ஆனந்தம்(பொதுவியல் திணை)
ஆனந்தம் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. போருக்குச் சென்ற கணவனின் நிலை என்னாகுமோ என மனைவி அஞ்சுவதையும், விழுப்புண்பட்டிருந்த தன் கணவனைப் பேணி வரும் பெண் தீ நிமித்தம் தோன்றக் கண்டு அஞ்சிநடுங்குவதையும் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் இருகொளுப்பாடல்கள் இதன் இலக்கணத்தை வகுக்கின்றன.
கொளு 1
மூங்கில் தோள்களையுடையாள் நற்சொல்லும் சகுனமும் மாறுபட அஞ்சி நடுக்கமுறுதல்.
ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்
வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று (கொளு 11.11)
வெண்பா
இன்னா சொகினம் இசையா விரிச்சியும்
அன்னா வலம்வரும் என் ஆர்உயிரும் - என்னாம்கொல்
தொக்கு ஆர் மறமன்னர் தோல் துடிகறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு (264)
பொருள்: அரசர் ஆரவாரிக்க, கொடிய போரிடத்தே பகைவரைத் தடுத்து நின்ற இவனின் சந்தனம் நனைந்த மார்பிடத்தே, ஆழ்ந்த வாயினையுடைய புண்கள் ஆறாவாயின, நிமித்தமும் பொருந்தவில்லை. நற்சொல்லும் கலங்கியிருந்தது; இனி, இப்பேதையின் நிலை என்னாகும்? அவன் இறக்க அவளும் உடன் சாவாள்' என்பது இரங்கியோரின் குறிப்பு.
கொளு 2
பெரும் போருக்குச் சென்ற கணவன் நிலை என்னாகுமோ? என மனைவி கவலைப்படுவது.
தவப் பெரிய வெஞ்சமம் குறுகும்
அவர்க்கு இரங்கினும் அத்துறை ஆகும் (கொளு 11.12)
வெண்பா
வேந்தார்ப்ப வேல் அழுவம் தாங்கினான்
சாந்தார் அகலத்துத் தாழ்வடுப்புண் - தாம்தணியா
மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும்
என்னாம் கொல் பேதை இனி (265)
பொருள்: அன்னையே! திரண்டு வந்தாரான பகைவேந்தரது வெல்லும் துடிப்பறையும் ஒலி முழங்க, நம் தலைவனும் அவரொடு போரிடற்குக் களத்திடத்தே புகுந்தான்; நிமித்தமும் சரியில்லை. ; நற்சொல்லும் பொருந்துவனவாக அல்ல; என்னுடைய உயிரும் சுழல்கின்றது; இனி என்னவாகுமோ? -
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:54:33 IST