இறங்கு குடிக் குன்றநாடன்
இறங்கு குடிக் குன்றநாடன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
இறங்கு குடிக் குன்றநாடன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இறங்கு குடி என்ற ஊரை சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
இறங்கு குடிக் குன்றநாடன் பாடிய பாடல் அகநானூறில் 215-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீடச் செல்லும் தலைவனை நினைத்து வருந்தும் தலைவியின் உள்ளக்குறிப்பை தோழி தலைவனுக்கு உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஆடவர் பொருளீட்டும் பொருட்டு நாடுகள் கடந்து செல்லும் பயண வழியின் கடுமை விவரிக்கப்பட்டுள்ளது.
- பொருளீட்டச் செல்லும் வழி அரைப்பாலை நிலமாகும். அவ்வழி செல்லும் வணிகர்களை அம்புகளால் தாக்கி கொன்று மறவர் அவர் தம் பொருட்களை கைப்பற்றிச் செல்வர். பாலைவன மறவரிடமிருந்து தற்காத்து கொள்ள வழிச் செல்பவர் கையில் வேலும் பாதுகாப்பு ஆயுதங்களையும் எடுத்து செல்வர்.
- மறவரால் தாக்கப்பட்டு கொலையுண்டவர்களின் பிணங்களை கழுகுகள் கூடி பிய்த்து தின்னும். அந்த இறைச்சியை ஆண் கழுகு பெண் கழுகுக்கு பகிர்ந்து கொடுக்கும். ஆளற்ற தனி நிலத்தில் இறப்போரின் பிணங்கள் பட்சிகளால் உண்ணப்படும் கொடுவழி செல்லல் வேண்டும்.
பாடல் நடை
அகநானூறு - 215
- திணை: பாலை
- கூற்று:செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது.
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 19:50:03 IST