under review

கபிலர் (பாட்டியல் புலவர்)

From Tamil Wiki
Revision as of 08:11, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kapilar (Paatiyal Pulavar). ‎


கபிலர் (பாட்டியல் புலவர்) (பொ.யு. 2-3-ம் நூற்றாண்டு) பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் நூல்கள் பாட்டியல்கள். பன்னிரண்டு பாட்டியல் நூல்களை பன்னிரு பாட்டியல் என்னும் நூலாக பிற்காலத்தில் தொகுத்துள்ளனர். அவற்றில் உள்ள இலக்கண ஆசிரியர்களில் ஒருவர் பாட்டியல் புலவர் கபிலர். இவர் சங்ககாலப் புலவர் கபிலர் அல்ல.

(பார்க்க கபிலர்கள் )

பன்னிரு பாட்டியல்

பன்னிரு பாட்டியல் பன்னிரு பாட்டியல் (பொ.யு 9-ம் நூற்றாண்டு) பாடல் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் இது. பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்வகையின் இலக்கணத்தைக் கற்பிக்கும் இலக்கணத்துறை.

ஆசிரியர்

பன்னிரு பாட்டியலில் சொல்லப்படும் முதல்நூல்களை இயற்றியவர்கள் அகத்தியர்,அவிநயனார்,இந்திரகாளியார்,கபிலர்,கல்லாடர்,கோவூர் கிழார்,சீத்தலையார்,செயிற்றியனார்,சேந்தம் பூதனார்,நற்றத்தனார்,பரணர்,பல்காயனார்,பெருங்குன்றூர்க் கிழார்,பொய்கையார்,மாபூதனார் என்னும் 15 புலவர்கள். இவர்களில் நான்காவதாக குறிப்பிடப்படுபவர் கபிலர்.

இந்தக் கபிலர் பிற்காலத்தவர் என்று எஸ். வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். (தமிழ்ச் சுடர்மணிகள்) பாட்டியல் நூல்களே சங்க காலத்துக்குப் பின்னர் சிற்றிலக்கியங்களின் காலம் உருவான பிறகு சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. இப்பட்டியலில் உள்ள பெரும்பாலான பெயர்கள் சங்ககாலப் புலவர்களுடையவை. சங்ககாலப் புலவர் பெயர்களை அவர்களின் வழிவந்தவர்கள் சூட்டிக்கொள்ளும் மரபு இருந்திருக்கலாம். அவர்கள் ஓர் ஆசிரிய மரபாக நீடிக்க, அவர்களின் மாணவர்கள் அப்பெயரால் அறியப்பட்டிருக்கலாம். அல்லது இலக்கணநூல்களுக்கு அறிஞர் நடுவே மதிப்பு உருவாகும்பொருட்டு பெரும்புலவர்களின் பெயர்கள் அளிக்கப்பட்டிருக்கலாம். பன்னிரு பாட்டியல் எனும் நூல் முன்பிருந்து அழிந்துபட்ட இலக்கணநூல்களை எஞ்சிய ஏட்டுச்சுவடிகளில் இருந்து பெயர்த்து எழுதி உருவாக்கப்பட்டது. பெயர்த்தெழுதுவதில் பெயர்கள் தவறாகச் சேர்க்கப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

பாடல்கள்

பன்னிரு பாட்டியலில் கபிலர் பாடிய நூலிலிருந்து 24 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை

  • எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ்ச்சுடர்மணிகள்


✅Finalised Page