under review

அவ்வைச் சித்தர்

From Tamil Wiki
அவ்வைச் சித்தர் கோவில் (கன்னியாகுமரி)

அவ்வைச் சித்தர் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) கன்னியாகுமரியில் வாழ்ந்த ஒரு சித்தர். விநாயகர் அகவல், ஒளவைக்குறள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

அவ்வைச் சித்தர் பொ.யு. 14-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோவாளை தாலுகாவில் வாழ்ந்தார். தோவாளை தாலுகாவில் உள்ள ஈசாந்திமங்கலம், குறத்தியறை, தாழக்குடி, ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களில் அவர் வாழ்ந்திருக்காலம் என்று அறிஞர்கள் கருதினர்.

ஆன்மிக வாழ்க்கை

சித்தர்களுக்கே உரிய அற்புதங்களைச் செய்தவராக அவ்வைச் சித்தர் கருதப்படுகிறார். நாஞ்சில் நாட்டில் நாடோடியாக வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

விநாயகர் அகவல், ஔவைக் குறள்ஆகியவற்றை பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் பாடினார். தமக்கு முன் வாழ்ந்த சித்தர் பலரின் தத்துவங்களை யோக ரகசியங்களை அவற்றின் பயிற்சி முறைக்கான கல்வியை, அப்பயிற்சிக்கான நிலைக்களமாக உள்ள உடலின் கூறுகளை ஆராயும் ஒளவைக்குறளை எழுதினார். இதில் "கள்ள", "தூராதிதூரம்", "நான்ற" (நாண்டுகிட்டு), "அரைஞான்" போன்ற சொற்கள் நாஞ்சில் நாட்டுக்கேயுரிய சொற்களாக அறிஞர்கள் கருதினர்.

சமாதி

நாஞ்சில் நாட்டின் தாழக்குடிக்கு அருகில் அவ்வைச் சித்தர் முக்தி பெற்றார்.

ஒளவை கோவில்

  • ஒளவை முக்தியடைந்ததாகச் சொல்லப்படும் தாழக்குடியில் ஒளவையாரம்மன் கோவில் உள்ளது. இது நாகர்கோவிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
  • ஆரல்வாய்மொழிக்கு அருகே முப்பந்தல் என்னும் ஊரில் இசக்கியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் ஒளவையின் திருவுருவச் சிலை உள்ளது.
  • நாகர்கோவிலுக்கு அருகே உள்ள குறத்தி கோயிலில் ஒளவை குகைக்கோயில் ஒன்று உள்ளது.

வழிபாடு

அவ்வைச்சித்தர் வாழ்ந்த நாஞ்சில் நாட்டில் ஆடி, தை, மாசி ஆகிய தமிழ் மாதங்களில் செவ்வாய்கிழமை அவ்வையார் அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதி கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பெண்கள் மட்டுமே மேற்கொள்கிற 'ஒளவை நோன்பு' கொண்டாடப்படுகிறது.

ஒளவையார் பிள்ளை, ஒளவையாரப்பன், ஒளவையாரம்மன் ஆகிய பெயர்கள் நாகர்கோவில் பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:39:42 IST