எண்களின் சிறப்பு: எண் 2
From Tamil Wiki
எண்ணிக்கையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 2 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.
எண் 2-ன் சிறப்புகள்
ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் இரண்டாவதாக வருவது 2. இரண்டு என்றும், இலக்கியங்களில் ‘இரு’, ‘இருமை’ என்றும் இவ்வெண் எடுத்தாளப்பட்டுள்ளது.
இலக்கியச் சிறப்புகள்
- இருமை – நன்மை, தீமை என இரண்டு வகைமையைக் குறிக்கும். (இருமை வகை தெரிந்து – குறள்)
- இரு திணை – உயர் திணை, அஃறிணை
- இரு நிதி – சங்க நிதி, பதும நிதி
- இருபான் – இரண்டு பத்து (இருபது)
- இருபது – இரண்டு பத்து
- இருபா இருபஃது – வெண்பாவும், அகவற்பாவும் மாறி மாறி வரும் சிற்றிலக்கிய வகை.
- இரு பிறப்பாளன் – அந்தணன்
- இரு புனல் – தேங்கும் நீர் மற்றும் ஓடும் நீர்
- இரு பூ - இரு போகம் (கன்னிப்பூ, கும்பப் பூ)
- இரு பொருள் – கல்வி, செல்வம்
- இரு பொழுது – காலை, மாலை
- இரு வழி – தாய் மற்றும் தந்தை வழி மரபு
- இரு மா – ஒரு பின்னம். பத்தில் ஒன்று 1/10
- இரு வினை – நல்வினை, தீவினை
- இரட்டை - இரண்டு
- இரட்டைக் கிளவி – இரண்டாக இணைந்து வந்தால் மட்டுமே பொருள் தரும் சொற்றொடர்.
- இரட்டை மணிமாலை – சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- இரட்டை விருத்தம் – பதினோரு சீர்க்கும் மேற்பட்ட சீர்களால் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
- இரண்டகம் – துரோகம்
- இரண்டாம் கட்டு – வீட்டின் இரண்டாம் பகுதி
- இரண்டுங் கெட்டான் – நன்மை, தீமை அறிய இயலாதவன்
- இரண்டு படுதல் – பிரிதல், பிளவு படுதல்.
ஆன்மிகச் சிறப்புகள்
- ஆத்மா = ஜீவாத்மா, பரமாத்மா என இரண்டு
- இதிகாசம் - இராமாயணம், மகாபாரதம் என இரண்டு
- இருமை – இம்மை, மறுமை என இரண்டு
- இரு கண் - ஊனக் கண், ஞானக் கண் என இரண்டு
- இரு சுடர் – சூரியன், சந்திரன் எனும் இரண்டு சுடர்கள்
- இரு வகை அறம் - இல்லறம், துறவறம்
- இருவகை வாசனை – நல் வாசனை, தீய வாசனை
உசாத்துணை
- நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017
✅Finalised Page