under review

உப்புவேலூர் ஆதிநாதர்கோயில்

From Tamil Wiki

To read the article in English: Uppuvelur Aadhinathar Temple. ‎

உப்புவேலூர் ஆதிநாதர் (நன்றி பத்மாராஜ்)

உப்புவேலூர் ஆதிநாதர்கோயில் (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் உப்புவேலூரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திண்டிவனத்திலிருந்து இருபத்து மூன்று கிலோமீட்டர் தென்கிழக்கிலுள்ள உப்புவேலூர் எனவும் வேலூர் என்றும் அழைக்கப்படும் இடத்தில் ஆதிநாதர்கோயில் உள்ளது

வரலாறு

பொ.யு. 15-ம் நூற்றாண்டிலிருந்தே உப்புவேலூர் சமண சமய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. தமிழகத்தில் சமணர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் கிராமங்களில் ஒன்று உப்புவேலூர்.

அமைப்பு

உப்புவேலூர் ஆதிநாதர்கோயில்

ஆதிநாதர் கோயில் முன்பு கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் பண்டைய கலையம்சங்களை இழந்தது. தற்போது இக்கோயில் நீண்ட மண்டபம் போன்ற அமைப்பிலும், இதன் பின்பகுதி கருவறையாகவும், நடுப்பகுதி அர்த்தமண்டபமாகவும், அடுத்துள்ள பகுதி மகாமண்டபமாகவும், முன்பகுதி முகமண்டபமாகவும் உள்ளது. கோயிலைப்போன்று திருச்சுற்றுமதிலும், கோபுரமும், அதனை ஒட்டி வடபுறம் அமைக்கப்பட்டுள்ள மண்டபமும் பலமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாகக் கோவில் புனரமைக்கப்பட்டது.

இக்கோயிலின் சில சிற்பங்களின் கலைப்பாணி, மெக்கன்சி சுவடிகளின் வாயிலாக ஆதிநாதர் கோயில் பொ.யு. 15-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை அறியலாம்.

சிற்பங்கள்

உப்புவேலூர் கோயில் சிற்பங்கள்

கோயிலின் கருவறையில் நான்கு அடி உயரத்தில், தியான கோலத்தில் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. பீடத்தின் அடிப்பகுதியில் இவரின் இலாஞ்சனையாகிய எருது சிறிய அளவில் உள்ளது. இந்த சிற்பத்தில் பிற திருவுருவங்களிலுள்ளவை போன்று அலங்காரப் பிரபையோ அல்லது முக்குடையோ காணப்படவில்லை. இச்சிற்பம் பொ.யு. 15-ம் நூற்றாண்டிற்குரிய கலைப்பாணியைக் கொண்டது. கருவறைக்கு அடுத்துள்ள மண்டபத்தின் வடக்குச்சுவரை ஒட்டி அழகு மிக்க தருமதேவி யக்ஷியின் சிற்பம் உள்ளது. தருமதேவியின் வலதுகாலுக்கருகில் இரு குழந்தைகளும், இணையாக இரண்டு சாமரம் வீசுவோர் சிற்பங்களும் உள்ளன. இத்தேவியின் தலைக்குப்பின்புறம் பிரபைக்குப் பதிலாக, மகுடத்தின் மேற்பகுதியில் மடல்களையுடைய கமுக மரத்தின் வடிவம் உள்ளது. இவை பொ.யு. 15-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் காணப்படும் சேத்திரப்பாலகர், ஜுவாலமாலினி தனியாகப் பீடத்தில் நிறுவப்பட்டுள்ள ரிஷபநாதர் முதலிய பிற சிற்பங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.

உப்புவேலூர் பாகுபலி சிலை

ஆலயத்திற்கு தென்கிழக்கு திசையில் அழகியவனத்தில் பாகுபலி திருவுருவம் சரவணபெலகுளாவில் உள்ளது போல் 18 அடி உயர மேடையில் 18 அடி உயர கற்சிலை நின்ற நிலையில் அண்மையில் அமைத்துள்ளனர். ஆண்டு தோறும் அச்சிலை நிறுவிய அன்று அவருக்கு அபிஷேகம் நடந்து வருகிறது .

செப்புத் திருமேனிகள்

ஆதிநாதர் கோயிலில் ஏராளமான செப்புத் திருமேனிகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆதிநாதர், மகாவீரர் பார்சுவநாதர், பாகுபலி, கணதரர், சதுர்விம்சதி தீர்த்தங்கரர்கள் தருமதேவி சர்வானயக்ஷன், பூரணபுட்கலை, தரணேந்திரன், ஜினவாணி, பத்மாவதி, ஜுவாலமாலினி ஆகியோரது படிமங்கள் குறிப்பிடத்தக்கவை. இவையனைத்தும் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வார்க்கப்பட்டவை.

கல்வெட்டுக்கள்

உப்புவேலூர் கோயில் தூண்

உப்பு வேலூரிலுள்ள கோயிலில் முன்பு ஏராளமான கல்வெட்டுக்கள் இருந்திருக்க வேண்டும். கோயில் பலமுறை கட்டப்பட்டிருப்பதால் சாசனங்கள் அழிந்திருக்கலாம். கல்வெட்டுத் துறையினர் 1919-ம் ஆண்டு இக்கோயிலின் வடபுறச்சுவரிலிருந்து ஒரு கல்வெட்டினைப் படியெடுத்துள்ளனர். இச்சாசனம் ஜெயசேனர் என்பவர் (18 அல்லது 19-ம் நூற்றாண்டில்) இக்கோயிலைப் புதுப்பித்ததாகக் கூறுகிறது.

கோபுரத்திற்கு வடக்கிலுள்ள மண்டபத்திலுள்ள தூண் ஒன்றின் அடிப்பகுதியிலும் கல்வெட்டொன்று காணப்படுகிறது. கிரந்தமும், தமிழும் கலந்த இந்த சாசனத்தின் முழுமை செய்தியினை அறிய முடியவில்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சாலிவாகன ஆண்டு பொ.யு. 1909-ம் வருடத்திற்குப் பொருந்தி வருவது. 1909-ம் ஆண்டு உப்பு வேலூரைச் சார்த்த சமுத்திரவிஜயநயினார், அய்யண்ண நயினார் இந்த மண்டபத்தைக் கட்டியிருக்க வேண்டும் அல்லது புதுப்பித்திருக்க வேண்டுமென இதன் மூலம் அறியலாம்.

கோயில் மண்டபத்தினுள் இடம் பெற்றிருக்கும் உலோகத் திருமேனிகளின் பீடங்கள் சிலவற்றில் அவற்றை அளித்தவர்களது பெயர்கள் உள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் பார்சுவநாதர் திருவுருவத்தின் பீடத்தில் 1932-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட செய்தி உள்ளது.

வீரசேனாச்சாரியர்

உப்புவேலூர் தர்மதேவி

சித்தாமூரில் முதன் முதலாக சமணமடத்தினை ஏற்படுத்திய பெருமை உப்புவேலூரைச் சார்ந்த துறவியருக்குரியது. உப்புவேலூரைச் சார்ந்த சமண சமய அறவோருள் முதன்மையானவர் வீரசேனாச்சாரியார். இவர் பொ.யு. 16-ம் நூற்றாண்டில் சித்தாமூர் மடத்தைத் தோற்றுவித்தார். செஞ்சிப்பகுதியை ஆட்சிபுரிந்த வேங்கடபதி என்னும் நாயக்கமன்னன் சமணசமயத்தவர்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால் சமணர் பெருமளவில் வேறு ஊர்களுக்குச் சென்றனர். வீரசேனாச்சாரியார் மட்டும் கர்நாடக மாநிலத்திலுள்ள சரவணபெலகுளாவிற்குச் சென்று சமண சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். செஞ்சிப்பகுதிக்குத் திரும்பி வந்து சித்தாமூரில் மடத்தினை நிறுவினார் என மெக்கன்சி சுவடித்தொகுப்பு கூறுகிறது.

வழிபாடு

தின பூஜையும், நந்தீஸ்வர தீப பூஜைகளும், விசேஷ கால பூஜைகளும் நடைபெறுகிறது. அக்ஷய திரிதியை அன்று ஆதிநாதரின் சிலைக்கு ஆலய வடகிழக்கு மூலையில் மதில் சுவரின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பாண்டுக சிலை மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து திருவீதியுலா செய்கின்றனர். காணும் பொங்கல், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page