under review

எஸ்.ஏ. உதயன்

From Tamil Wiki
எஸ்.ஏ. உதயன்

எஸ்.ஏ. உதயன் (பிறப்பு: ஜனவரி 23,1964) ஈழத்து எழுத்தாளர். நாடக நடிகர், நாடக எழுத்தாளர், நெறியாளர், ஒப்பனைக் கலைஞர் என நாடகக்கலையின் பல்வேறு துறைகளிலும் நாற்பதாண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர்.

பிறப்பு - கல்வி

எஸ்.ஏ.உதயன் இலங்கை வடபகுதியின் மன்னார் மாவட்டத்தின் பேசாலை என்ற இடத்தைப் பிறப்பிடமாக் கொண்டவர். இவரது இயற்பெயர் ஏ.ஜே.கே.துரம். ஆரம்பக்கல்வியை மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் தமிழகத்தில் எல்லிஸ் ட்வுன் கூத்தன் பட்டறையில் நாடக அரங்காற்றுகையில் பட்டயப் படிப்பையும் நிறைவு செய்தார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நுண்கலைப்பிரிவில் ஆசிரியப் பயிற்சியை நிறைவுசெய்தார். மன்னார் துள்ளுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் தற்போது பிரதி அதிபராகக் (Deputy Correspondent) கடமையாற்றுகிறார்.

தனி வாழ்க்கை

எஸ்.ஏ.உதயன் 1983-ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரமான காலப்பகுதியை அடுத்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து 1986 முதல் 1990 வரை தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்தார். ஜனவரி 26,1986 அன்று ஜெயராணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்

ஈரோஸ் இயக்க வாழ்க்கை

1983-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை ஈழ புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) எஸ்.ஏ.உதயன் அங்கம் வகித்தார். ஈழப்போராளிகளுக்கு எண்பதுகளில் முற்பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதப்பயிற்சி குறித்த ஈரோஸ் அமைப்பின் சார்பிலான தனது அனுபவத்தை 'யுபி 83' என்ற நாவலாக எழுதினார்.

இலக்கியம்

கூத்து மரபின் வழியாக இலக்கியக் கூறுகளைக் கண்டடைந்து அதன் ஊடாக ஈழ எழுத்துக்கு அறிமுகமானவர் கே.எஸ். உதயன். இவர் எழுதிய முதலாவது நாவலான 'லோமியா' ஈழ இலக்கியத்திற்கு மன்னார் பிரதேசத்திலிருந்து பங்களிப்பான முதல் பிரதி. இது ஈழத்தின் நெய்தல் நில வாழ்வின் பரிணமாத்தை உள்ளபடியே பதிவு செய்த நாவல் என்றும் குறிப்பிடலாம். கே.எஸ். உதயனின் அனைத்து நாவல்களும் அவர் எதிர்கொண்ட வாழ்வின், தான் சார்ந்த மண்ணின் மக்களின், பண்பாட்டு கூறுகளின் களம் சார்ந்ததாவே அமைந்திருக்கின்றன. அவரது 'கப்பித்தான்' என்ற நாவல், மன்னார் பேசாலைப் பகுதியில் நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டுவரும் 'உடக்குபாஸ்' என்ற தனித்துவமான நாடகத்தைப் பற்றியது.

இலக்கிய இடம்

உதயனின் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், "எழுத்தை ஆளும் சக்தி கொண்டவர் எஸ்.ஏ. உதயன். தமிழில் எழுதி பிரபல்யமடைந்த கேரளக்காரரான ஆ.மாதவனுக்கு திருவனந்தபுரம் சாலை கம்போளக் கடைத்தெரு கணக்கு வழக்கின்றி கதைகள் கூறுகின்றது என்று விமர்சகர்கள் வியந்து கூறுவதுண்டு. அந்தக் கடைத்தெரு பற்றி அவர் எழுதிய கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டபோது, அதற்கு அவர் இட்ட பெயர் 'கடைத்தெரு கதைகள்" என்பதாகும். அதேபோல் மன்னார் மண்ணும் அதன் அரங்குகளும் உதயன் அவர்களுக்கு நிறையவே கதைகள் கூறுகின்றன. உதயனின் எழுத்துக்கள், அரங்காற்றுகைகளில் உள்ள உள் நிகழ்வுகளை - உள் நிர்பந்தங்களை - ஒவ்வொன்றாகப் பிரித்துக்காட்டி வாசகனை உள்ளீர்த்துக்கொள்பவை" என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012
நாவல்
  • லோமியா (நாவல்) - 2008 சாளரம் வெளியீடு - சென்னை.
  • தெம்மாடுகள் (நாவல்) - 2009 திருப்புமுனை வெளியீடு - மன்னார்.
  • வாசாப்பு (நாவல்) - 2010 திருமறைக் கலாமன்ற வெளியீடு - கொழும்பு.
  • சொடுதா - (நாவல்) - 2011 கலையருவி வெளியீடு - மன்னார்.
  • சங்குமுள்ளு - (நாவல்) - 2017 - சைபர் சிற்றி பதிப்பகம் - மன்னார்
  • உ.பி.83 (நாவல்) - 2018 - காக்கை சிறகினிலே பதிப்பகம் - சென்னை.
  • அலுவாக்கரை (நாவல்) - 2019 - கொடகே பதிப்பகம் - கொழும்பு
  • கப்பித்தான் - (நாவல்) - 2022- எதிர் பதிப்பகம் - சென்னை
மொழிபெயர்ப்புகள்

"லோமியா" நாவல் லீலா ரத்னவினால் 2010-ல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நிகழ்த்து கலைகள்

நாட்டுக்கூத்து, நாடகங்கள் உட்பட எண்பதுகளுக்கும் மேற்பட்ட நிகழ்த்து கலைகளை எழுதி அரங்கேற்றினார். 1983-ம் ஆண்டு காலப்பகுதியில் 'துயர இரவுகள்' - (கூத்துருவ நாடகம்), 'பாதை தெரியுது பார்' - (குறியீட்டு நாடகம்), 'ருத்ர தாண்டவம்'- (குறியீட்டு நாடகம்) போன்ற ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பாக பரப்புரை நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றினார். மன்னாரிலும் இலங்கையின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றிவருகிறார். 'விடிந்து விட்ட பொழுதினில்' என்ற இசைக் குறுவட்டினை வெளியிட்டார்.

விருதுகள்

  • ஆனந்த கீரித்திக - இலங்கையின் சிறந்த நாடக நெறியாளருக்கான விருது (1998)
  • லோமியா - 2008-ம் ஆண்டுக்கான சிறந்த நூல் இலக்கிய விருது - வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம். பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது. இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது.
  • "தெம்மாடுகள்" - 2009-ம் ஆண்டுக்கான சிறந்தநூல் இலக்கிய விருது - வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றது.
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது (வாசாப்புநாவலுக்காக)
  • இலங்கை அரசின் தேசிய சாஹித்திய விருது -2010 (சொடுதா), 2011 (வாசாப்பு), 2019 (அலுவாக்கரை)
  • தேசிய கலைஞர் விருது-இலங்கை அரசு (2013)
  • நற்புகழ் நாவற்கோன் விருது-தமிழ் தூது தனிநாயம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் (2013)
  • கொடகே தேசிய சாஹித்ய விருது -'சொடுதா' நாவலுக்கு (2012)
  • ஹரினா முஸ்தபா பேனா விருது -கிழக்கிலங்கை பேனா இலக்கியப் பேரவை சங்கு முள்ளு நாவலுக்காக (2013)

உசாத்துணை


✅Finalised Page