாகியது. சென்னை பற்றிய தகவல்களை மேலும் சேகரித்து, ஒவ்வொரு முறை சென்னை மறுகண்டுபிடிப்பு நூலைப் பதிப்பிக்கும் போதும், நூலை மேலும் செம்மை செய்துகொண்டே இருந்தார். மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) என்ற பத்திரிகையை லோகவாணி-ஹால்மார்க் பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி, அதில் பல வரலாற்றுக் கட்டுரைகள் எழுதிவந்துள்ளார். தி இந்து பத்திரிகையிலும் மெட்ராஸ் மிஸ்ஸலெனி (Madras Miscellany) என்னும் தொடரை எழுதி புத்தகமாக 2011-ம் ஆண்டு வெளியிட்டார். மீனாட்சி மெய்யப்பன் மற்றும் விசாலாக்ஷி ராமசுவாமியுடன் இணைந்து செட்டியார் மரபு என்ற சித்திரநூலை எழுதியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் மாணவர்களுக்கு பல வருடங்கள் வகுப்புகளை நடத்தி இருக்கிறார். சென்னை நகரத்தை பற்றிய தகவல்களில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்துள்ளார். 25 ஆண்டுகள் அச்சுத்துறையிலும், பதிப்புத் துறையிலும் பணியாற்றினார். பல நிறுவனங்களுக்கு அச்சுத்துறையிலும், பதிப்புத்துறையிலும் ஆலோசகராக இருந்துள்ளார்.

இலக்கிய இடம்

எஸ். முத்தையா, சென்னை நகர வரலாற்றை முழுமையாகவும், முறையாகவும் எழுதியுள்ளார். ஒரு நகரத்தை மட்டுமே ஆய்வு செய்தவர்களில் முதன்மையானவர். சென்னை நகரில் வாழ்ந்த முக்கியமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். சென்னையில் உள்ள ஏராளமான பாரம்பரிய நினைவுச்சின்னங்களைக் காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளார். சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

விருதுகள்

  • பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவரது பணிக்காக இங்கிலாந்து ராணியால் அவருக்கு MBE விருது 1992-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • மார்ச் 7, 2002 அன்று, முத்தையா "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த நபர்களின் வரிசையில், சிவில் பிரிவின் கெளரவ உறுப்பினர்" ஆக்கப்பட்டார். சென்னையில் நடந்த விழாவில், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் மைக்கேல் ஹெர்ரிஜ் அவருக்கு இந்த விருதை வழங்கினார்."பிரிட்டிஷ் குடிமக்கள் அல்லாத ஆனால் பிரிட்டிஷ் இலட்சியங்களைப் பின்பற்றுபவர்களின் சேவைக்காக" இந்த விருது வழங்கப்பட்டது.

மறைவு

எஸ்.முத்தையா தனது 89-ம் வயதில் சென்னையில் ஏப்ரல் 20, 2019 அன்று மரணமடைந்தார்.

நூல்கள்

  • சென்னை மறுகண்டுபிடிப்பு, எஸ். முத்தையா, தமிழில்: சி. வி. கார்த்திக் நாராயணன், கிழக்கு பதிப்பகம் (2004).
  • Madras Discovered. East West Books (Madras) Pvt Ltd. (1981)
  • Tales of old and new Madras: the dalliance of Miss Mansell and 34 other stories of 350 years. East West Books (Madras) Pvt Ltd. (1989)
  • Madras, Chennai: a 400 year record of the first city of modern India, Vols. 1, 2 and 3, Association of British Scholars, Vol. 1 came out in 2008 and Vol. 3 in 2019.
  • Madras Miscellany: a decade of people, places and potpourri. East West. (2011)
  • The Anglo Indians, a 500 year history. Anthers: S. Muthiah and Harry Maclure, Niyogi Books. (2014)
  • The Chettiar heritage, Anthers: S. Muthiah; Meenakshi Meyappan; and Visalakshi Ramaswamy; Publisher: The Chettiar Heritage. (2006)

உசாத்துணை


✅Finalised Page