under review

அழிசி பதிப்பகம்

From Tamil Wiki
Revision as of 09:52, 10 October 2022 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அழிசி பதிப்பகம்

அழிசி பதிப்பகம் (2017) திருநெல்வேலியில் அமைந்துள்ள பதிப்பகம். ஸ்ரீநிவாச கோபாலன் இதன் உரிமையாளர். முதன்மையாக இது அச்சில் இல்லாத பழைய நூல்களை மீட்டு அச்சிட்டு வருகிறது.

தொடக்கம்

அழிசி பதிப்பகத்தை ஸ்ரீநிவாச கோபாலன் மின்னூல் வெளியீடாக மார்ச் 2017-ல் தொடங்கினார். மின்னூலாக எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் 'அங்கே இப்ப என்ன நேரம்?' முதல் வெளியீடாக வந்தது. 2021 முதல் அச்சு நூல்கள் வெளிவருகின்றன. அச்சு நூலில் முதல் வெளியீடாக மதாரின் 'வெயில் பறந்தது' கவிதைத் தொகுப்பு வந்தது. மெய்ப்பு நோக்குதல், அட்டை வடிவமைப்பு என பதிப்பு சார்ந்த அனைத்து வேலைகளையும் ஸ்ரீநிவாச கோபாலன் செய்கிறார். செப்டம்பர் 29, 2021-ல் சி.சு. செல்லப்பாவின் பிறந்தநாளில் 112 'எழுத்து' இதழ்களை மின்னூலாக்கும் பணியை ஆரம்பித்து தொடர்ந்து செய்து வருகிறார்.

ஸ்ரீநிவாச கோபாலன்

நோக்கம்

  • நெடுங்காலமாக மறுபதிப்பு காணாத அரிய நூல்களை மீண்டும் பதிப்பிப்பது.

நான் கண்ட மகாத்மா 1951-க்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. திருச்சி ஜெயில், நாரத ராமாயணம் இரண்டும் ஏற்கெனவே மறுபதிப்பு கண்டவை என்றாலும் அந்த மறுபதிப்புகளில் முன்னுரை, பதிப்புரை, இணைப்புகள் முதலியவை விடுபட்டிருந்தன. இந்த இரு நூல்களுக்கும் முதல் பதிப்பை அடியொற்றி அமைந்த முழுமையான மறுபதிப்பு அழிசி வெளியிட்டிருக்கிறது.

  • இலக்கிய முன்னோடிகளின் நூல் வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவது.

ராணிதிலக் தொகுத்த க.நா.சு.வின் இதுவரை நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் 'விசிறி' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. எழுபதுகளில் சிற்றிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிய நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் முதல் முறையாக 'வாசிகள்' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாரத ராமாயணம் (முதல் பதிப்பு 1955), நான் கண்ட மகாத்மா (முதல் பதிப்பு 1951), திருச்சி ஜெயில் (முதல் பதிப்பு 1941), அங்கே இப்ப என்ன நேரம்? (முதல் பதிப்பு 2004), விமரிசனக்கலை (முதல் பதிப்பு 1959), காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (முதல் பதிப்பு 2020) ஆகியவை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநிவாச கோபாலன்

விருது

  • 2021-ஆம் ஆண்டிற்கான முகம் விருது ஸ்ரீநிவாச கோபாலனுக்கு பழந்தமிழ் நூல்களை பதிப்பித்தமைக்காக அளிக்கப்பட்டது.

இணைப்புகள்


✅Finalised Page