ஆரெயில் உழிஞை
ஆரெயில் உழிஞை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. மறைந்து நின்று அம்புகளைச் செலுத்துவதற்கான ஏவறை (ஏ=அம்பு) போன்ற அமைப்புகளைப் பெற்றுள்ள பகைவரின் எயிலின் (கோட்டை மதில்) வலிமையைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தம்மை வணங்காத நொச்சியாரின் நீண்ட மதிலின் திண்மையை உழிஞையார் விதந்து (சிறப்பித்து) உரைப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வாஅள் மறவர் வணங்காதார்
நீஇள் மதிலின நிலை உரைத்தன்று (கொளு 6.11)
வெண்பா
மயில் கணத்து அன்னார் மகிழ் தேறல் ஊட்ட
கயில் கழலார் கண்களால் பூப்ப - எயில் கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி அரிதரோ
மாயப் போர் பன்னன் மதில் (105)
பொருள்: நொச்சி வேந்தனின் மதில் ஏவறை முதலிய வஞ்சனையான அமைப்புகளை உடையது. இவர்கள் மதிலை, நம் உழிஞை மறவர்கள் கண்களில் தீப்பறக்கச் சினந்து, எயிலிடத்துள்ள நொச்சியார் மாயும் வண்ணம் போரினைச் செய்தாலும், நாம் வெற்றி காண்பது அரிதாகும் என்கின்றனர் உழிஞையாரின் ஒற்றர்கள்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jun-2025, 10:51:06 IST